ஈழத்தைச் சார்ந்த ஆய்வாளரும், யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவரும், ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், தமிழீழம், புவிசார் அரசியல் மற்றும் சர்வதேச அரசியலை தொடர்ந்து ஆய்ந்துவருபவரும், உலக வரலாற்று-அரசியல் அறிவியலை ஆய்வு செய்வதை தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருப்பவரும், பல அரசியல்-வரலாற்று நூல்களின் ஆசிரியருமான திரு. மு.திருநாவுக்கரசு அவர்களின் கட்டுரைகள், உரைகள், காணொலிகள் இத்தளத்தில் இடம்பெறுகின்றன.
ஊடறுப்பு இணையதளத்திற்கு வழங்கிய நேர்காணல். 05-04-2026.
ஈரானின் போர்க் கப்பலை அமெரிக்கா இலங்கையின் கடல் எல்லையில் வைத்து தாக்கி அழித்ததானது, இலங்கை சிங்கள அரசிற்கும், அது தனது அடிப்படை நண்பனாக கொண்டுள்ள சீனாவிற்கும் சில எச்சரிக்கைகளை சொல்லியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் இந்த அமெரிக்காவின் ஈரான் மீதான போரினால் இன்னும் மோசமான நிலையை அடையக் கூடும். இந்த ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் பொருளாதாரப் பின்னடைவு - recession ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
இந்த ஆபத்து காலத்தில் தான் ஈழத்தமிழர்கள் சிங்கள அரசை எதிர்த்த தங்கள் போராட்டங்களை அதிகப்படுத்த வேண்டும். சிங்கள அரசு மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் போது மட்டுமே அது தமிழர்கள் தங்களுக்கான தீர்வை நோக்கி செல்வதை தடுக்க இயலாமல் நிற்கும்.
சிங்கள அரசுகள் உலகில் உள்ள சீன, இந்திய, அமெரிக்க வல்லரசுகளுடன் நயந்து பயந்து நடித்து தனது பொருளாதார நிலையை தக்க வைத்துக் கொண்டு தன்னை காத்துக் கொண்டே இருந்தால் அது தனது இறுதி இலக்கான தமிழரை இலங்கையில் இருந்து துடைத்து அழிப்பதை செய்து முடிக்கவே முயலும். ஒரு போதும் தமிழருக்கான அமைதி , உரிமைகளை தருவது பற்றி சிந்திக்கவே சிந்திக்காது.
ஊடறுப்பு இணையதளத்திற்கு வழங்கிய நேர்காணல். 01-04-2026.
அமெரிக்காவின் பச்சைக்கு எதிரான போர்தான் ஈரான் மீதான போர். ஈரான் யுத்தத்திற்குப் பின்னால் இஸ்லாமியருக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து.
இலங்கைக்கு நிதி நெருக்கடி வரும் நேரங்களில் எல்லாம் அதற்கு பண உதவிகளை அள்ளிக் கொடுக்கும் அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கையின் அரசுகள் எப்போதும் சீனாவுடன் கைகோர்த்து நிற்கும் இலங்கையின் தன்மையைக் கண்டு எரிச்சலாகவே உள்ளன.
உலக தாதா தன்னை விட சீனாவை நெருங்கி இலங்கை சென்றால் அதன் நிலைமையை தான் எப்படி கையாளும் என்று ஒரு எடுத்துக்காட்டு காட்டி புரியவைக்கத் தான் ஈரானின் போர்க் கப்பலை இந்திய எல்லை தாண்டி, இலங்கை கடல் எல்லையில் ஏவுகணை வீசித் தாக்கி அழித்தது அமெரிக்கா. இந்தியா இதில் தனக்கு பங்கு இல்லை என்று சொன்னாலும், இந்தியாவிற்கு தெரியாமல் அதன் மௌனமான அங்கீகாரம் இல்லாமல் அமெரிக்கா இத்தகைய தாக்குதலை செய்ய வாய்ப்பு இல்லை.
-- .. -- -- -- -- -- -- --
இப்போது அமெரிக்கா ஈரான் மீது செய்திருக்கும் யுத்தமானது தற்போதுள்ள உலக ஒழுங்கை Geo-political order , மாற்றிவிடவில்லை. ஆனால் குழுப்பி இருக்கிறது. வலுவான சம பலமுள்ள இரு நாடுகள் போரிடும் போது மட்டுமே உலக ஒழுங்கானது மாற்றி அமைக்கப்படும் சாத்தியம் உள்ளது. அமெரிக்கா-ஈரான் மோதலில் அத்தகைய சாத்தியப்பாடுகள் இல்லை.
யுத்தங்கள் இல்லாமல் உலக ஒழுங்கை மாற்ற அமெரிக்கா பனிப்போர் காலத்தில் சீனாவுடன் உறவுகளை புதுப்பித்துக் கொண்டது. சீனா-ரஷ்யா இடையேயான உறவை முறிக்க அமெரிக்கா செய்த இந்த தந்திரமானது சீனாவை ரஷ்யாவிடமிருந்து பிரித்தது. அதனால் சோவியத் யூனியன் விழுவது துரிதப்படுத்தப்பட்டது.
ஆனால் சீனா தன்னை உலக வல்லரசாக வளர்த்துக் கொள்ளவும் அந்த நகர்வு உதவியது. 40 வருடங்களுக்குப் பின்பு, இன்று, அதே சீனா உலக வர்த்தகத்தில் அமெரிக்காவிற்கு சவால் விடும் இடத்திற்கு வளர்ந்துள்ளதை தனது நெருக்கடியாக பார்க்கும் அமெரிக்கா அத்தகைய நிலையை குலைத்துப் போடவே சீனாவின் எண்ணை வர்த்தகக் கூட்டாளி ஈரான் மீதான இந்தத் தாக்குதலை செய்திருக்கிறது.
--- --- --- --- --- --- --- --- --- ---
இந்தப் போரானது உலக ஒழுங்கில் சீர்குலைத்து விட்ட ஒரு குறிப்பிடத்தக்க விடயம் அரச இறையாண்மை அழிப்பு - destruction of state sovereignty. எந்த நாடும் எந்த நாட்டையும் தாக்கலாம். ஜனாதிபதிகளை நேரடியாக தாக்கி கொல்லலாம். கடத்தலாம். மக்கள் மேல், மருத்துவமனைகள் மேல் குண்டு போடலாம். அதை வேறு எந்த நாடும் தட்டிக் கேட்காது, கேட்க முடியாது என்கிற நிலைமையை புதிதாக அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது.
1648 ஆம் ஆண்டு தான் அரசுகளின் இறையாண்மை கோட்பாடு, வெஸ்பாலியா உடன்படிக்கை மூலம் நிறுவப்பட்டது. அதன் படி, ஒவ்வொரு நாடும் இறையாண்மை கொண்டுள்ளது. வேறொரு நாடு எல்லை தாண்டி அதன் மீது தாக்குதல் நடத்தவோ, அதன் சுதந்திரத்தை பறிப்பதோ இறையாண்மை உரிமையை மீறுவதாகும். அது கடுமையாக சர்வதேச சமூகத்தால் தண்டிக்கப்படும். இதுதான் அரசுகளின் அது சிறிதோ, பெரிதோ, அரசுகளின் உரிமைகளை, இறையாண்மையை பாதுகாக்க உருவாக்கப்பட்ட வெஸ்பாலிய கோட்பாடு ஆகும். அதை இன்று அமெரிக்கா தூக்கி எறிந்து விட்டது.