வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

ஈழ விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது? - மு.திருநாவுக்கரசு

 

13/8/2025 

 "உன்னை நீ கைவிட்டு விட்டால், உன்னைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது"--- பிரெஞ்சுப் பழமொழி.



உன்னை  நோக்கி பிறரைத் திரும்பிப் பார்க்கச் செய்ய வேண்டுமானால் நீ உரத்து சத்தமிட வேண்டும். ஒரு பச்சைக் குழந்தைகூட தன்னருகே யாரும் துணைக்கில்லை என்றால் அழுது, கத்தி யாரையும் தன்பால் ஈர்த்துவிடும். 

இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாய் இனப்படுகொலைக்கு நீதிகேட்டுப் போராடாதிருக்கும் நிலையில் உரியவனும் பாரான்; அடுத்தவனும் பாரான்; அண்டை நாடும் பாராது ; வெளிநாடுகளும் பாராது. உனக்கு யாரும் கை கொடுக்க வேண்டுமாயின் நீ கை தூக்க வேண்டும். களத்தில் போராடுவதன்  மூலம் மட்டுமே உள்ளும், புறமும் கவனத்தை ஈர்த்து ஜனநாயகப்  போராட்டக்  கொடியைச் சர்வதேசத் தளத்தில் நிறுத்த முடியும். 


தக்கன மட்டுமே உயிர் வாழுமா ?

"Only the fittest will survive' அதாவது "தக்கன மட்டுமே பிழைத்து உயிர் வாழும்" என்பது உயிர் வாழ்க்கை பற்றிய சுயநலக் கோட்பாடு ஆகும்.

அதாவது இங்கு காணப்படும் பாதகமான சூழல் என்பது ஒன்று. எதிர்மறையாக இருக்கும் அந்தச் சூழலையும், தன்னையும் இணைத்து, அதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு, சூழலை தனக்குப் பொருத்தமாகக் கையாள தெரிந்தவை தான் பாதகமான சூழலிருந்து தப்பி உயிர் வாழும் வாயப்பைப் பெறும் என்பதே இதன் பொருள்.  

இந்த உயிரியல் டார்வினிசக் கோட்பாட்டை, சமூக அல்லது அரசியல் டார்வினிசமாகக் பார்க்கும்போது அதை தலைமைத்துவப் பண்புடன், சமூக நோக்குடன் கூடிய வகையிற் கையாள வேண்டும். உயிரியல் டார்வினிசத்தில் அந்த உயிருக்கு, சுயநல உயிரியல் மரபணு (selfish gene), இயல்பாக இயற்கைத் தேர்வின் படி(Natural selection) சுயநலமாக தன்னை காத்துக் கொள்ளும் தன்மையை வழங்குகிறது. 

மனிதனும் உயிர் என்ற வகையில் சுயநல மரபணுவைக் கொண்டவனே. ஆனாலும், அவனே பலருடன் கூட்டு சேர்ந்து ஒரு சமூகமாக வாழும் போது  அங்கு மேலதிகமாகத் தலைமைத்துவ ஆளுமையும், குழு நன்மையும் முதன்மையாகிறது. இந்த வகையில் உயிரியல் டார்வினிசத்திலிருந்து சமூகவியல்  டார்வினிசம்  குறிப்பிடக்கூடிய அளவுக்குத் தெளிவான ஆளுமைப் பரிமாண வேறுபாட்டைக் கொண்டுள்ளது. 

ஒரு சமூகப் பரிமாணத்தைக் கட்டமைப்புச் செய்து முன்னெடுக்கும் விதத்தில் தவறுகள் இழைக்கப்பட்டால், அந்தச் சமூகம் நல்ல தலைமையின்றி, தக்க தேர்வுகளின்றி, வழிகாட்டுதலின்றித் தேய்ந்து போய்விடும் அல்லது அழிந்து போய்விடும். 

இலங்கை சமூகத்தில் காணப்படும் வரையறுக்கப்பட்ட தலைமைத்துவத்திற்கு அப்பால், மதி நுண்ணறிவும், முன்னறிவும் கொண்ட, அளவால் பெரிய ஓரினம் (சிங்கள இனம்), அளவாற் சிறிய இனங்களின் மீது ஒடுக்குமுறையான தலைமைத்துவ ஆதிக்கத்தைச் செலுத்துவதன் மூலம் சிறிய இனங்களின் தெரிவு சுருங்கும், பாதிப்புக்குள்ளாகும், சீரழிவுக்கு உள்ளாகும். இத்தகைய விழுங்கும் ஆதிக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, அளவில் சிறிய இனமான ஈழத் தமிழர்கள் அதிகம் தலைமைத்துவப் பண்புடனும், முனைப்புடனும்  செயல்பட்டால் மட்டுமே, காணப்படும் சமூக சூழல் யதார்த்தத்தில் இலங்கைத் தீவில் தம்மைத் தக்க வைக்க முடியும்.

மனிதனும் ஏனைய பிராணிகள் போல ஓர் உயிர் என்பதால்  உயிரியல் டார்வினிசத்திலுள்ள பொதுத்தன்மைகள்  மனிதனுக்கும்  உண்டேயானாலும், உயிரினங்களில் அதிக நுண்ணறிவு கொண்டு மனிதன் ஒரு அறிவார்ந்த சமூகமாகத் தன்னைக் கட்டமைப்பதில் வேறுபட்ட ஆளுமை அளவுகளைப் பிரயோகிக்க முடிகிறது. தான் உயிர்வாழ வேண்டும் என்கிற சுயநலமானது, தான் சார்ந்துள்ள சமூகம் வாழவேண்டும் என்கிற சமூக சுயநலமாக உருமாறுகிறது. 

தங்களுக்கான ஒரு அரசை கொண்டுள்ள, அளவில் பெரிய, சிங்கள சமூகத்துடன், அரசற்ற, அளவில் சிறியதான  தமிழ்ச் சமூகம், தலைமைத்துவ ஆளுமையில் தக்க முனைப்பைக் காட்டத் தவறினால் அந்தச் சமூகம் தன் வாழ்நிலையை இழந்துபோக நேரும். 


ஈழத் தமிழரின் கூழ்முட்டை நிலை

இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தம்மை தமிழர் என்ற உட்சமூக ரீதியாகவும், இலங்கை என்ற உள்நாட்டு ரீதியாகவும், அண்டை நாடு,  வெளிநாடுகள், சர்வதேச சமூகம் , உலகளாவிய அரசியல் நிலை  போன்ற காணப்படும் அனைத்துப் புறநிலை யதார்த்தங்களுக்கும் பொருத்தமான செயல்பாட்டை, தமக்கான தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டும்.  

அந்தவகையில் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலான அரசியற் சூழலில், ஈழத்தமிழர் நிலையானது அழுகிச் சிதைந்து போன கூழ்முட்டை (Rotten agg) நிலையையே ஒத்துள்ளது.

மேற்படி நடப்புநிலையை, உள்ளூர், உள்நாட்டு, வெளிநாட்டு, உலகளாவிய அரசியல் யதார்த்தங்களை உள்வாங்கி, இப்போது ஒரு புதிய வகையில் தமிழ்த் தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டுமென்று இக்கட்டுரை தமிழ் மக்களை வேண்டி நிற்கின்றது.

ஏறக்குறைய 1970 களின்  பிற்பகுதியளவில் ஒற்றை உள்ளூர்த் துப்பாக்கியுடன் ஆரம்பமான ஆயுதப் போராட்டம் தரைப்படை ,கடற்படை, பீரங்கிப்படை, விமானப்படை , சர்வதேச சரக்கு கப்பல் அணியென  வளர்ந்த நிலையில் இருந்து, பின்பு கோட்டை கொத்தளங்களெல்லாம் முற்றிலும் அழிந்து போய் , போராட குண்டூசி கூட இல்லாத நிலையை ஆயுதப் போராட்டம் அடைந்துள்ளது.   

ஆனால் 1979 ஆண்டு 10 ஆயிரத்துக்குட்பட்ட படையினருடன் ஒரு பிரிகேடியரைத் தலைமைத் தளபதியாகக் கொண்டிருந்த இலங்கை அரசின் ராணுவம், இன்று அதிநவீன ஆயுதங்களுடன்  கூடிய வகையில் 3 லட்சத்து 46 ஆயிரம் படையினருடன் காணப்படுகிறது.  

நாடாளுமன்ற அரசியலில் 21 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று சிதைந்து, சுக்குநூறாகி  தமிழரசுக் கட்சி எட்டு உறுப்பினர்களையும், சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஒரு உறுப்பினரையும் , இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி  ஒரு உறுப்பினரையும் பெற்று பாதிக்கும் கீழ் சுருங்கிக் கிடக்கிறது.  மேலும் சிறு சிறு அரசியல் குழுக்களாக பிரிந்து கொண்டும், ஒற்றுமையின்றி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டும், சிங்களனின் கைக்கூலிகளகவும், சனநாயகப் பண்பற்றுச் சீரழிந்து சின்னாபின்னப்பட்டுக் கிடக்கிறது.   


இனப்படுகொலைக்கான நீதியே நம் புதிய ஆயுதம்

2001 ஆம் ஆண்டு  அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதல், உலகெங்கும் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய போராட்ட அமைப்புக்களின் முதுகெலும்பை உடைக்க வழிவகுத்த போதிலும், அதுவே உலகெங்கும் வெகுஜன மக்கள் திரண்டெழுந்த போராட்ட அலைகள் எழும்புவதற்கு ஏதுவாகவும் அமைந்தது.

எனவே மக்கள் திரளின் ஜனநாயகப் போராட்ட அலையெனும் ஓராயுதம் உலகரங்கில் முதன்மை பெறத் தொடங்கியது. பறிக்கப்பட்ட வெடிகுண்டு, துப்பாக்கி ஆயுதங்களுக்குப் பதிலாக மக்கள் திரளெனும் ஓராயுதம் மக்கள் சனநாயகக் கிளர்ச்சியாய் வடிவம் பெற்றது . 

சிங்கள இராணுவம் 2009ல் இறுதிக் கட்டப் போரில் ஒரு லட்சம் தமிழர்களை கொன்றது.  முள்ளிவாய்க்காலில் மட்டும் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்தது. சுமார் 3 லட்சம் அப்பாவித் தமிழர்களை கொன்றொழித்த அந்த இனவழிப்போடு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் முடிந்து போகவில்லை. புதிய வகையில் தொடங்கியது. அங்கு அரச இராணுவம் தனது இராணுவச் சூளையில் இனப்படுகொலைக்கான நீதியென்னும் மிகக் கூரியதோர் ஆயுதத்தை உற்பத்தி செய்து தந்தது. 

முள்ளிவாய்க்காலில் பறிபோன லட்சக்கணக்கான உயிர்கள், துப்பாக்கி -- வெடிகுண்டு ஆயுதங்களுக்குப் பதிலாக, மக்கள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டதன் வாயிலாக, இனப்படுகொலைக்கான நீதி என்னும் மிகப் பலம் வாய்ந்த ஜனநாயக ஆயுதம் தமிழ் மக்கள் கைக்குக் கிடைத்திருக்கிறது. இன்றோ, நாளையோ, என்றோ ஒரு நாள் லட்சக்கணக்கான மக்களின் இனப்படுகொலைக்கான நியாயம் வழங்கப்பட்டே ஆகவேண்டும். இது தான் மக்கள் அரசியலில் நேரடியாக பங்குபெறும்,  ஜனநாயகம் நிறைந்திருக்கும், இந்த உலக அரசியலில் உருவாகியுள்ள நியதி. அரசுகளாலும் அதிகாரங்களாலும் அநீதிகள் எப்படித்தான் மூடி மறைத்து வைக்கப்பட்டாலும் ஈழத் தமிழருக்கும் அப்படி ஒரு நியாயம் ஒரு நாள் வழங்கப்பட்டே ஆகவேண்டும். 


இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் போராட்டக் குரலை உலகெங்கும் கொண்டு செல்வோம்
இந்த வகையில் இனப்படுகொலைக்கு நீதி என்ற ஜனநாயக ஆயுதத்தை முதலீடாகக் கொண்டு தமிழ்மக்கள் தமது அரசியற் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்று 2016 ஆம் ஆண்டு இக்கட்டுரையாசிரியரால்  எழுதப்பட்ட "  டொனமூர் முதல் சிறிசேன வரையான உத்தேச அரசியல் யாப்பு" என்ற நூலில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. அந்நூல் வெளியிட்டு விழாவில் தமிழரசு , தமிழ்க் கொங்கிரஸ் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், பல்கலைக்கழக அறிஞர்களும், ஊடகவியலாளர்களும் உரையாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது ஈழத் தமிழர்களின் குறைந்தபட்ச உரிமைகளுக்கான போராட்டங்களைக் கூட முடிக்கப்பட்ட இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. 

இலங்கையில் நடைமுறையிலுள்ள நாடாளுமன்ற மரபின் அரசியற்பாதை, இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அதை மேலும் மேலும் வளர்க்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை, 1833 ஆண்டு நடைமுறைக்குவந்த  கோல்புறூக் யாப்பு நடைமுறையிலிருந்து இன்றைய (2025) ஆட்சியாளர்களின் யாப்பு நடைமுறை வரை வெள்ளிடை மலையெனத் தெரிந்து கொள்ளலாம்.   

தமிழ்த் தலைவர்கள், குறிப்பாக சோல்பரி அரசியல் யாப்பை ஒட்டிய காலத்தில், 14 மணி நேரம் இலங்கை நாடாளுமன்றத்தில் மூச்சுவிடாமல் பேசியும் பயனில்லை. தற்போதும், எந்தவித பெரும்பான்மையும் இல்லாத நிலையிலும் கூட, இதே நாடாளுமன்றத்தில்  திரைப்படப் பாணியில் 14 நிமிடங்கள் அங்கிங்குமாய் காலை ஆட்டி, கையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, கண்ணை  உருட்டி, தொண்டை வற்றப் பேசியும் எந்த பயனும் தமிழருக்குக் கிடைக்கவில்லை. கிடைக்கவும் கிடைக்காது.   

நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தமக்கான மக்கள் ஆதரவை உள்ளும், புறமும் நிரூபிப்பது சரி. அதை விடுத்து, நாடாளுமன்றத்தில் பேச்சுப் போட்டிகள் நடத்தி தமிழர் எதனையும் சாதிக்க முடியாது. மாறாக நாடாளுமன்றத்தை உள்ளும், புறமும் போர்க்களமாக மாற்றவல்ல திட்டங்களையும், வியூகங்களையும் வகுத்து, அதற்கு ஊடாக போராட்டத்தை நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும்,  உலக அரங்கிலும் எடுத்துச் செல்ல வேண்டும்.  இதற்கான வியூகங்கள் வகுக்கப் பல வழிகளுண்டு. இந்த ஜனநாயக வியூகங்களைப் பற்றிப் பின்பொரு தனிக் கட்டுரையில் ஆராய்வோம். இப்போது போராட்டத்துக்கான முதற் திட்டத்தை வரையறை செய்வோம். 

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளும், புறமும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இலங்கை, இந்தியா தவிர  மேலும் 31 நாடுகளில் அந்த தடை பட்டியல் நீள்கிறது. ஆயுதப் போராட்டம் என்ற பேச்சுக்கே உள்ளும், புறமும் இடமில்லை. ஆனால் இனப் படுகொலைக்கெதிரான போராட்டக் குரலை மனிதநேயத்தின் அடிப்படையில் ஜனநாயக அமைப்புகளின் மூலம் உலகெங்கும் நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

அத்தகைய ஜனநாயக போராட்டக் குரலை தமிழகத்திலிருந்தும் எழுப்பி முன்னெடுக்கலாம், முழு இந்தியாவிலும் முன்னெடுக்கலாம், அமெரிக்காவிலும் முன்னெடுக்கலாம், ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும் முன்னெடுக்கலாம், உலகின் ஏனைய நாடுகளிலும் முன்னெடுக்கலாம். அது எதிரிக்கும், தமிழர் உரிமைகளை அழிக்க முயலும் வேறு வெளிச்சக்திகளுக்கும், எதிரான ஒரு பலம் வாய்ந்த ஆயுதமாக உருமாறும். சமீபத்தில் கண்டிறியப்பட்ட செம்மணிப் புதைகுழியும் இந்த போராட்டக் குரலுக்கு வலு சேர்க்கிறது. செம்மணிப் புதைகுழிகள்.


செம்மணிப் படுகொலைப் புதைகுழிகள் 

1998 ஆம் ஆண்டில், சிங்கள இராணுவ வீரர் ஒருவர், கிருசாந்தி குமாரசாமி என்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டபோது, சிங்கள ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலைகளைப் பற்றி வெளிப்படுத்தினார். 1996ல் இலங்கை ராணுவத்தினரால் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டபோது 400க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை பிடித்து சித்திரவதை செய்து, கொல்லப்பட்டு, உடல்கள் இந்தப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக தெரிவிததார். இலங்கை அரசு அந்த வீரரை தொடர்ந்து பேசவிடாமல் செய்ததோடு தோண்டப்பட்ட இடங்களிலும் குளறுபடிகள் செய்து 2006 க்குப் பின் அவ்விடயத்தை சர்வதேச சமூகத்தின் பார்வையிலிருந்து விலக்கி நீர்த்துப் போகச் செய்துவிட்டது.

கடந்த பிப்ரவரி 2025ல், இலங்கை செம்மணி இந்து மயானத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்காக நிலம் தோண்டப்பட்டபோது மனித எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன. மீண்டும் சர்வதேச அழுத்தம் இலங்கை அரசை நோக்கி வந்த நிலையில், அகழாய்வுப் பணி ஐநா சபையின் மேற்பார்வையில் தொடங்கியபோது, இன்னும் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. 

2025, கடந்த ஜூலை மாதத்தில், 65க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் ஒரு புதைகுழியில் கிடைத்தன. இதில் குறைந்தது மூன்று குழந்தைகளின் எலும்புகள் என்பது உறுதி செய்ப்பட்டது. ஒரு குழந்தை தனது தாயை கட்டிஅணைத்தபடியும், இன்னொரு குழந்தை பள்ளிக்கூட பையுடனும் இருந்தது. புதைத்த குழந்தைகளின் உடல்களோடு அவர்களது விளையாட்டுப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டது.  சில எலும்புக்கூடுகளில் துப்பாக்கிக் குண்டுத் துளைத்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன. இந்த காட்சிகள் என்பது இலங்கையில் அப்பாவிகள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டதை தெளிவாகக் காட்டும் வகையில் உள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு தற்போது உலகை மீண்டும் அதிர வைத்துள்ளது. தமிழர்களை மீண்டும் உலுக்கி உள்ளது.

குறிப்பாக 1958 ஆம் ஆண்டிலிருந்து கறுப்பு யூலை வரையும் அதன் பின்பும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்து மனிதப் படுகொலைகளும் தொடர்பான நீதி கோரல்களும், அவற்றை மறைக்க இலங்கை அரசு செய்த நிர்வாக நடவடிக்கைகளும் தமிழரின் நீதி கோரும் போராட்டங்களும் மேலும் அணிசேர்க்கின்றன.  


இனப்படுகொலைக்கு நீதி கோரலை முன்னெடுத்தல்

முதலாவதாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, இசைப்பிரியா மீதான பாலியல் வன்முறை,  படுகொலை, சிறுவன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை  போன்ற அப்பாவி மக்களின் மீதான போர்க் குற்றங்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி அதற்கான போராட்டத்தை உள்நாட்டு அரங்கிலும், தமிழகத்திலும், இந்தியாவிலும், உலக அரங்கிலும் முன்னெடுக்க வேண்டும்.

இத்தகைய ஜனநாயக போராட்டத்திற்கு,  வெறும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் தளமாகக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தமிழ்ச் சமூகம் ஒன்று திரண்டு  நடைபெற்ற அநீதிகளுக்கு  நீதி கோரிப் போராடுவதற்கான ஒரு பொதுச் ஒரு செயற்குழுவை உருவாக்க வேண்டும்.  இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கு வகிக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் பங்கு வகிக்கலாம்.  சிவில் சமூக உறுப்பினர்கள், ,அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள்,  மூத்த குடிமக்கள்  உள்ளடக்கிய 30 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு செயல் குழுவை உருவாக்கி பிரச்சனையை கையாளுவதற்கு அதற்கு அனைத்து அதிகாரங்களையும் தமிழ் மக்கள் வழங்க வேண்டும்.   உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இத்தகைய ஒரு அமைப்பே தமிழ் மக்களால்  உள்ளும்,  புறமும் ஏற்றுக் கொள்ளப்பட்ட  அமைப்பாக இருக்க வேண்டும். அதுவே எம் மத்தியில் ஏற்பட்டுள்ள உள் உடைவுகளைச் சரி செய்வும் புதிய செயல்ப் பூர்வமான ஒரு பாதையை வடிவமைக்கவும்  வழி கோலும்.

" An idle mind is the devil's workshop", அதாவது, "சிந்திக்காத வெறும் மனம் பிசாசின் பட்டறை" என்னும் கூற்றுக்கேற்ப, போராடாது  தேங்கி வரண்டு கிடக்கும்  ஒரு சமூகத்தின் மனதில் பிசாசுகள் குடிகொண்டு அதனை தங்கள் பட்டறையாக மாற்றிவிடும். இப்போது தமிழினத்தின் அரசியலும் அப்படித்தான் உள்ளது.   

எனவே இனப்படுகொலை என்ற ஆயுதத்தைக் கையிலேந்தி, அதற்காகப் போராடவல்ல ஒரு அமைப்பைச் சனநாயக பூர்வமாக வடிவமைத்து, வெற்றிடங்களை  நிரப்பிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தவறினால், சர்வதேச நாடுகளும் தமிழரின் தலையில் கொண்டை கட்டி, கொண்டையிற் பூவும் கட்டி, அதற்கப்பால் தலையில் குருவி கூடும் கட்டி செல்லும் நிலை தான் ஏற்படும். 

உலகெங்கும்  சிதறி  வாழும் ஈழத் தமிழர்களே!  ஈழத்தமிழ் மண்,  இந்து மாகடலின் மையத்தில், இந்தியாவின் வாசற்படியாக இருக்கவல்ல அதன்  கேந்திர அமைவிடத்தின் நிமித்தம், அது உலகப் பெரும் வல்லரசுகளையெல்லாம் தன்னை நோக்கி ஈர்க்கவல்ல ஒரு புள்ளியில் உள்ளது. அவ்வாறு, சர்வதேச கவனத்தை ஈர்க்கக்கூடிய புள்ளியிலுள்ளதால்,  அதனையே ஒரு முதலீடாகக்  கொண்டு, அறிவாற்றலுடனும், ஆளுமைத் திறனுடனும் தமிழ் தலைவர்கள் செயல்பட வேண்டும்.  தமிழர்கள் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும்.

- மு.திருநாவுக்கரசு.

13-08-2025


பின்னிணைப்புகள்:

செம்மணியில் புதைக்கப்பட்ட உண்மைகள் | சிதைக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அதிகம் பார்க்கப்பட்டவை: