ஜப்பான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜப்பான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 அக்டோபர், 2025

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் புதிய கட்டமும், அதற்கு ஈடு கொடுக்கவல்ல புதிய தமிழ்த் தேசியமும்.

 

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் புதிய கட்டமும், தற்கு ஈடு கொடுக்கவல்ல புதிய தமிழ்த் தேசியமும்.
மு. திருநாவுக்கரசு.
ஜப்பான், 6 ஆகஸ்ட் 1945.ஹீரோஷீமா நகரத்தின் மீது, லிட்டில் பாய் என்கிற 4 டன் எடையுள்ள அணுகுண்டு அமெரிக்காவால் வீசப்பட்ட இடத்தின் மையப்புள்ளி இது. இதைச் சுற்றி 12 கி.மீ சுற்றளவில் உள்ள அனைவரும், அனைத்தும் குண்டு வீசப்பட்ட சில நிமிடங்களில் முழுவதுமாக எரிந்து சாம்பலாய் போயின.



22/10/2025. பாகம் 2. 

சிதிலமாய்க் கிடக்கும் ஈழத் தமிழினம் சனநாயகம், சமூக சமத்துவம், நல வாழ்வு, அறிவியல் நோக்கு என்பவற்றின் டிப்படையில் புதிய தமிழ்த் தேசியத்தைக் கட்டமைப்புச் செய்யத் தயாராக வேண்டும்.

 

மாற்றமின்றி,  புதிதின்றி வளர்ச்சியில்லை.  வாழ்வியல் இயக்கத்தின்படி அன்புக்குரிய தந்தையோ, தாயேயாயினும், செல்லப் பிள்ளையேயாயினும், இறந்துவிட்டால், அதைத் தோளிற் சுமந்து கொண்டு திரியாது அழுது புலம்பி அடக்கம் செய்துவிட்டு, அடுத்த கட்டத்தை நோக்குவது போல ஈழத் தமிழரும் தமது அரசியலில் தோல்வியடைந்த கோட்பாடுகளையும், வாய்ப்பாடுகளையும் அடக்கம் செய்துவிட்டு,  அடுத்த கட்டத்திற்கு நிமிர வேண்டும்.  

 

தற்போதய புதிய சூழலுக்குப் பொருத்தமாக 21ம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்திற்குப் பொருத்தமாக அடுத்த நூற்றாண்டை நோக்கி தமிழீழத் தேசியத்தை புது வடிவப்படுத்த வேண்டும்.  

 

ஊறிப்போன பழைய பழக்கங்களிலிருந்து புதிய பழக்கத்திற்குப் போவது இலகுவான காரியமல்ல. ஆயினும் அந்தக் கடினமான காரியத்தைச் செய்யாமல் ஈழத் தமிழினம் தலையெடுக்க முடியாது.

 

புதுப்பொலிவுடன் புதுமைகளோடு எழுந்து வாருங்கள்,  

புதுமைகளோடு புதுபுதிதாய் எழுந்து வாருங்கள். வீழ்ந்தது உண்மை, எழுவது திண்ணம்.  இப்படித்தான், வீழ்ந்தது உண்மை என்ற ஒப்புதலோடும், எழவேண்டியது திண்ணமென்ற தீர்க்கத்தோடும் தனது 2ம் உலக மகாயுத்த வீழ்ச்சியிலிருந்து ஜப்பான் மீண்டு எழுந்து வந்தது.

 

ஜப்பானின் எழுச்சி

வரலாறு காணாத மாபெரும் 2ம் உலக மகாயுத்தம் ஜப்பானின் தலையில் வீசப்பட்ட அணுகுண்டுகளோடு முடிவுக்கு வந்தது. 2ம் உலக மகாயுத்த முடிவுக்கு  முற்றுப்புள்ளியாய் அமைந்த தோல்வியை சுமந்த ஜப்பான்.

 

"காலில் கல்லடித்து விட்டது" என்று கூறப்படும் ஒரு பக்க கருத்திற்குப் பதிலாய், கூடவே தமது கால் கல்லுடன் மோதுண்டுவிட்டது என்ற மறுபக்கக் கருத்தையும் கணக்கிலெடுத்துத் தோல்வியிலிருந்து மீண்டெழத் திட்டமிட்டது.

 

தமது பெரும் யுத்தத் தலைவரான பிரதமர் ஹைடெகி ரோஜோவின் (Hideki Tojo) கழுத்தில் எதிரி தூக்குக் கயிற்றை மாட்ட  ஜப்பான் அரசு சம்மதித்து,  எரியும் நெருப்புக்குள்ளால் நடப்பது போன்ற  கடும் தீர்மானத்திற்கூடாக அது புதிய மாற்றத்திற்குத் தயாரானது.  

 

இதுவொரு மிகப்பெரும் கடினமான தீர்மானம்.  தம்மீது அணுகுண்டு வீசிய எதிரியின் கையைப் பிடித்தெழுந்து,

எதிரியின் தோளைத் தழுவி வளரவேண்டும் ன்கின்ற தீர்மானத்தை ஜப்பானிய ஆட்சியாளர்கள் எடுத்தனர்.
இதில் சரி - பிழை என்பதற்கப்பால்  ஒரு புதிய மாற்றத்திற்குப் போக வேண்டுமென்கின்ற மிகக் கடினமான தீர்மானம் அங்கு மேற்கொள்ளப்பட்டமை கவனத்திற்குரியது.

 

தமது யுத்த எதிரியான அமெரிக்காவின் தோளைத் தழுவி வளர வேண்டுமென்ற தீர்மானத்தில் வெற்றி பெற்றாலும், அமெரிக்காவின் தோளிலேற முடியாதென்ற யதார்த்தத்தையும் புதிய ஜப்பான் உணர்ந்து கொண்டது.  எப்படியோ அமெரிக்காவுக்கு நிகரான இராணுவ வல்லரசாக வளர முடியாவிட்டாலும் அமெரிக்காவுக்கு  நிகரான பொருளாதார - தொழில்நுட்ப வல்லரசாக  வளரமுடியுமென்பதை புதிய ஜப்பானியர்கள் நிரூபித்துள்ளார்கள்.  

 

இதில் நல்லதும் கெட்டதும் கலந்த, தெளிவான டிப்பினையுண்டு. புதிய மாற்றத்துக்குள்ளாக வேண்டும் என்று ஜப்பான் காட்டிய திடசித்தம்  கவனத்துக்குரியதாக ருக்கும்;  அதேபோல, ஈழத்தமிழர் தமது தோல்வியிலிருந்து மீள, அதிலிருந்து மிடுக்குடன் புதிய மாற்றத்திற்குப் போவதற்கான சிறப்பான யதார்த்தம் ஈழத்தமிழர் சார்ந்த அரசியல் சூழலிலுண்டு.

 

ஈழத்தமிழரின் தோல்வி முள்ளி வாய்க்காலில் மட்டுமல்ல

இங்கு ஈழத்தமிழர் மிடுக்குடன் மாற்றத்திற்குப் போகத் தயாராகவேண்டும் ன்பதே வரலாறு இடும் கட்டளையாகும். ஈழத்தமிழர் மொத்தமாகத் தமக்கேற்பட்ட 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசியற் தோல்விகளிலிருந்தும், அது தொடர்பான சிந்தனை முறையிலிருந்தும்  மாறவேண்டும். தோல்வி முள்ளிவாய்க்காலில் மட்டும் நிகழவில்லை. இராமநாதன் காலத்துக்கு முன்பிருந்து இன்று வரை  நிகழ்கிறது.

 

ஆயுதப் போராட்டத்திற்கு முன்னான தோல்விகளும் தோல்விதான். ஆயுதப் போராட்டத்திலேற்பட்ட தோல்வியும்  தோல்விதான். முள்ளிவாய்காலுக்குப் பின்னான கடந்த 16 ஆண்டு கால தோல்விகளும் இட்டு நிரப்ப முடியாத தோல்விகள்தான்.

 

சிங்கள அரசியலின் முன் வாதாட்ட அரசியலும் தோல்வி; அகிம்சை போராட்ட அரசியலும் தோல்வி, ஆயுதப் போராட்டமும் தோல்வி;
தனித்தனியே ஆயுதம் தாங்கிப் பல்வேறு இயக்கங்களாகப் புறப்பட்ட அனைத்து இயக்கங்களும் தோல்வி;  
இயக்கங்களுக்குள் பிழைகள் இருப்பதாகக் குரல் எழுப்பி இயக்கங்களை உள்ளுக்குள் மாற்ற முற்பட்டவர்களுக்கும் தோல்வி; 
இயக்கங்களிலிருந்து பிரிந்து சென்று வேறு இயக்கங்களை உருவாக்கியவர்களுக்கும் தோல்வி;
இயக்கங்களிலிருந்து விலகி ஒதுங்கியவர்களுக்கும் தோல்வி;
அதன் பின்னான இணக்க அரசியலும் தோல்வி.

மொத்தத்தில் 200 ஆண்டு காலக் கணக்கெடுப்பில் அனைத்துத் தமிழ்த் தலைவர்களும், அனைத்துக் கட்சிகளும், அனைத்துப் பிரிவினர்களும்  தொடர்ந்து வீழ்ச்சியடைந்தவாறு, வட அட்லாண்டிக் கடலில் உள்ள  பெர்முடா முக்கோண மர்மம் (Barmuda triangle  Mystery ) போல் தமிழர் தலைவிதி நீள்கிறது.

 

தற்போது,  பெமுடா  முக்கோண மர்மத்திற்குக் கூட ஓரளவு இயற்கை சார்ந்த காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. ஆயினும் ஈழத்தமிழர்களின் தொடர் தோல்விகளுக்கான  காரணங்களைப் பற்றியோ, அதிலிருந்து மீள்வதற்கான வழிவகைகளைப் பற்றியோ   ஆக்கபூர்வமாகச் சிந்திக்கத் தலைப்படும்  நிலையில்லை. இனியாவது அதனை விரைவாக செய்தாக வேண்டும்.

  

ஈழத்தமிழரின் இனப் பிரச்சனையென்பது வெறுமனே சிங்கள - தமிழ் இனப் பிரச்சினை மட்டுமல்ல.  அடிப்படையில் இந்தியாவுக்கு அருகாமையிலான இலங்கைத் தீவின் புவிசார் அரசியல் பிரச்சனையாகும். புவிசார் அரசியலின் டிப்படையிலான, இந்திய உபகண்டம் தழுவிய பிரச்சினையாய்,  ஈழப் பிரச்சனை விஸ்வரூபம் டுத்துள்ளது.  மேலும், கடல் சார் ஆதிக்கப் போட்டியின் நிமித்தம் உலகம் தழுவிய வல்லரசுகளின் அதிக்கப் போட்டிக்கான முக்கிய புள்ளியாகவும் இலங்கைத் தீவு  அமைந்துள்ளது.  

 

இந்தியாவுக்கு அருகாமையிலான  இலங்கையின் அமைவிடம் காரணமாக இந்திய அரசிற்கும்,  சிங்கள அரசுக்குமிடையே பகைமை திரட்சி பெற்றிருக்கிறது. இந்நிலையில்  ஈழத் தமிழரை இந்தியாவுடன் ணைத்துப் பார்க்கும் சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கெதிரான தமது யுத்தத்தை ஈழத்தமிழர்கள் மீது புரிகிறார்கள். அதன் மூலம் இந்தியாவின் யுத்தத்தை, சிங்களவருடன் ஈழத்தமிழர் புரியும் யதார்த்தம் உருவானது. இந்தியாவில் உருவான பௌத்தம் இந்தியாவிலிருந்து துரத்தப்பட்டு அது இலங்கையில் ஒதுங்கி உறைந்து கிடக்கிறது. பாக்கு நீரிணையால் இலங்கை ஒரு தீவாகி, நாடாகி அரசமைத்து, சிங்கள பௌத்த அரசாய் வடிவம் பெற்றது.

 

இனப்படுகொலைக்குப் பரிகாரம் பிரிந்து செல்லல் மட்டுமே

பாக்கு நீரிணை இல்லையேல், இலங்கை ஒரு தீவுமல்ல, ஒரு நாடுமல்ல, ஒரு அரசுமல்ல.  தமிழகத்தின் ஒரு தொடர் நிலப்பரப்பு. மேற்படி சிங்கள அரசுக்கும், இந்திய அரசுக்கும் நடுவேயான பாக்கு நீரிணையின் விளிம்பில் ஈழத்தமிழர் வாழும் நிலையில் அவர்கள் இரு அரசுகளுக்கும்.  இடையேயான புவிசார் அரசியற் களத்துக்குள் சிக்குண்டுள்ளனர்.  இந்த வகையிற் ஈழத்தமிழர் புவிசார் அரசியலின் கைதிகள். ஈழத்தமிழர் வாழும் ஒரு பக்கம் பாக்கு நீரிணையின் ஒரு விளிம்பாகவும், அதன் மறுபுற விளிம்பில் இந்தியாவின் தமிழகத் தமிழர் வாழ்வதாலும்,  ஈழத் தமிழர் மீதான சிங்களவரின் பகைமை மொழி அடிப்படையிலும் பூதாகரம் பெற்றது. இவற்றின் பின்னணியில் சிங்கள பௌத்த  அரசியல் ஈழத்தமிழருக்கு   எதிரான  இனப்படுகொலையாகப்  பேருருப் பெற்று நீள்கிறது.

 

"இனப்படுகொலைக்குப் பரிகாரம் பிரிந்து செல்லல் மட்டுமே (Genocide can be compensated only by secession) என்ற கூற்று கவனத்திற்குரியது.

இனப்படுகொலையானது இரத்தம் கொப்பளிக்கும் இராணுவ படுகொலையாக முள்ளிவாய்க்காலில் தனது இரத்த தாகத்தைத் தீர்த்துக் கொண்டு  தற்போதய ஆட்சியின் கீழ்  சிங்கள பௌத்த இனமயமாக்கற் கொள்கையாக (Policy of assimilation ), தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. அதாவது இனப்படுகொலை வாயிலாக தமிழ் மக்களைப்  படுகொலை செய்து அச்சுறுத்தி அடக்கிவிட்டு,  சிங்கள பௌத்த தேசிய வாதத்தை முதன்மையாகக் கொண்டு, தமிழ் மக்களை சிங்கள பௌத்த இனமயமாக்கலுக்குட்படுத்த இன்றைய ஆட்சியாளர்கள் முற்படுகின்றனர்.

 

இப்படியாக, தமிழர் ஒரு தனித்துவமான தேசிய இனமெல்லாம் கிடையாது. இலங்கைத்தீவில் ஒரேயொரு தேசிய வாதமேயுண்டு, என்று கூறி விகாராதிபதிகளின் ஆசியுடன், ஓரின பௌத்த மேலாதிக்க இனவாதம், இலங்கை முழுவதும் ஈழத் தமிழர் மீதும், ஏனைய இனங்கள் மீதும் முன்னெடுக்கப்படுகிறது. இதிலுள்ள விந்தை என்னவெனில், சிவப்புச் சட்டை, மஞ்சள் அங்கியின் ஆசியோடு சிங்கள பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கின்றது.

 

இப்பின்னணியில் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான மிக மோசமானவொரு சிங்கள இனமயமாக்கலை தமிழ் மக்கள் சந்திக்கிறார்கள். இனமயமாக்கலென்பது னப்படுகொலையின் மேலான அடுத்த கட்டவளர்ந்த வடிவம்.  ஆதலால் இன்றைய ஆட்சியின் கீழ்  இனப்படுகொலை வேகமாக வளர்ச்சி அடைகின்றதான, நுண்ணிய உண்மைகளைப் புரிந்துகொண்டு ஈழத் தமிழினம் தமது அடுத்த கட்டத் தேசியவாதத்திற்குத் தயாராக  வேண்டும்.

 

இராணுவத் தோகை விரிப்பின் பின்னணியில் மயில் தனது கூரிய சொண்டால் கொத்தும் இரையென ஈழத்தமிழர் சிங்கள ஆட்சியாளரால் இன்று கபளீகரம் செய்யப்படும் துயரம்  எப்பொழுதையும்விட. மிகவும் ஆபத்தாக முன்னேறிச் செல்கிறது. இதனை ஈழத்தமிழ்த் தரப்பு சரியாகவுணர்ந்து கொண்டு புதிய உள்நாட்டு,  வெளிநாட்டு சர்வதேசச் சூழலுக்குப் பொருத்தமாக தமிழ்த் தேசியத்தைப் பெரிதும் புதிதாகக் கட்டமைப்புச் செய்ய வேண்டும். இதற்கென ஒரு புதிய சிந்தனை மாற்றமும், ஒரு பெரிய மனமாற்றமும் தேவை.

 

அடுத்த கட்டுரையில் மேற்படி புதிய தேசிய வாதத்தை எவ்வாறு கட்டமைப்புச் செய்யலாம் என்ற விடயத்தை தொடரலாம்.

 

 

தொடரும்----------------------------




அதிகம் பார்க்கப்பட்டவை: