சனி, 6 மே, 2023

பாக்-நீரிணை அரசியலில் ஈழத் தமிழரும், தமிழகமும், இலங்கை-இந்திய அரசுகளும், வல்லரச வேட்கைகளும். - மு.திருநாவுக்கரசு.


23/9/2024

பாக்-நீரிணை அரசியலில் ஈழத் தமிழரும், தமிழகமும், இலங்கை-இந்திய அரசுகளும், வல்லரச வேட்கைகளும்.

---------------------------------------------------------------------

'ஈழத்தமிழரின் பாதுகாப்பும் தமிழ்நாட்டின் வகிபாகமும்' என்ற தலைப்பில் 2023, மே 06 ஆம் திகதி அன்று, சென்னை ரமடா பிளாசா(Ramada Plaza) விடுதியில், கனடாவாழ் ஈழத்தமிழரான திரு. நிமால் விநாயகமூர்த்தி தலைமையில் நிகழ்ந்த உரையாடலின் போது திரு.மு.திருநாவுக்கரசு ஆற்றிய தொடக்க உரையின் எழுத்துருவே இக்கட்டுரை.

---------------------------------------------------------------------

அரசியலை ஒருபோதும் தனிநபர்களுக்கு  ஊடாகவோ,  தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு  ஊடாகவோ பார்க்கக் கூடாது. அரசியலை விஞ்ஞானபூர்வமான கட்டமைப்பு ஆய்வு (Structural Analysis) மற்றும் கட்டமைப்புச் செயற்பாட்டுமுறைமை (Structural Functionalism)  சார்ந்த அறிவியல் முறைமைகளுக்கு ஊடாக  நோக்க வேண்டும்.. இந்த வகையில்  தமிழகத்தை  ஈழத்தமிழருடன் பின்னிப் பிணைந்த  புவியியல் பண்பாட்டு --வரலாற்றுப் பின்னணியில் வைத்து  யதார்த்த நிலமைகளுக்கு  ஊடாக  சரிவர அணுகவேண்டியது  அவசியம்.

 மனிதனது அரசியல் வாழ்வானது அவன்  சார்ந்த சூழ்நிலைகளினால் பின்னணிகளினால் நிர்ணயிக்கப்படுகின்றது என்பது தெளிவானது. அப்படிப் பார்க்கையில்  புவியியல் அமைவிடம்  சார்ந்த தர்க்கரீதியான யதார்த்தபூர்வ நிலமைகளின் படி தமிழகம்தான் ஈழத் தமிழர்களின் குருவிக்கூடு. அதேவேளை ஈழத்தமிழர்கள் வாழும் மண்தான் இந்தியாவின் மூலைக்கல் அல்லது மூலக்கல் (Cornerstone)   என்பதனையும் கருத்திற்கொள்ளத் தவறமுடியாது.

ஆனால் இந்த இரண்டின்  தர்க்கபூர்வ செயற்படு முறைமையையும் அதனது நடைமுறை சார்ந்த அர்த்தத்தையும் புரிந்துகொள்வதில் எம்மத்தியில் பாரிய சிக்கல்கள் உள்ளன.

ஈழத்தமிழர் பிரச்சினையினை பிரித்தானியர்களிலிருந்து இந்தியத் தலைவர்கள் வரை உலகப் பெருந்தலைவர்கள் பலரும்  கையாண்டுள்ளனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வடிவமைத்து, அதனைக் களத்தில் நின்று வழிநடத்தியவர்களில் ஒருவரும், அக்காலத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராகவும், பின் நாட்களில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அலோசகராகவும் இருந்த திரு .J.N.Dixit, தான் எழுதியAssignment Colomboஎன்ற நூலில் ஒரு முக்கியமான விடயத்தைக் குறிப்பிடுகின்றார். அதாவது,

பிரதமர் ராஜிவ்  காந்திக்கோ,  அவருக்கு ஆலோசனை வழங்கியவர்களுக்கோ அன்றேல் தனக்கோ இலங்கை இனப்பிரச்சினை பற்றித் தெளிவான பார்வையோ, புரிதலோ போதியளவு இருக்கவில்லை' என்று கூறிதுடன்  மேலும்    'இலங்கையின் இனப்பிரச்சினையினை வெறும் அரசியல் சீர்திருத்தங்களாலோ , பொருளாதாரச் சீர்திருத்தங்களாலோ ஒருபோதும் தீர்க்கப்பட முடியாத அளவுக்கு அது இரு இனங்களுக்கும் இடையே  அதலபாதளமான  இனப்பகையினைக் கொண்டுள்ளதுஎன்றும்  கூறியுள்ளார்.  

 இதேபோன்று   பேராசிரியர் B. H. Famer எழுதிய “Ceylon: A Divided Nation”  என்ற நூலுக்கு  சுதந்திர இலங்கையின் முதலாவது அரசியல் யாப்பினை எழுதிய சோல்பரிப்  பிரபு எழுதிய அணிந்துரையில்,  தாம் இலங்கையின் இனப்பிரச்சினையினையைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல், தவறுதலாக இலங்கையின் அரசியல் யாப்பினை எழுதிவிட்டோம்என ஓர் ஒப்புதல் வாக்கும் அளித்துள்ளார்.

 இவற்றிற்கும் அப்பால்   புரிந்துகொள்ளப்படக்கூடிய இன்னொரு  விடயம் என்னவென்றால், வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் மட்டுமன்றி, ஈழத்தமிழ்த் தலைவர்களுங்கூட இலங்கையின் இனப்பிரச்சினையினையைச் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான். இத்தகைய குழப்பகரமான பின்னணியில் இருந்துதான் ஈழத்தமிழ் மக்களது நூற்றாண்டுகளைக்  கடந்த அழிவு நீண்டு  செல்கிறது.

இந்த இடத்தில்  இயல்பாகவே ஒரு கேள்வி எழலாம். ஏன் ஈழத்தமிழ்த் தலைவர்கள் தமிழ்  மக்களின் பிரச்சினையினைச் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை?

இதற்கான அடிப்படைக் காரணங்கள் பல.

ஆயுதப் போராட்டத்துக்கு முன்னர் தமிழ்த் தலைவர்கள் அனைவருமே முழுநேர வழக்கறிஞர்களாகவும் பகுதிநேர அரசியல்வாதிகளாகவுமே இருந்தனர். சேர். பொன். இராமநாதன்,  திரு ஜி. ஜி. பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம், திரு அ. அமிர்தலிங்கம் வரை எவரும் முழுநேர அரசியல்வாதிகள் கிடையாது (இறுதிக் காலத்தில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் நிமிர்த்தம், முழுநேர அரசியல்வாதியானார்). உண்மையான அர்த்தத்தில் ஆயுதப் போராட்டம் தோன்றிய பின்னர்தான் முழுநேர அரசியல்வாதிகள் தமிழ் மக்களிடையே முகிழத்  தொடங்கினர்.

 மேலும், அறிவுசார் தமிழ்  நடுத்தர  வர்க்கமானது அரச உத்தியோகத்தர்களாய் இருந்ததன் காரணமாகவும், அரசைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்ற வாழ்க்கைச் சூழலைக் கொண்டிருந்ததாலும், அரசியலை அவர்களால் அறிவியல் பூர்வமாக அணுகி முன்னிறுத்த இயலாதுபோனது.

பாக்-நீரிணைப்பால்(Palk Strait) இலங்கை ஒரு தீவாக இருப்பதன் புவிசார் பலம்

அறிவியல் கண்கொண்டு ஈழத்தமிழர் -- இந்தியா, ---  சர்வதேச அரசியல் மற்றும் உலகலாவிய அரசியல் என்ற நான்கு பரிமாணங்களையும் இணைத்துப்  பார்த்தால், இலங்கை இனப்பிரச்சினையின் முதுகெலும்பு பாக்கு நீரிணைதான் (Palk Strait) என்கிற புவிசார் அரசியல் (Geopolitics), புவிசார்வரலாற்று யதார்த்தம்  (Geohistorical reality) என்பது தெரியவரும். அதாவது, பாக்கு நீரிணைப் பிரச்சினைதான் ஈழத்தமிழர் பிரச்சினை. ஈழத்தமிழர் பிரச்சினை, இலங்கைப் பிரச்சினை, இந்தியப் பிரச்சினை, சீனப்  பிரச்சினை, அமெரிக்கப் பிரச்சினை மற்றும் சர்வதேசப் பிரச்சினை அனைத்துமே பாக்கு நீரிணையிற்தான் மையங்கொண்டுள்ளன.

புவிசார் அரசியல் வரலாற்று அடிப்படையில் நோக்கும் போது, உலகத்தில் தீவுஎனும் நிலப்பரப்பு அமைப்பானது அதனைச் சார்ந்து அங்கு வாழ்பவர்களுக்கு முதல்நிலைப் பெரும் பலம் என்பது தெரியவரும். உதாரணமாக கியூபா ஒரு தீவு. அங்கு 1959 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை கம்யூனிஸ்ட்  கட்சியின் ஆட்சி நிலவுகின்றது என்றால் அது, பிடல் காஸ்ரோவின் தனித் திறமையினால் சாத்தியமானது என்பதைவிட , அது ஒரு தனித் தீவாக இருப்பதனாற்தான்  அதிகம் சாத்தியமானது என்பதே சரியான  புரிதலாகும். கியூபா ஒரு தனித் தீவாக இருப்பதனால் அமெரிக்காவினால் அதனை இலகுவாக ஊடுருவவோ,   இலகுவில் விழுங்கிவிடவோ முடியாது.

 இன்னுமொரு உதாரணத்தையும்  நோக்கலாம் .  அதாவது தாய்வான் ஒரு தீவாக இருப்பதனால் சீனாவினால் அதனை இலகுவாக விழுங்கிவிட முடியாதுள்ளது.  1949 ஆண்டு சீனக் கொம்யூனிஸ்ட்  கட்சி பதவிக்கு வந்து மறு ஆண்டு, 1950 ஆம் ஆண்டே  தீபெத்தை இராணுவ நடவடிக்கை மூலம் சீனா தன்னுடன் இணைத்துக் கொண்டது போல இற்றை வரை தாய்வானைச் சீனாவால் தன்னுடன் இணைத்துக்கொள்ள முடியாதுள்ளது.

அரசியல் அர்த்தத்தில் தீவுக்கென்று ஒரு தனி அடிப்படைப் பலமுண்டு என்பது இங்கு தெளிவாகிறது. இலங்கை என்பது ஒரு தீவு. இந்தியாவிலிருந்து 14.5 கடல் மைல்  (17 மைல் ,  27 கிமீ)  தொலைவில் பாக்கு நீரிணையினால் அது பிரிக்கப்பட்டிருக்கிறது.

பாக்கு நீரிணைதான் இலங்கை அரசியலின் குவிமையம். பாக்கு நீரிணை இல்லை என்றால் இலங்கை ஒரு  தீவு  அல்ல; அது  நிலத்தொடரால்  தமிழ்நாட்டின் ஒரு பகுதி கடைசிப்  பனியுகத்தின் போதுதான் அது தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து சென்றது. அந்தப் பிரிவின் அடிப்படையிற்தான் இலங்கை ஒரு தனி நாடாகவும், ஒரு அரசாகவும் இருப்பது சாத்தியமானது.

சுமார் 500க்கும் மேற்பட்ட இராஜ்ஜியங்களைக் கொண்டிருந்த பரந்த இந்தியாவை ஒன்றிணைத்து, ஒரு இந்திய நாடாக உருவாக்கிய பிரித்தானியர்கள் ஏன் இலங்கையையும் அதனோடு இணைத்து உருவாக்கவில்லை? ஏனெனில் இலங்கை ஒரு தீவு. இந்தத் தீவுதான் சிங்களவர்களுக்கு ஒரு அரசைக் கொடுத்தது. அந்தவகையில் இலங்கைத்தீவைத் தனி அரசாக வைத்திருப்பது  இந்துமாகடல் தழுவிய கடல்சார் காலனிய ஆதிக்கத்திற்கும் அவசியமாக இருந்தது.

இந்தியாவில் தோன்றிய பௌத்தம் இந்தியாவைக் கடந்து கிழக்காசியா, தென்னாசியா மற்றும் தென்கிழக்காசியா வரை பரவியது. ஆனால்  இந்துமத எழுச்சியினால் இந்தியாவில் அது அழிந்துபோனது. அதேநேரம் இலங்கைத்தீவில் இந்துமதத்தால் புத்தமதத்தை அழிக்க முடியவில்லை. மாறாக இலங்கைத்தீவில் பௌத்தத்தைக் காப்பது புவியியல் அடிப்படையில் சிங்கள பௌத்த ஆட்சியாளர்களுக்குச் சாத்தியமாகி இருக்கிறது.

 இது எப்படிச் சாத்தியமானது? ஈழத்தமிழர்கள் தமிழகத்துக்குப் பக்கத்தில் தமது வாழ்விடத்தைக் கொண்டுள்ளனர். பாக்கு நீரிணை ஈழத்தமிழரைத் தமிழகத்துடன் தொடுக்கும் ஏணியாக இருக்கிறது. இதனால் மொழி, இனம், மத அடிப்படையில் தமிழகத்துடன் ஒத்த தன்மையைக் கொண்டுருக்கின்றனர். இதுதான் தமிழர்களுடன் சிங்களவர்களுக்கு இருக்கும் அடிப்படைப் பிரச்சினை.

சோழப் பேரரசின் கடல்கொள்கை

இந்தப் பாக்கு நீரிணையினூடாகத்தான் சோழப்  பேரரசு இலங்கையைக் கைப்பற்றியது. 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழர்கள் அநுராதபுரத்தைக் கைப்பற்றினார்கள். சிங்களவர்களின் பார்வையில் 1500 ஆண்டுகளாக  தொடர்ந்து வளர்ந்து நிலைபெற்ற ஒரு சிங்கள அரசை சோழப் பேரரசு இந்தியாவிலிருந்து வந்து அப்படியே கௌவிப்பிடித்து அழித்தது. அநுராதபுர தலைநகரை அழித்த சோழர்கள் கடல்சார்ந்து விளங்கும் திருகோணமலைக்கு அண்மையில் உள்ள பொலநறுவையில் தமது தலைநகரை நிறுவினர்.

1500 ஆண்டுகளாக நிலைத்திருந்த ஒரு இராஜதானியை அழித்து, அது இல்லாமல் ஆக்கப்பட்டதை சிங்கள பௌத்தர்கள் வரலாற்றில் ஒருபொழுதும் மறந்துவிட மாட்டார்கள். குறிப்பாக இந்தியாவுடன் இருக்கும் நெருங்கிய புவிவியற் பின்னணி காரணமாக இந்தியாவில் எழக்கூடிய எந்தவொரு எழுச்சியும் இலங்கைக்குப் பரவும் என்ற அச்சம் சிங்கள பௌத்தவர்களிடம் எப்போதும் உண்டு.

வடஇந்தியாவில் கடல் பேரரசு தோன்றாத காலத்தில், இந்தியாவில் தோன்றிய பலம் பொருந்திய முதல் கடற்  பேரரசு சோழப்  பேரரசுதான். வரலாற்றில் இந்து மகா கடலிலும் அதுதான் முதல் கடற்  பேரரசு. பரந்த உலகரங்கிலும் கடற் பேரரசுக்கு இது ஒரு முன்னோடி. இதனால் சோழப்  பேரரசுக்கு கடல் முக்கியமானது. வெளியுறவுக் கொள்கையிலும் அன்றைய சோழப்  பேரரசின் வெளியுறவுக் கொள்கைதான் இன்றைய இந்தியாவின் இருப்பை நிலைநிறுத்தக்  கூடியதும் வாழவைக்கக்  கூடியதுமாகும்.

 இன்று 21 ஆம் நூற்றாண்டில் , அதுவும் 2010 ஆம் ஆண்டைத் தொடர்ந்து  முன்வைக்கப்பட்டிருக்கும்  இந்தோ-பசுபிக் கொள்கையானது சோழப் பேரரசின் கொள்கைதான். கி. பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் தென்கிழக்காசிய நாடுகளில் மையங்கொண்டிருந்தனர். ஏனென்றால் சோழப் பேரரசுதான் கடல்கடந்து  போனது. இந்தியாவிலிருந்து வேறு எந்தப் பேரரசும் கடல்கடந்து போவில்லை. இந்தியா அடிப்படையில் தரைவழிப் பேரரசு. இராஜசூய யாகம், அஸ்வமேத யாகம் என்ற தரைவழி வகைகளினாலேயே வட இந்தியப் பேரரசுகளின் விருத்தி அமைந்திருத்தது. சோழப் பேரரசு மட்டுந்தான்  கடல்கடந்த  பேரரசை உருவாக்கியது.

 இந்தப் பேரரசுதான் சிங்கள அரசை அழித்தது. இதற்கும் அப்பால் கடல் வழியாகவே  காலத்துக்குக்  காலம் இந்தியாவிலிருந்து படை எடுப்புக்களும்,  மதஆதிக்கங்களும் அரசியல் தலையீடுகளும் இடம்பெற்றன. இதனால் சிங்கள பௌத்த அரசு பெரும் சவாலுக்குள்ளானது.

சிங்கள-பௌத்தத்தின் இந்திய-விஸ்தரிப்பு எதிர்ப்பு வாதம்

இந்தியாவில் தோன்றிய பௌத்தம், இந்தியாவிலேயே அழிந்தபோது, இந்தியாவிற்கு எதிராக இலங்கையில் தேரவாதப் பௌத்தத்தை பாதுகாப்பதற்காக பௌத்தமத சங்கம், சிங்கள அரசு எல்லாம் இணைந்து ஒரு திரட்சி பெற்றன.இவ்வாறாகவே இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படையே இந்தியாவுக்கு எதிரான சிங்கள மனோபாவமாக மாறியுள்ளது. இந்தியாவில் தோன்றிய பௌத்தம் இந்தியாவில் அழிந்தது போல, இந்தியாவினுடைய வளர்ச்சி இலங்கையை, சிங்கள அரசை, பௌத்த மதத்தை அழித்திடும்  என்ற  வரலாற்றுபூர்வ  அச்சம் சிங்களவரிடம் உண்டு.  இந்த நிலையில் சிங்களவர்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டுமானால் இந்தியா மீதான எதிர்ப்பரசியல் அவர்களுக்கு வேண்டும் என்ற மனநிலை அவர்களிடம் உண்டு. அவர்களது அந்த இந்திய எதிர்ப்புடன்  கூடவே  ஈழத்  தமிழர்களும் உள்ளடக்கப்படுகின்றனர்.

அப்படியானால் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை சிங்களவர்கள் யாரோடு புரிகிறார்கள்? உண்மையில் இந்தியாவுக்கு எதிரான யுத்தத்தைத்தான் சிங்களவர்கள் தமிழர்களோடு புரிகிறார்கள். சிங்களவர்களுக்கு  எதிரான இந்தியாவின் யுத்தத்தைத்தான் ஈழத்தமிழர் சிங்களவர்களுடன் புரிகின்றனர்.

 ஈழத் தமிழர்கள்  எவ்வளவு அப்பாவித்தனமாக  இந்திய -- இலங்கை  அரசுகளுக்கு இடையேயான ஆதிக்கம் - ஆதிக்க எதிர்ப்பு போட்டியின்  ஒரு பக்கவிளைவாய் அழிக்கின்றனர்  என்பது கவனத்திற்குரியது.

இதனை இன்னும் தெளிவாகக் கூறினால் இந்திய விஸ்தரிப்பு வாதத்தினது கைக்கூலிகளாக ஈழத் தமிழரை சிங்களவர்கள் கருதி,  இந்தியாவுக்கு எதிரான தமது யுத்தத்தை அப்பாவி ஈழத் தமிழர்கள் மீது முதலில் புரிகிறார்கள். இதனால்தான் ஈழத்தமிழர்களை சிங்களவர்கள்  இந்திய விஸ்தரிப்பு வாதத்தினது  கருவிகள், கையாட்கள், கைக்கூலிகள் என்கின்றனர்.

1971 ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக  ஜனதா விமுத்தி பெரமுன (JVP) மேற்கொண்ட கிளர்ச்சியின் போது போதித்த ஐந்து கருத்துக்களில் ஒன்று' இந்திய விஸ்தரிப்பு எதிர்ப்பு' என்ற தலைப்பிலாகும். இதில் தமிழர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கைக்கூலிகள் என்று போதிக்கப்பட்டது.

இதன்படி பார்த்தால் இந்தியாவுக்கெதிரான சிங்கள பௌத்த யுத்தத்தில், ஈழத்தமிழர்கள் தமக்காக அன்றி இந்தியாவின் பெயரால் அநியாயமாக கொல்லப்படுகின்றனர் என்பதே அடிப்படை உண்மையாகும்.

தமிழ்நாடு - ஈழப்போராட்டத்தின் குருவிக்கூடு.

இந்த இடத்தில் இன்னொரு வினோதமான யதார்த்தையும் பார்க்கலாம்ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சுமார் 12க்கும் மேற்பட்ட ஆயுதப் போராட்ட இயங்கங்கள் இலங்கையில் இருந்தன. அத்தனை இயக்கங்களுக்கும் தமிழகம் தான் பாதுகாப்பு அளித்தது. அனைத்து இயக்கங்களது தலைவர்களும் தமிழகத்தில் பாதுகாப்பாக இருந்தனர்.

தமிழகத்தில் இல்லாத தலைவர்கள் அனைவரும் பாக்கு நீரிணைக்கு இப்பால் இலங்கையில் அழிக்கப்பட்டனர். விடுதலைப்  புலிகள், புளொட், ரெலோ, ஈரோஸ் முதலான அனைத்து இயங்கங்களினதும் பெரும்பாலான தலைவர்கள்  இவ்வாறு  அழிக்கப்பட்டனர். எவரும் இலங்கையில் மிஞ்சவில்லை. ஈழப்போராட்டத்தை ஆரம்பித்துவைத்து, இலங்கையில் தங்கியிருந்த யாரும் இலங்கையில் மிஞ்சவில்லை. இந்த வகையில் சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து தப்பி பாக்கு நீரிணைக்கு அப்பால்  தமிழகத்திற்தான் அவர்கள் பாதுகாப்புடன் இருந்தனர்.

இந்த இடத்தில் கடினமான ஒரு விடயத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழகத்தில் காலூன்றி, தமிழகத்தை ஒரு குருவிக்கூடாகக் கொண்டிருந்த காலத்திற்தான் தமிழீழ விடுதலைப்  போராட்டம் வளர்ந்து சென்றது.

தமிழகத்திலிருந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் அந்நியப்பட்டபோது விடுதலைப் போராட்டம் அழிவுமுகம் கொண்டது. 1987 ஆம் ஆண்டிலிருந்து போராளிகள் தமிழகத்திலிருந்து அந்நியப்படத் தொடங்கினர். தமிழகத்தில் இருந்த இயங்கங்களின் தலைமைப்  பீடங்கள் எல்லாம் ஈழத்திற்குத் திரும்பின. தமிழகத்தில் இருந்த காலத்தில் தமிழக  மக்களோடு சேர்ந்து அவர்களது பாதுகாப்பு  அங்கு சாத்தியமாய் இருந்தது. ஒத்த இனச்சகோதரத்துவம் (Ethnic brotherhood) சர்வதேச அரசியலில் நிர்ணயகரமான சக்திகளில் ஒன்று.  குறிப்பாக நாடுகடந்த இஸ்லாமிய சகோதரத்துவ அரசியலிலும்,   கியூபெக் பிரஞ்சு-இன சகோதரத்துவ அரசியலிலும் இதற்கான நாடுகடந்த சகோதரத்துவ அரசியல்களின் வெற்றிகளைக் காணலாம்.

இங்கு ஒரு  நடைமுறை விடயத்தை  கருத்திற்கொள்ளத் தவறக்கூடாது. மேற்கு நாடுகளின் கடவுச் சீட்டுக்களைக் கொண்டிருந்த விடுதலைப்  புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், ரெலோ இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் சத்தியேந்திரா மற்றும் விடுதலைப் புலிகளின் துணை அரசியல் பொறுப்பாளர் லோரன்ஸ் திலகர் ஆகிய மூவரையும், 1985 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசு நாடு கடத்தியது. ஆனால் தமிழகத்தில் இதைக் கண்டித்து எழுந்த எழுச்சியினால் மூன்று நாட்களுக்குள் மூவரது நாடுகடத்தல் உத்தரவும் திரும்பப் பெறப்பட்டு, மூவரும் மீண்டும் இந்தியா திரும்பினர். மூன்று நாட்கள்கூட அந்த நாடுகடத்தல் நீடிக்கவில்லை. இது எப்படிச் சாத்தியமானது?

முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள் ஏற்படலாம். அவற்றைத் தீர்ப்பதற்குப்  பொருத்தமான மாற்று வழிகளும் உண்டு. சுதந்திர இந்திய வரலாற்றில் முழுஅளவில் மிகப்பெரிய ஹர்த்தால், கதவடைப்பு போராட்டம் நிகழ்ந்ததென்றால் அது ஈழத்தமிழர்களின் பேரால் தமிழ்நாட்டில் தான் நிகழ்ந்தது. 1983 ஆம் ஆண்டு ஈழத்தில் சிங்களர் நடத்திய கறுப்பு ஜீலை படுகொலைகளை கண்டித்து, 1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி, தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் ஹர்த்தால் அன்றைய பிரதமர் இந்திரா  காந்தியை வியப்பில் ஆழ்த்தியது. அப்போது அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் “What is happening on the island nation of Sri Lanka? It’s not other than a genocide”  எனக் கூறினார். ‘Genocide’ என்ற சொல் முதல்முறையாக , அதுவும் இந்தியப் பிரதமர் ஒருவரினால் எடுத்தாளப்பட்டது. தமிழகத்தின் எழுச்சியைக்  கண்டு, ஹர்த்தாலைக் கண்டு அசந்துபோன நிலையில் இந்திராகாந்தி அப்படிச் சொன்னார். இந்த வகையில் தமிழகத்தின் பலம்  ஈழத் தமிழருக்கு  மிகவும் முக்கியமானது என்பது தெரியவரும். இது புவிசார் வரலாற்று பண்பாட்டு  அடிப்படையைக் கொண்டது. இது ஒரு நடைமுறை யதார்த்தம்.

 

பாக்-நீரிணைப்பு ஈழ ஆயுதப் போராட்டத்தை இந்தியாவுடன் இணைத்த தொடுகயிறு.

இங்கு உங்களுக்கு மிகவும் துயரகரமான, கண்ணுக்குத் தெரியக்கூடிய கடுமையான அனுபவங்களைச் சுட்டிக்காட்ட முடியும். ஒரு காலத்தில், இலங்கையில் போராளிகளின் தாக்குதல்கள் இடம்பெறும். தாக்குதல் நடந்து சிறிது நேரத்துக்குள் குறித்த இயக்கத்தின் தலைவர், அவர் விடுதலைப்  புலிகளின் தலைவராகவோ, புளொட் இயக்கத்தின் தலைவராகவோ அன்றேல் ரெலோ இயக்கத்தின் தலைவராகவோ இருக்கலாம், சிறிது நேரத்துக்குள் தமிழகத்தில் பாதுகாப்பாக வந்து இறங்கி இருப்பார்.  

பெர்னான்டோ(S.A. N. Fernando) அதுலத் முதலிக்கு சொல்லிய ஆலோசனை

இதைவிட.  ஈழத் தமிழரது போராட்டத்திற்கான அடிப்படை பின்புல யதார்த்தத்தினை புரிந்துகொள்வதற்கு  ஏதுவான  இன்னுமொரு முக்கிய  அனுபவம் ஒன்றை குறிப்பிடலாம். எனது நண்பர் S.A. N. Fernando இவர் ஜனதா விமுர்த்தி பெரமுன (J.V.P) அமைப்பின் தலைவர் ரோகண விஜயவீரவினது மனைவியின் உடன் பிறந்த அண்ணன். முழு இலங்கைக்குமான ஆசிரியர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்தவர். நல்ல மனிதர். அவர் உயிருக்கு J.V.P. யினாலும் இலங்கை அரசாங்கத்தினாலும் ஆபத்து இருந்தது. அதனால் புகலிடம் தேடி யாழ்ப்பாணம் வந்தார். அப்போது பல்வேறு விடுதலை இயக்கங்கள் இருந்தன.  அவரை யார் சுடுவார்? யார் சுடமாட்டார் என்பது தெரியாது. சிங்களத்தில் பேசினாலே அவரை அரசின் உளவாளி என்றெண்ணி சுடப்படக்கூடிய ஆபத்து இருந்த காலம்.

 அப்போது அவர் என்னை அணுகினார். அவருக்குப் பாதுகாப்பு அளிக்கமுடியுமா எனச் சிந்திக்கப்பட்டது. இது குறித்து முக்கிய  பல  இயக்கங்களுடனும் பேசினேன். எல்லோரும் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்கள். அவர் பாதுகாக்கப்பட்டார். தெற்கில் பிரச்சினை ஏற்பட்டபோது எங்கள் போராட்டக் களத்தில் அவருக்குப் பாதுகாப்பு சாத்தியமாய் இருந்தது. அதனால் அவர் எங்களிடம் வந்தார்.

அவ்வாறு அவர் என்னுடன் நெருங்கியப் பழகிய காலத்தில் அவரது நெருங்கிய முன்னாள் நண்பர் ஒருவர், தன்னிடம் கூறியதாக என்னிடம் அவர் கூறிய தகவல் ஒன்றினை இங்கு உங்களுடன்  பகிர்ந்து கொள்கின்றேன்.

1983 கறுப்பு ஜீலை இனப்படுகொலைக் கலவரம் நிகழ்ந்தபோது, அதற்கான பழியை அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன  J.V.P மீது போட்டார். இதனால் J.V.P  தலைவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டனர்.  அதில் J.V.P. யில் இருந்த உயர் குழாத்தைச் சேர்ந்தவரும் பிரான்ஸில் இராணுவ விஞ்ஞானம் (Military. Science) படித்திருந்தவருமான ஒருவர் திருகோணமலை துறைமுகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.   அப்போது அவரும் கைதுசெய்யப்பட்டார்.

 கைதுசெய்யப்பட்ட பின் இராணுவ விஞ்ஞானம் படித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அப்போது அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலிக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது அந்த நபரை லலித் தன்னிடம் அழைத்துவரச் செய்து அவருடன் சாதாரண நிலையில் உரையாடுகையில்  லலித் பின்வருமாறு வினவினார்.  “இப்போது எங்களுக்குள்ள பிரச்சினை ' பயங்கரவாதிகள்தான்' ('Terrorists') பிரான்சில் இராணுவ விஞ்ஞானம் கற்றுக் கொண்டவர் என்ற வகையில் (Military Science) '  பயங்கரவாதிகளை'  ஒழிக்க  ஒரு வழி சொல்ல முடியுமா ''  என்று  கேட்டார். 'அதற்கான பதில் மிகவும் எளிதானது ' என்றுகூறி பின்வருமாறு அந்த நபர் பதில் சொல்கிறார்.

 அதாவது பலஸ்தின விடுதலைப் போராட்டம் முற்றிலும் அரபு நாடுகளில் தங்கியிருக்கிறது. தமிழ்ப் பயங்கரவாதிகள் தமிழகத்தில் தங்கியிருக்கிறார்கள் என்ற எதார்த்தத்தை முதலில் கருத்தில் கொள்ளவேண்டும்.  பலஸ்தினருடைய இராணுவ முகாம்கள், அகதிமுகாம்கள், வளங்கள் எல்லாம் லிபியா, லெபனான், சிரியா, ஜோர்டான், எகிப்து முதலான அரபு நாடுகளில் இருக்கின்றன.  அந்த நாடுகளில் உள்ள பலஸ்தின முகாம்கள்மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்துவதுபோல, உங்களால் தமிழகத்தில் தாக்குதல்  நடாத்த முடிந்தால், தமிழ்நாட்டுக்கும் விடுதலை இயக்கங்களுக்குமான தொடர்பை முறித்துவிட முடிந்தால், புலிகள், புளொட் மற்றும் ரெலோ பயங்கரவாதிகளை நீங்கள் எளிதில் அழிக்கலாம்.என்ற பின்புல யதார்த்தத்தை எடுத்துக் கூறினார். அதன்பின் அந்தக்கைதி விடுதலையானார்.

நேரடியான அர்த்தத்தில் நமக்கு தமிழகம் பெரும் மக்கள் பலம். அதாவது, பலம் என்பது அரசியல் அர்த்தத்தில் ஆயுதபலமோ இராணுவக் கட்டமைப்போ அல்ல.  நிலம் - மக்கள் - கூட்டிணைப்பு (Land and People, alliances)   இவைதான் அடிப்படைப் பலங்கள். அதாவது மக்களும், நிலமும், கூட்டணிகளும்தான் மிகவும் அடிப்படையான பலம். இருவரின் இனம், மொழி ஒன்றே. இவற்றோடு இந்த மக்களிடம் ஈழத்தமிழரை ஒத்த திரண்ட பண்பாடு இருக்கிறது. இவை சாதாரணமானவை அல்ல.

இற்றைக்கு 80,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மானிடவியல் வரலாறு தமிழகத்துக்கு உண்டு. இந்தியாவிலேயே அதிக நீண்ட வரலாறு கொண்ட மனிதர்கள் மதுரையில் வாழ்கிறார்கள். இவ்வாறு நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட மக்களிடம் ஒரு அரசியல் கிளர்ச்சி எழும்போது அது பற்றிப்பிடித்து எழும். தலைவர்களோ, நபர்களோ, கட்சிகளோ முக்கியமல்ல. மண்ணும் மக்களுந்தான் முக்கியம்.

ஈழத்தமிழர்கள், தமிழகத்தில் அல்லது இந்தியாவில் ஒரு கட்சிக்குச் சார்பாகவோ, ஒரு நபருக்குச் சார்பாகவோ ஒருபோதும் நிலையெடுக்கக்கூடாது. மாறாக  தமிழ்நாடு, தமிழக மக்கள் இவைதான் ஈழத் தமிழரின்  புவிசார் வரலாற்றுப் பலம்.  இதன் தொடுகயிறு  இந்திய அரசு. இந்த வகையிற்தான் அரசியலை ஈழத் தமிழர் பார்க்க வேண்டும், அப்படிப்பார்த்தால், தமிழகம் பாக்கு நீரிணையோடு இணைந்திருக்கிறது. இந்தப் பாக்கு நீரிணையை புலிகள் இந்தியாவுடன் சேர்ந்து ஆண்டார்கள். இன்னொரு வகையில் அவர்கள் இந்துமாகடலையே ஆண்டார்கள். ஒரு கட்டத்தில் அமெரிக்காகூட இதற்கு மாறாக எதனையும் செய்யமுடியவில்லை. ரஷ்யாகூட இந்தியாவுடன் இணைந்துதான் இங்கு எதையும் செய்யமுடிந்தது.

புலிகளுக்கும் ஆயுதப்  போராட்டத்திற்கும் இந்தியாவுக்கும் இடையே பாக்கு நீரிணையில் ஒருவகைக் கூட்டிணைவு இருந்தது. பின்பு இப்பாக்கு நீரிணைத் தொடுகயிறு அறுந்துபோனது. ஆனால் விடுதலைப் புலிகளிடம் சர்வதேச ரீதியில் பதிவுசெய்யப்பட்ட சுமார் 24 எண்ணிக்கையிலான சரக்குக்கப்பல்கள் இருந்தன. அந்த 24 கப்பல்களும் பெருங்கடல் வழியாக விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடியனவாய் இருந்தன.இந்தப் பின்னணியில் புலிகளுக்குத் தமிழ்நாடு தேவைப்படவில்லை. தமிழ்நாடு ஒரு கூடாரமாக இருக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. பெருங்கடல் வழியாக ஆயுதங்களைக் கொண்டு வந்தார்கள்.

 ஆனால் 2006 ஆம் ஆண்டில் புலிகளின் மொத்தம் 13 கப்பல்கள் இந்தப் பெருங்கடலில் அழிக்கப்பட்டன. 2006 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுக்குள் 08 அல்லது 09 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இதில் 03 கப்பல்கள் வங்காளா விரிகுடாவிலும் 05 கப்பல்கள் இந்துமா கடலிலும் அழிக்கப்பட்டன. இதில் சுமார் 5 கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா. மூன்றுக்கும் குறையாத கப்பல்களை இந்தியாவோடு இணைந்து இலங்கை அரசு அழித்தது என்று கருதப்படுகிறது.

 இந்துமா கடலில் பாக்கு நீரிணையை ஒட்டி புலிகள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் ஆயுத விநியோகம், மக்கள் தொடர்பு, எரிபொருள், உணவுப்பொருள் மற்றும் மருந்துப் பொருள்களின் விநியோகம் அனைத்தும் சீரான முறையில் இருந்தன. ஆனால் பாக்கு நீரிணையில் இந்திய அரசுடன் இணைந்து தாங்கள் கொண்டிருந்த கட்டுப்பாட்டை இழந்த பின்னர், பெருங்கடல் வழியாக கப்பல்களின்மூலம் ஆயுத விநியோகம் நிகழும்போது அதனைக் கண்காணித்துத் தாக்கக்கூடிய வல்லமை வல்லரசுகளுக்கு இருந்தது.

இதனால் புலிகளின் பெருங்கடல் வழியான விநியோகத்தைக் குறிவைத்து வியூகங்களை அமைப்பது சாத்தியமானது. பெருங்கடலின் மீது எந்த விதமான தாக்குதல்களையும் செய்யக்கூடிய வல்லமை வல்லரசுகளுக்குண்டு.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டது முள்ளிவாய்க்காலில் அல்ல. அவர்கள் தோற்கடிக்கப்பட்டது பெருங்கடலில்.

வரலாற்றை  பொதுவாக பார்க்குமிடத்து  நெப்போலியன் 1815 ஆம் ஆண்டு வாட்டர் லூவில்  ( Waterloo)  தோற்கடிக்கப்பட்டார் என்பர். ஆனால் உண்மையில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டது 1805 ஆம் ஆண்டு இடம்பெற்ற ரபல்கார் போரிலேயே (Battle of Trafalgar) என்று வரலாற்று ஆசிரியர்கள் வர்ணிப்பர். ரபல்கார் போரிற்தான் அவருடைய பெருங்  கூட்டுப்படையும் அழிந்தது. அரசியல் இராணுவ அர்த்தத்தில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டது  தரையில் அல்ல ; கடலில் ,  ரபல்கார் போரிலேயேயாகும். இவ்வாறே புலிகள் தோற்கடிக்கப்பட்டதும் முள்ளிவாய்க்காலில் அல்ல, தரையிலல்ல, இந்தியப் பெருங்கடலில்.

அதுவும் , பெருங்கடலில்.2005 ஆம் ஆண்டை ஒட்டி சர்வதேச அரசியலில் இந்துமா கடல் சார்ந்து எழுந்த புதிய அரசியற் கொந்தளிப்பின் பின்னணியிற்தான் இத்தகைய அரசியற் பூகம்பம் நிகழமுடிந்தது. பாக்கு நீரிணை சார்ந்த இந்த இந்துமா கடல் சுழிக்குள் முதலில் மூழ்கியது ஈழத்தமிழர்; அதன் பின்பு  சிங்கள அரசியலும் இந்துமகா கடல் அரசியல் புயலுக்குள் அலைமோதுகிறது. அதில் முதல் கட்டமாக கோட்ட பாயா தலைமையில் ராஜபக்ஷாக்களும் மூழ்கிப் போயினர்.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டது கடலில். அந்தக் கடல் ஈழத்தமிழர்களும் இந்தியாவின் பகுதியான தமிழகமும் பங்குபோட்டிருக்கும் கடல்.

பாக்கு நீரிணையின் ஒருபகுதி ஈழத்தமிழர் கையிலும் அதன் மறுபகுதி தமிழகத்தின் கையிலும் இருக்கிறது. இந்த இரண்டு கடற்பகுதிகளும் நம் இருவரினதும் கையில் இருக்கும்  வரை இந்தக் கடலையும் மக்களையும் எந்தப் பெரு வல்லரசுகளாலும் ஆழமுடியாது. வெளி வல்லரசுகள் இந்தக் கடலை ஆக்கிரமிக்காமல் இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும் என்றால்  தமிழீழத்தை அங்கீகரிப்பதைத்  தவிர வேறுவழி எதுவும் கிடையாது.

பாதுகாப்புக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வகையில் இந்தியாவிற்கு முகம் கொடுத்தாற் போல தமிழீழ மண்ணின் அமைவிடம் அமைந்துள்ளது. அத்துடன் இலங்கை தீவில் மூன்றில் இரண்டு பகுதி கடற்பரப்பை தமிழீழப் பகுதி கொண்டுள்ளது. அது சிங்கள ஸ்ரீலங்காவையும் கவ்விப் பிடிக்கக்கூடிய கடல் சார்,  நிலம் சார் பகுதியாகும்.

தமிழீழம் ஓர்  அரசாக உருவாகும் இடத்து சிங்கள ஸ்ரீலங்கா தன் தீவுத் தன்மையை இழந்துவிடும். சிங்களச் ஸ்ரீலங்காவின்   பலம் அதன் தீவுத்தன்மைதான்.  ஆனால் தீவு இரண்டாகப் பிரியுமிடத்து சிங்கள அரசு  தன் தீவுத்தன்மையை இழந்து  இந்துமாக்கடலில் தனக்கிருக்கக்கூடிய பேரபலத்தையும் இழந்திடும்.  அப்போது  தீய வெளிச் சக்திகளுடன் இணைந்து சமாதானத்துக்கு பங்கமாய் இருக்கக்கூடிய பலத்தையும்  சிங்கள அரசு இழந்துவிடும்.

 ஈழத்தமிழர்கள் வாழவேண்டும் என்றால் அவர்களுக்கு  தமிழகப் பின்புலம்  வேண்டும். இந்தியாவின் நீட்சியான தமிழகம் இல்லை என்றால் ஈழத்தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை. அதேவேளை ஈழத்தமிழர் அழிக்கப்பட்டு, இலங்கைத்தீவு பெரிதும் சிங்கள பௌத்த  மயமாகிவிட்டால், நீண்ட  காலத்தில் தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பாதுகாப்பு அறவே இருக்காது. பாக்கு நீரிணையோடு இணைந்த ஈழத்தமிழ் அரசே, இந்தப் பிராந்தியத்தினது சமாதானத்துக்கும் பாதுகாப்புக்குமான அடிப்படை என்பது எவ்வளவு விரைவாக உணரப்படுகின்றதோ அவ்வளவுக்கு அது  இருதரப்பிற்கும் நன்மை தரக்கூடியதாகும்.

 நாம் பகைமமைகளை உற்பத்தி  செய்யும் இயந்திரங்களாக இருக்கக்கூடாது. நட்பை அறுவடை செய்யும் விளைநிலங்களாக விளங்க  வேண்டும். உயிரை உயிருண்டு வாழ்வதே உயர் வாழ்வு. உயிர்வாழ்வில் தர்மம் என்று எதுவும் கிடையாது. கீரை சாப்பிட்டாலும் உயிர்தான். கீரையிலுள்ள புழுவை அகற்றினாலும் அதுவும் உயிர்தான். ஆக, உயிரை உயிருண்டு வாழ்வது உயிர்வாழ்வு.  தூய தர்மவான் என்றும் நீதிமான் என்றும்  எந்தொரு மனிதனும் இல்லை; எந்தொரு அரசும் இல்லை;  எந்தொரு மதமும் இல்லை. அது போலவே உயிரை உயிருண்டு வாழும்  உயிரியலிலும் அரசியலிலும்   நலன்களுக்கு இடையிலான போட்டிக்களங்களே உள்நாட்டு அரசியலும்,  வெளிநாட்டு அரசியலும் , வாழ்வியலுமாகும். எனவே நாங்கள் இத்தகைய எல்லாவித நலன்களோடுந்தான் அரசியல் வித்தைகளை  உறவாட வேண்டும்.

தமிழீழம் - இந்தியாவின் பாதுகாப்பு மூலைக்கல் (Cornerstone)

இறுதியான விடயம் இதுதான். வாய்ப்புக்களை கையாளும் கலைதான் இராஜதந்திரம். வாய்ப்புக்களைச் சரியானமுறையில் கையாள  வேண்டும். எங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒரே ஒரு வாய்ப்பாக ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல தமிழகமும் ஈழத்தமிழரும் உள்ளனர். புவியியல் சார்ந்த கட்டமைப்பின் அடிப்படையில் பார்க்கும்போது, உலக வரலாற்று ஒழுங்கில் தமிழகந்தான் ஈழத்தமிழர்களுக்கான உண்மையான நண்பன். இன்னொரு வகையில் பார்த்தால் உலக அரங்கில் இந்தியாவின் ஒரு பகுதியாகிய தமிழகத்தின் உறவு ஈழத்  தமிழர்களுக்குத் தலையானது.

இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கும் குறையாத. நவீன மனிதகுல வரலாற்றின் சாராம்சமாகச் சொல்வதென்றால், இந்தியாவோடு இணைந்த தமிழகம் இல்லையென்றால் ஈழத்தமிழர்கள் இல்லை. இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்கள் இல்லையென்றால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமிழகத்திற்கு மூலக்கல் அல்லது மூலைக்கல்  இல்லை. தமிழீழம் இல்லையென்றால்  இந்துமாகடல்  தழுவிய மட்டத்தில் தமிழகம் இந்தியாவுக்குப் பாதுகாப்பான மூலைக்கல்லாக (CornerStone) அமைந்திட முடியாது. எனவே ஈழத்தமிழ் மண்தான்  தமிழகத்தின் வழியே இந்தியாவுக்கு மூலைக்கல் அல்லது மூலக்கல்.

 தமிழகத்தையும் இந்திய அரசையும் அணைத்துத்தான் தமிழீழப் போராட்டத்தை தோற்கடிக்க முடியும் என்பதில் சிங்கள இராஜதந்திரிகள் திடமாகினர். அதேவேளை ஈழத் தமிழரை தோற்கடிப்பதன் வாயிலாக இலங்கையில் இந்தியாவுக்கு ஏதுநிலை அல்லது வாய்ப்புகள் இல்லாத நிலைமையை உருவாக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் முன் அறிவுடன் செயல்படலாயினர்.

 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய --  ஒப்பந்தத்தின் வாயிலாக ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்கும் இடையே பகைமையை உருவாக்குவதில் சிங்களத் தரப்பு வெற்றி பெற்றது. இதன் வாயிலாக  இந்தியா -- ஈழத் தமிழர் என்ற இரு தரப்புகளுக்கும்

பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதில் சிங்கள தலைவர்களும் இராஜதந்திரிகளும் தமது எண்ணங்களுக்கேற்ற  வெற்றிகளை அடைந்து வருகின்றனர்.

 இந்துமாகடல் சார்ந்து உலகம் தழுவிய நலன்களோடு இலங்கைத் தீவையும் இனப்பிரச்சினையையும் உலக வல்லரசுகள் கையாள்கின்றன. அதாவது இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்பான இன்றைய நிலையில்,   ஒரு வாகனத்தை முழுமையாக விற்றுப் பெறும் இலாபத்தைவிட அதனை உதிரிப் பாகங்களாக விற்றுப் பெறும் இலாபம் அதிகமாவது  போல, (Asset stripping)  இலங்கைத் தீவை துண்டுதுண்டாக விற்று, வாங்கி  இலாபம் பெறும்  வல்லரச அரசிய்லும் பாக்கு நீரிணையைப் பின்னணியாகக்   கொண்டே கரையேறுகின்றது.

 ஈழத் தமிழருக்கான விடுதலைப் போராட்டத்தில் பாக்கு நீரிணையையும் இந்துமா கடலையும் மையமாகக் கொண்ட சிந்தனை முதன்மையானது. இத்தளத்தில் ஊற்றெடுத்துத்தான் 21 ஆம் நூற்றாண்டின் இன்றைய. அரசியல் வடிவம் பெற்றுவரும் புதிய சர்வதேச அரசியல் சூழலில்  அதற்கிணங்கத்  தமிழர் தம்மை தகவமைத்து முன்னேற வேண்டியது  அவசியம். இங்கு கற்பனைக்கும், விதண்டா வாதத்திற்கும் நான்பிடி -- நீபிடி என்ற ஏட்டிக்குப் போட்டி அரசியலுக்கும் இடமில்லை.  அப்படி  அறிவார்ந்த நடைமுறை அரசியலுக்கு மாறாக கற்பனாவாத ஏட்டிக்குப் போட்டி அரசியலில் ஈடுபடுவோரால்    தமிழினத்தை அழிப்பதில்   முதலாவது பரிசைப்  தட்டிக்கொள்ள முடியுமே தவிர தமிழ்த் தேசியத்தை வாழவைக்க முடியாது.

 தமிழகம் ஈழத்  தமிழர்களுக்கான குருவிக்கூடு. மருத்துவப் பயன்பாட்டு அர்த்தத்தின்படி எதனையும் தனியாகப் பார்க்காது, அனைத்தையும்  ஒன்றுடன் ஒன்று தொடர்புறுத்தி ஒன்றிணைந்த வடிவத்தில் அணுக (Holistic Approach) வேண்டும்.

இறுதி அர்த்தத்தில், இங்கிருந்துதான் நாம் எதையும் கட்டியெழுப்ப வேண்டும். அதாவது  நாங்கள் வீழ்ந்தது பாக்கு நீரிணை அரசியலில்.  எங்கே வீழ்ந்து கிடக்கிறோமோ அங்கிருந்துதான் நாம் எழுந்துவர வேண்டும். அதுவும் பாக்கு நீரிணையில் இருந்துதான் எழுந்துவர வேண்டும். அறிவார்ந்த வகையில் திடமான வார்த்தையில்   சொல்வதென்றால் விடுதலை முற்றிலும் சாத்தியமானது.

 தனிப்பட்ட  விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் அறிவின் மீதான பற்றோடும் நடைமுறை யதார்த்தத்தின் மீதான நம்பிக்கையோடும் அரசியலை  முன்னெடுக்க வேண்டும். களயதார்த்தத்துக்குப் பொருத்தமான, அறிவார்ந்த

நல்லதை நோக்கிய விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையே (Praxis)  தீர்மானமானகரமான பாத்திரத்தை வகிக்க  வல்லதாகும்.

 ---------------------------------------

  

திங்கள், 25 ஏப்ரல், 2022

"கொழும்புக் கொந்தளிப்பும் ஈழத்தமிழரும் கற்பனையும் யதார்த்தமும் கொள்கை ஆய்வு" - உரை. பாகம் 2.

 ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களால் 24.04.2022  அன்று நடாத்தப்பட்ட "கொழும்புக் கொந்தழிப்பும் ஈழத்தமிழரும் கற்பனையும் யதார்த்தமும் கொள்கை ஆய்வு" என்கிற உரையாடல் வகுப்பின் இறுதிப் பகுதி இங்கே பிரசுரமாகிறது.

ஸ்பெயினில் 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் போது ஐரோப்பிய நாடுகள் ஸ்பெயினை பாதுகாக்க முற்பட்டன. அது ஏன் என்பது ஒரு அரசியல் பொருளாதார விளக்கமூடாக சொல்லலாம். ஸ்பெயினின் பிரச்சனை என்பது ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த வரையில் அவர்களின் சுமையாக மாறும். எனவே ஸ்பெயினின் பிரச்சனையை தீர்க்காமல் பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி போன்ற நாடுகள் நிம்மதியாக இருக்க முடியாது. எனவே இந்த நாடுகள் எல்லாம் சேர்ந்து ஐரோப்பிய யூனியன் எல்லாம் சேர்ந்து ஸ்பெயினை இரவோடு இரவாக அதன் பொருளாதார பிரச்சனைகளிலிருந்து விடுவித்தார்கள்.

 இலங்கையின் பொருளாதார பிரச்சனையை தீர்க்க இப்போது பல நாடுகள் முன் வருகின்றன. அதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. ஸ்பெயினில் அதை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படை தீர்மானத்திலிருந்த ஸ்பெயினுக்கு பொருளாதார உதவி வழங்கப்பட்டது. இலங்கையில் அப்படி அல்ல, "இறால் போட்டு சுறா பிடிக்கிறது போல." இலங்கைக்கு பல நாடுகள் உதவப் போகின்றன. சர்வதேச நாணய சபை (IMF) உதவப் போகிறது, உலக வங்கி (world bank) உதவப் போகிறது. அமெரிக்கா உதவப் போகிறது. ஜப்பான் உதவப் போகிறது. இந்தியா, சீனா போன்ற நாடுகள் எல்லாமே இலங்கைக்கு உதவப் போகின்றன. இந்த நாடுகள் தங்களுடைய நலன் நோக்கு நிலையில் நின்று கொண்டு தான் இலங்கைக்கு உதவப் போகின்றன.

எனவே இலங்கையின் பிரதான பிரச்சனை என்னவென்றால் முதலாவதாக சொன்னது போல அமெரிக்க அரசியல் என்பது உலகம் பற்றியது. இலங்கையில் தமக்கு தேவையான அரசியல் இலாபத்தை எவ்வாறு தேடுவது என்பது பற்றியது தான். இலங்கைக்கு பணத்தை கொடுத்து இந்த அரசாங்கத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும். ஒரு குறுகிய காலத்திற்கு இவ்வாறு தக்க வைக்க இவர்களால் முடியும். இது முதலாவது பிரச்சனை. இனப்பிரச்சினை அப்படியே பொங்கி எழுந்து வெளியே வரும். அதனை தீர்க்க மாட்டார்கள்.  

இந்த பின்னணியில் இலங்கையினுடைய பிரச்சனையை கைத்தொழில் மயமாக்கம் செய்தோ, விவசாயத்தை நவீன மயப்படுத்தியோ, மீன்பிடி தொழிலை நவீன மயப்படுத்தியோ இலங்கை உள்ளூர் உற்பத்தியை உருவாக்கியோ இவர்கள் தீர்க்க போவதில்லை. மாறாக வெளிநாடுகளில் தங்கள் பண்டங்களை வாங்குவதற்கு கடன் கொடுக்க போகிறார்கள்.  இதன் மூலம் பணத்தை கொடுத்து இலங்கைக்கு தங்களுடைய வர்த்தகத்தையும் தங்களுடைய அரசியல் பிடியையும் பிடிக்க போகிறார்கள்.

இலங்கை தன்னுடைய  இறைமையை எல்லா வழிகளிலும் இழந்தது தமிழ் மக்களை அழித்ததன் மூலம்தான். எல்லா நாடுகளிடத்திலேயும் கை ஏந்தி தன் முழு இறைமையையும் விற்க போகிறது இலங்கை. தன்னுடைய சகோதர இனத்தோடு இலங்கையின் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு ஈழ தமிழர்களும் இலங்கையிலுள்ள ஏனைய இனங்களும் சிங்கள மக்களும் சேர்ந்து இறைமையை பங்கிட்டு வாழ்வதற்கு பதிலாக, அரசியல் அதிகாரத்தை ஒருவருக்கு ஒருவர் பங்களித்து வாழ்வதற்கு பதிலாக இலங்கை இறைமையை முற்றிலும் விற்று வாழ்கின்ற ஒரு அரசியலை இலங்கையின் சிங்கள தலைவர்கள் அரங்கேற்றி விட்டார்கள். இதிலிருந்து மீள முடியாது. எனவே தற்காலிகமாக ஏற்படக்கூடிய பொருளாதார மீட்சி என்பது அந்த அரசை பாதுகாப்பதோடு சம்பந்தப்பட்டது. இறுதியாக ஒரு கட்டத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வு பற்றிய போராட்டம் திரும்பி வரும்.

அமெரிக்காவிற்கு எப்படி அமெரிக்கா எனும் நாடு உலகமாக இருக்கிறதோ அவ்வாறே சீனாவிற்கு சீனா என்ற நாடு என்பது இந்துமா கடலாக இருக்கிறது. சீனாவின் கண்ணோட்டத்தில் இந்துமா கடல் சீனாவின் ஒரு பகுதி. சீனா தெளிவாகச் சொல்கிறது. இலங்கையில் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் கை ஓங்கி இருக்கின்ற நிலையில் சீனா சற்று ஓரடி ஈரடி பின்னே போயிருக்கிறது.  இருந்தாலும் சீனாவினுடைய இறுதி தீர்வு அதனுடைய கட்டமைப்பான அபிவிருத்தி வளர்ச்சி தான். அது இலங்கையோடும் பாகிஸ்தானோடும் பர்மாவோடும் சேர்த்து கடல் ரீதியாக தன்னுடைய கட்டமைப்பை விருத்தி செய்கிறது. எனவே அதிலிருந்து சீனா பின் வாங்கி போய்விட முடியாது. பின் வாங்கினால் இந்தியா சீனாவிற்கு உலகம் இல்லை.

இந்தியாவிற்கு இலங்கையில் ஒரு தளம் தேவையில்லை. ஏனென்றால் 7500 கிலோமீட்டர் நீளமான இந்துமா கடல் கரையோரத்தை கொண்ட இந்தியாவிற்கு இலங்கையில் தளம் தேவையில்லை. மாறாக இந்தியாவிற்கு தேவைப்படுவது என்வென்றால் இலங்கைக்கு எந்தவொரு நாடும் வரக்கூடாது என்பது தான். சீனாவோ அமெரிக்காவோ இலங்கையில் தளம் அமைக்க கூடாதென்பது தான் இந்தியாவின் தேவை. இந்துமாகடல் இல்லாத சீனாவிற்கு தான் இலங்கை தேவை.

இலங்கையை பொறுத்தவரையில் இந்தியா அப்படி அணுகும் என்று தெரிந்திருப்பதனால், இந்தியா எப்பொழுதுமே அனுசரித்துப் போகும் என்று தெரிந்து இருப்பதனால் நெருக்கடி வரும்போது இந்தியாவிடம் இலங்கை காசு வாங்குகிறது. காசு வாங்கிக் கொண்டு நாளைக்கு கையை விடும். இன்றைக்கு இருக்கின்றவர்கள் இன்னுமோர் ஐந்து வருடங்களில் இருப்பார்கள் என்று இல்லை, இன்னுமொரு புதிய அரசாங்கம் வரும். அது இந்தியாவுடன் சுமூக உறவு வைத்திருக்க வேண்டுமென்பது நிபந்தனை கிடையாது. அவர்கள் தங்களது சூழலுக்கு பொருத்தமானவர்களுடன் உறவை வைத்திருப்பார்கள்.

ஆனால், கட்டமைப்பு என்பது பலமானது. சீனா இலங்கையை கட்டமைப்பு வளர்ச்சியூடாக அணுகுகிறது. இந்தியா உதவி செய்து இலங்கையை தன்னுடன் அணைக்கப் பார்க்கிறது. உதவி செய்யும் உறவு ஒரு நிமிடத்தில் அற்று போகலாம். கட்டமைப்பை வெட்ட முடியாது. இந்தவகையில் இன்று இந்தியா வைத்து இருக்கின்ற மென்மையான போக்கை நாளை கைக்கொள்ள முடியாது. இந்தியா விரும்பினாலும் கைக்கொள்ள முடியாது. இனப்பிரச்சினை பூகம்பமாக எரிமலையாக  எழும்பும். அது தீர்க்கப்படாது. ஈழத்தமிழர்கள் பலமான பாரம்பரிய கலாச்சார பின்னணியை கொண்டவர்கள். இந்த பிராந்தியத்தில் தென்னிந்தியாவுடன் சேர்த்து அவர்களுக்கு நீண்ட வரலாறு உண்டு.

இதுவரை நாங்கள் இலங்கையினுடைய பிரச்சினை தீர்க்கப்படாத அடித்தளத்தை கொண்டது என்பதையும், அது அரசியல் பொருளாதார ரீதியாக பொருட்களை வாங்கி விற்கின்ற ஒரு தரகு வர்த்தக நாடாக இருக்கிறது என்பதனையும் நாங்கள் கருத்தில் கொள்வோம். ஆனால் தீவாக இருக்கிற நாடு மீனை இறக்குமதி செய்கிறது எனும் துயரத்தை புரிந்து கொள்வதில் இருந்து இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரத்தை பார்ப்போம். ஈழத்தமிழர்களுடைய மூளை இலங்கையினுடைய அரசை கட்டமைக்க பயன்படவில்லை. ஈழத்தமிழர்கள் இலங்கை அரசிற்கு விசுவாசமாக இல்லை, சம்பளம் பெறுகின்ற உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அது வேற விடயம். ஆனால் இலங்கையை கட்டி வளர்க்க வேண்டும் என்ற பற்று பாசத்தோடு இலங்கை தமிழர்களுடைய மூளை இலங்கை அரசுக்கு உதவவில்லை. உதவவும் மாட்டாது. அந்த சிந்தனையோடு நாங்கள் யாருமில்லை. ஆதலால் ஈழத்தமிழர்களுடைய மூளை வளம் என்பது இலங்கையை கட்டியெழுப்ப போவதில்லை.

இலங்கை சிங்களவர்களுடைய மூளை தமிழர்களை ஓடுக்குவதிலேயே திருப்பப்பட்டிருக்கிறது. எனவே அதுவும் நேர்மறையான பாத்திரத்தை கொள்ளாது. சிங்களவர்களோடு இருக்கின்ற நிபுணர்கள் அறிஞர்கள் எல்லோரும் தமிழர்களை எவ்வாறு ஒடுக்குவது என்பதற்கு தங்களுடைய மூளையை செலவழிக்கின்றார்கள். தமிழ் தரப்பு தம்மை மீட்பதற்கு மூளையை எவ்வாறு பயன்படுத்துவது என்ற சிந்திப்பது குறைவு. அவர்கள் வெளிநாடுகளுக்கு போய் விடுகிறார்கள். அதிலிருந்து தமிழ் தரப்பு தனது மூளையை பயன்படுத்துகிற ஒரு கட்டம் வரும். அது தவிர்க்க முடியாதது. நிச்சயமாக வரும். இதை நான் கற்பனையில் சொல்லவில்லை. இதற்கு ஒரு யதார்த்தம் உண்டு.

சரி இப்படிப்பட்ட இந்த நிலையில் நாங்கள் அரசியல் பொருளாதாரம் பற்றி உள்நாட்டு, சர்வதேசம், பூகோளம் என்ற மூன்று அடுக்குகளிலும் வைத்துப் பார்ப்போம். இப்பொழுது பாருங்கள்.
வெறும் உள்நாட்டு கண்ணோட்டத்தோடு  இலங்கை அரசியலை நீங்கள் பார்த்தால் நிச்சயம் தோல்வியடைவீர்கள்.
இந்தியாவை வைத்து மட்டும் பார்த்தால் தோல்வியடைவீர்கள், அமெரிக்காவை வைத்து மட்டும் பார்த்தால் தோல்வியடைவீர்கள். ஆனால் இந்த மூன்று அடுக்குகளிலும் பார்த்தால் தோல்வியடையமாட்டோம்.

உலக அளவில் முதலாம் உலக மகா யுத்தம் முடிந்த பின்பு லெனின் தன்னுடைய சோஷலிச பொருளாதார கொள்கை தோல்வியடைந்ததை உணர்ந்தார். எனவே புதிய பொருளாதார திட்டம் என்கிற கொள்கைக்கு போனார். அங்கு கலப்பு சந்தை பொருளாதாரத்தை கொண்டு வர முற்பட்டார். புதிய சிந்தனை தேவை என்பதை லெனின் உணர்ந்தார் என்பதை சுட்டிக்காட்டவே நான் இதனை கூறினேன். இந்த 1921ஆம் 22ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு புதிய விழிப்புணர்வு ரஸ்யாவில் ஏற்பட்டது. முக்கியமாக ட்ரொஸ்கி, புக்காரின் என்கின்ற இரண்டு பேர் பொருளாதார கொள்கையை திடமாக முன்வைத்தனர். விரைவான கைத்தொழில் பொருளாதாரம் வேண்டுமென்று அவர்கள் ஆணித்தரமாக முன் வைத்தார்கள். மாறாக ஸ்டாலின் நிலச்சீர்திருத்தத்தையம் விவசாயத்தையும் முதன்மைப்படுத்தினார். அவர் சொன்னது சரி. ஆனாலும் அவற்றை விடவும் முக்கியமானதாக இருந்தது உண்மையிலேயே கைத்தொழில் மயமாக்கம் தான்.

 ட்ரொஸ்கி, புகாரின் இரண்டு பேருமே கொலை செய்யப்பட்டு விட்டார்கள். புகாரின் மரண தண்டனை விதிக்கப்பட்டு ஸ்டாலினால் கொல்லப்பட்டார். ஸ்டாலின் அனுப்பியவரால் ட்ராஸ்கி மெஸ்க்கிக்கோவில் வைத்து கொல்லப்பட்டார். இந்த இரண்டு பெரிய சிந்தனையாளர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள். புரட்சியாளர்களை கொன்றது புரட்சியாளர்கள் தான். இது புரட்சியின் வரலாற்றில் சோகமான ஒரு உண்மை. இது வரலாறு முழுக்க நிகழ்கிறது.

இந்த ட்ரொஸ்கியினுடையதும் புகாரினினுடையதுமான கைத்தொழில்மயமாக்க கொள்கையை தான் டென்ஷியாவோபிங் பின்னர் கையில் எடுத்தார். ட்ரொஸ்கியும், புகாரினும் கொல்லப்பட்ட இடத்தில் ரஸ்யா கைத்தொழில் மயமாக்கத்தில் வீழ்ச்சியடைந்தது. அது சரணாகதி அடைந்தது. அது பனிப்போரில் வீழ்ச்சியடைந்த கதை ஒரு நீளமான சோகம். இந்த காலகட்டத்தில் தான் ரஷ்யாவினுடைய வீழ்ச்சியை கண்ணால் கண்டு கொண்டிருந்த டென்ஷியாவோபிங் அந்த இருவரினது கொள்கைகளையும் கையில் எடுத்தார்.

 ஆனால், இந்த இரண்டு பேரினுடைய பொருளாதார கொள்கையிலும் முக்கியமான வேறுபாடு இருக்கிறது. புகாரினினுடையது உள்நாட்டு தேசிய அளவிலான நவீன கைத்தொழில் மயமாக்கம். ட்ரொஸ்கியினுடையது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கைத்தொழில் மயமாக்கம். இருவர் சொல்லியதிலும் முக்கியமான விடயம் என்னவென்றால் சோசலிச கட்டமைப்பிற்குள்ளே தொழில் மயமாக்கம் என்பது. ஆனால் டென்சியாவோபிங் ஏகாதிபத்திய அமைப்பிற்குள்ளே கைத்தொழில் மயமாக்கம் என்று சொன்னார். இந்த இரண்டு அமைப்புகளும் (system) வேறு வேறு.

இந்தியா ஒத்துழைப்பு பொருளாதாரத்தை (collaboration economy) ஐக் கொண்டு வந்தது. அது இந்திய பிரதமராக இருந்த நரசிம்மராவால் கொண்டு வரப்பட்டது. சீனாவில் 1979ஆம் ஆண்டு உருவாக்கபட்ட திட்டம் சுமாராக 15 வருடங்களின் பின் வளர்ச்சியை கண்ட பொழுது இந்தியா திகைத்து போய் விட்டது.  இந்தியாவில் இருந்தது ஏறக்குறைய மூடிய பொருளாதாரம். அது தேசிய முதலாளித்துவத்தோடு இருந்தது. தேசிய முதலாளித்துவத்தில் இந்தியாவினுடைய கைத்தொழில் உலக கைத்தொழில் பண்டங்களுடன் போட்டியிட கூடிய தன்மையை கொண்டு இருக்கவில்லை. எனவே இந்தியாவை ஒத்துழைப்பு பொருளாதாரத்திற்கு இட்டு சென்றவர் நரசிம்மராவ்தான்.

நான் எப்போழுதும் ஒன்று சொல்வேன். இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் இரண்டு பிரதானமான தூண்கள் உண்டு. ஒன்று, நேருவினுடைய பழைய அணிசாரா கொள்கை என்ற பிழையான கொள்கையினை, பங்களாதேஸ் பிரச்சனையின் போது இந்தியாவை பலம் பொருந்திய தேசமாக உருவாக்குகின்ற மறுபக்கம் கொண்டு சென்றவர் இந்திராகாந்தி. இதன் பின்பு 1970களின் மத்தியில் இந்தியா செய்த உள்நாட்டு தவறுகளை நான் எற்கிறேன் என்பது அர்த்தம் அல்ல. அவருடைய வெளிநாட்டு கொள்கையில் இந்தியாவை மிக ஸ்திரமாக  வழி நடத்தினார். இராணுவ ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் இந்தியாவை ஒரு பலமாக உருவாக்குவதில் 71, ஆம் 72ஆம் ஆண்டு காலத்தில் இந்திராகாந்தியின் பங்களிப்பு அதிகம்.
அதேபோல இந்தியாவினுடைய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் நரசிம்மராவின் பங்களிப்பு பெரிது. இன்று இந்தியா அனுபவிக்கின்ற பொருளாதாரம் நல்லது கெட்டது மேன்மையானது மேன்மையற்றது எல்லாவற்றுக்கும் அப்பால் இந்தியா அனுபவிக்கின்ற இன்றைய பொருளாதாரத்தினுடைய தந்தை உண்மையான அர்த்தத்தில்  நரசிம்மராவ் தான். அவருடைய ஒத்துழைப்பு பொருளாதாரம் தான். இது இரண்டாவது தூண்.

இப்போது சோவியத்தினுடைய வீழ்ச்சிக்கு காரணம் கைத்தொழில் இல்லாமல் போனது. சீனாவினுடைய உலகளாவிய ஏகாதிபத்திய வளர்ச்சிக்கு காரணம் அது கைத்தொழில் மயமாக்கத்திற்கு போனது. இந்தியா தானாக மாற்றத்திற்கு போகவில்லை. அது சீனாவினுடைய வளர்ச்சியினால் அதற்கு நிர்பந்திக்கப்பட்டு இந்தியா இந்த மாற்றத்திற்கு போனது. சரி இப்போது உங்களுக்கு இது பற்றிய ஒரு பார்வை வந்திருக்கும். இதன் பின்பு மிகப்பெரிய ஆசிய நாடுகளான இந்தியாவும், சீனாவும் திறந்த பொருளாதாரம் மற்றும் ஏகாதிபத்தியத்தோடு இணைக்கப்பட்ட கைத்தொழில் மயமாக்கம் என்பவற்றுக்கு போகிறார்கள். பின்பு உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஆசிய ஆபிரிக்க நாடுகள், இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்துமே திறந்த பொருளாதாரம், கைத்தொழில் மயமாக்கம் என்கின்ற கொள்கைக்கு போயின.

1990 களின் மத்தியில் இந்த உலகம் முழுக்க கைத்தொழில் மயமாக்கம்  என்ற கொள்கைக்கு 100 வீதம் வந்து விட்டது. இலங்கை இன்னும் வரவில்லை. இலங்கையை விடவும் பிந்தி வந்த நாடுகள் முன்னுக்கு வந்துவிட்டன. மலேசியா, தாய்வான், ஹொங்கொங் எல்லாம் மிகவும் பிந்திய வரலாறுகளை கொண்டவை. அவர்கள் முன்னுக்கு வந்துள்ளனர். இலங்கை வரவில்லை. இப்படியாக இலங்கையில் சீரழிந்து போகின்ற பொருளாதார கட்டமைப்பில் அவர்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டுக் கடன் என்பது வெளிநாடுகளுடன் ஒரு அனுசரிப்பைச் செய்ய உதவுமே தவிர இலங்கையை அபிவிருத்தி செய்ய உதவாது. இலங்கையை வாழ வைக்க உதவாது.

 இலங்கையில் இன்றைய பாணுக்கும், பருப்புக்கும், எரிவாயுவுக்கும் சண்டை பிடிக்கின்ற இந்த மக்களோடு ஈழத்தமிழர்களை ஒப்பிடுவதா?  30 வருடமா மின்சாரம் இல்லை, எரிபொருள் கிடையாது, எரிவாயு, மண்ணெண்ணெய் கிடையாது. மக்கள் தங்களுடைய சுய சார்பு பொருளாதாரத்தால் தனது சொந்தக்காலில் தங்கி நின்றார்கள். நெல் இருந்தது, கால்நடை இருந்தது, பால் இருந்தது, மீன் இருந்தது, காட்டுலிருந்து பெற்ற உணவு இருந்தது. இந்த மக்களுக்கு குடிக்க ஐஸ்கிறீம் இல்லாமல் இருந்திருக்கலாம், அலங்காரமான ஆடை இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் வாழ்ந்தார்கள். 30 வருட காலமாக வாழ்ந்த இந்த மக்களின் வாழ்க்கையோடு பார்க்கிற பொழுது இந்த மூன்று மாத கால சிங்கள மக்களின் இந்த வாழ்க்கை தமிழர்களின் கண்ணில் ஒரு பொருட்டாக ஒரு போதும் வரப்போவதில்லை. தமிழ் மக்களின் இந்த 30 வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கை என்பது அவர்களுடைய பிரதேசத்தினுடைய சுய சார்பு தன்மை. அவர்களுடைய மனதில் ஊறிப்போய் இருக்கின்ற, அதாவது ஈழத்தமிழர்கள் எப்பொழுதும் எந்த துன்பத்திலும் தலை நிமிர்ந்து நிற்கின்ற ஒரு விடாமுயற்சியுள்ள சளையாத மக்கள் என்கின்ற தன்மை.

இத்தகைய பின்னணியில் இனி, மீளப்போகின்ற இலங்கையின் அமைப்பை மாற்ற (system change) வேண்டும் என்று நாமல் ராஜபக்ச சொல்கிறார். அவர் சொல்லும் அமைப்பு மாற்றம் என்பது என்ன? பொருளாதார முறையை மாற்றுவதற்கு பெயர் தான் அமைப்பு மாற்றம். அவர் சொல்லுவது அதுதான். அவர்கள் இந்த அமைப்பைத் தான் வைத்திருக்க போகிறார்கள். இன்றைய உலக வர்த்தக பொருளாதார அமைப்பைத்தான் வைத்திருக்கப் போகிறார்கள். பிரச்சனை அமைப்பு அல்ல. பிரச்சனையாக இருப்பது கட்டமைப்பு. இங்கே பிரச்சினை அமைப்பு (system) அல்ல கட்டமைப்பு (structure).

உதாரணமாக, அமெரிக்கா என்ற நாடு முதலாளித்துவத்தை அமைப்பு (system) ஆக கொண்டு இருக்கிறது. சமஷ்டி அரசியலமைப்பை (federal constitution) கட்டமைப்பாக (structure) கொண்டிருக்கிறது. அவர்களுடைய அரசியல் கட்டமைப்பு (political structure)  சமஷ்டியாக இருக்கிறது. ஆகவே அமைப்பு வேறு கட்டமைப்பு வேறு. நாமல் சொல்கின்ற அமைப்பு என்னவென்று தெரியாது.

கட்டமைப்பை மாற்ற வேண்டும். இந்த கட்டமைப்பு மாற்றப்படாத நிலையில் ஒரு தீர்வும் கிடைக்க போவதில்லை. ஆதலினால் திரும்பவும் தெளிவான வார்த்தையில் சொல்வதானால், ஈழத்தமிழர்களுடைய அரசியல் பிரச்சனை தீராத வரைக்கும் இலங்கையில் எந்த பொருளாதாரவிருத்தியும் இல்லை. தமிழ் மக்களின் மூளையில் சமாதானம் என்கின்ற ஒரு வார்த்தை எழாத வரைக்கும் அவர்களிடமிருந்து முதலீட்டுக்கும் இலங்கையில் இடமில்லை. வெளிநாடு கடன் கொடுக்கும். முதலீடு செய்யாது. இலங்கையில் இருக்க கூடிய இந்த அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில்  யாரும் துணிந்து முதலீடு செய்ய வர மாட்டார்கள். இது ஒரு ஆழமான பிரச்சனை.

உலகத்தில் ஒரே ஒரு கருத்தியல் தான் இருக்கிறது. இதில் நாடுகளுக்கு இடையில் எல்லை எதுவும் கிடையாது. பனிப்போர் முடிந்ததன் பின்பு திட்டவட்டமாக சந்தை பொருளாதார ஏகாதிபத்திய பொருளாதார முறை தான் உலக ஒழுங்காக இருக்கிறது. இது தான் உலக முழுவதற்குமான கருத்தியல். அமெரிக்காவினதும் இது தான், சீனாவினதும் இது தான், இந்தியாவினதும் இது தான், ரஸ்யாவினதும் இது தான். எனவே உலகத்தில் இந்த கருத்தியலில் வேறுபாடு என்று எந்தவொரு அரசிடமும் கிடையாது.

உலகம் முழுவதுமே ஒரே மாதிரியான கருத்தியலின் கீழ் உள்ளன. அப்படியானால் நாடுகளுக்கு இடையிலான போராட்டங்கள், முரண்பாடுகள் என்ன?  அங்கு ஒரு போட்டி இருக்கிறது. ஒரே கருத்தியலுக்குள் போட்டிகள் இருக்க முடியும். ஒரு சந்தை முறைக்குள் பொருளாதாப் போட்டி நிகழும். ஆனால் அந்த போட்டி பகைமை கொண்டதாக இருக்க போவதில்லை. எல்லா நாடுகளும் ஒரு கருத்தியலைத் தான் கொண்டிருக்கின்றன.


இதற்குள் இலங்கையின் நிலை என்ன? வர்த்தக பொருளாதாரம் தான் அதனுடைய கருத்தியலாக இருக்கிறது. கைத்தொழில் பொருளாதாரம் கிடையாது. விவசாய பொருளாதாரம் தான் இருக்கிறது. அங்கும் நவீன மயமாக்குதல் கிடையாது. இது அவர்களுடைய பொருளாதாரம் பற்றிய அடிப்படை பிரச்சனை. இலங்கையினுடைய ஆட்சியில் இருக்கின்ற அல்லது கல்வி கற்றுக் கொண்டு இருக்கின்ற நிபுணர்கள் மூடிய பொருளாதாரத்திலிருந்தும் வர்த்தக பொருளாதாரத்திலிருந்தும் வெளிவந்தவர்கள் தான். மூடிய பொருளாதாரம் வர்த்தக பொருளாதாரம் என்பவற்றிலிருந்து வந்தவர்களுக்கு உற்பத்தி சார்ந்த ஒரு கைத்தொழில் மயமாக்கல் சிந்தனை வரவில்லை. வர இயலாது. அது கொஞ்ச காலம் எடுக்கும். அதற்கு புரட்சிகரமாக சிந்திக்கிற நல்ல தலைவர்கள் தேவை.


அது ஈழத்தமிழர்களுடைய பிரச்சனையை தீர்க்கின்ற வகையிலான ஒரு புரட்சிகர மாற்றம் ஒன்று சிங்களவர்கள் மத்தியில் வந்தால் தான் சாத்தியம்.  சிங்கள மக்கள் மத்தியில் பெருந் தலைவர் (great leader) கிடையாது. சிறந்த தலைவர் என்று சொல்லக் கூடிய ஒருவரும் கிடையாது. அங்கு தலைவர்கள் சாகசம் செய்வார்கள். எதிரிகளை வீழ்த்துவது தான் அவர்களுடைய சாதனை. அவர்களுக்கு நாட்டை கட்டியெழுப்புவது ஒரு சாதனை இல்லை. சமாதானத்தை உருவாக்குவது அவர்களுக்கு சாதனை இல்லை. மக்களை அழிப்பது தான் அவர்களுடைய சாதனை. இப்படிப்பட்ட சாதனையை கொண்ட தலைமைத்துவத்தையும், அறிவியலையும்,  இராணுவத்தையும், தலைவர்களையும் கொண்ட ஒரு தேசத்தில் இனியும் அமைதி நிலவும் என்கிற வரலாற்று போக்கு கண்ணுக்கு தெரியவில்லை.


இப்படிப்பட்ட நிலையில் இப்போது வரக்கூடிய எந்தவொரு தற்காலிகமான சுமூகநிலையும் ஈழத்தமிழர்களுடைய தீர்க்கப்படாத பிரச்சனை. அதாவது இனி எந்த அரசியல் யாப்பு திருத்தமும் கொண்டு வர மாட்டார்கள். தமிழர்களுக்காக எந்தவித சமஷ்டி ஆட்சியும் கொண்டுவர தயாராக இருக்க மாட்டார்கள். தமிழர்களுக்காக போராட வேண்டிய ஒரு கால கட்டத்தை தமிழர்கள் 100 வீதம் தவற விட்டிருக்கிறார்கள். அதாவது, ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். எமக்கு சமஸ்டி முறை வேண்டும் நாங்கள் இலங்கையை கட்டி எழுப்ப ஒத்துழைப்போம் என்று சொல்லியிருக்க வேண்டும். சமஸ்டி முறையின் கீழ் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று போராடி இருக்க வேண்டும்.


அவ்வாறு செய்யும் பொழுது சிங்கள தலைவர்கள் சிங்கள மக்களை கைது செய்ய முடியாது என்பது போல தமிழ் மக்களை கைது செய்ய முடியாது. ஒரு சிங்கள மகன் கொல்லப்பட்டதற்கு மகா சங்கம் கண்டனம் தெரிவித்து இரங்கல் வெளியிட்டிருக்கிறது. ஒன்றரை இலட்ச மக்கள் கொல்லப்பட்டதற்காக ஒன்றும் செய்யவில்லை. ஆனாலும், இந்த கட்டத்தில் தமிழர்களும் சேர்ந்திருந்தால் மகா சங்கம் அப்படி தமிழர்களை புறக்கணிக்கின்ற நேரடியான நடவடிக்கையில் ஈடுபட்டு கைது செய்கின்ற நடவடிக்கைக்கு ஆதரவளிக்க முடியாது. அது ஒரு வகையில் எங்களுக்கு ஒரு தளத்தை தேடி தந்திருக்கும்.



கைது செய்து சிறைக்கு போவது என்பது அரசியலின் ஒரு அங்கம். எமது தலைவர்கள் கைதிகளாக இருக்க தயாரில்லை. அவர்கள் பணங்களையும் பண்டங்களையும் பேணவும் பாதுகாக்கவும் தான் தயாராக இருக்கிறார்கள். இந்த பின்னணியில் தமிழர்கள் தலைவர்களால் கைவிடப்பட்ட மக்களாக இருக்கிறார்கள். தமிழர்களை கை விட்டது வெளிநாடுகள் மட்டுமல்ல. தமிழ் தலைவர்களும் கை விட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கை மண்ணில் கை விடப்பட்ட மக்களாக இருக்கின்ற தமிழ் மக்களை வெளிநாடுகளும் கை விட்டு விடுகின்றன. இந்த ஒரு விடயத்தை கருத்தில் கொள்ளத் தவறக் கூடாது.



சில மாதங்களில் இந்த கொந்தளிப்பு அது பாரியளவில் இலங்கையினுடைய அரசியலை பெரிதாக குழப்பும். இன்று இருப்பது போல் இருக்காது. தற்செயலாக ஓரடி பின்னால் வைத்திருக்கும் சீனா ஈரடி முன்னால் வைக்க தான் போகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஈழத்தமிழர்கள் போராடி தான் ஆவார்கள். அது இன்னொரு பக்கம் இருக்கட்டும். ஈழத்தமிழர்கள் போராட முந்தியது போல ஈழத்தமிழர்களை இனிமேலும் கொல்ல இயலாது. வரலாற்றின் வளர்ச்சி இடம் கொடுக்காது. ஆனால் கலவரங்கள் வரலாம். அரசு நேரடியாக கொல்லுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாக இருக்கும் அது போராட்டத்தின் வெற்றியாக இருக்கும். எனவே இலங்கை அரசியலில் வரக் கூடிய காலங்களில் இன்று ஒரு சின்ன ஓய்வுநிலை ஏற்பட்டாலும் அது சிங்கள மக்களுக்கு தீர்வாக இருந்தாலும் அது தமிழ் மக்களுக்கு தீர்வாக இருக்க போவதில்லை.


தமிழ் மக்களும் தமிழ் தலைவர்களும் இந்த இடத்தில் வரலாற்று வாய்ப்பை கைவிட்டு விட்டார்கள். தனிப்பட்டவர்களை குறை சொல்லுவதோ குற்றம் சொல்லுவதோ இங்கு நோக்கம் இல்லை. அறிஞர்கள் கூட நிலைமைகளை சரியாக இனங்கண்டு தமிழ் மக்களுக்கு வழிகாட்ட தவறி விட்டார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சிங்கள இன வாத அரசை பாதுகாக்கும் பணியை தான் தமிழ் அரசியல் தலைவர்கள் பெருமளவில் செய்கிறார்கள். தமிழ் மக்களை அவர்கள் கைவிட்டு இருக்கிறார்கள். இந்த போராட்டத்தை முன்னெடுக்க தவறி உள்ளார்கள். இதனால் வரக்கூடிய சோகமான விடயம் ஒன்று நான்கு ஐந்து வருடங்களின் பின்னர் கொடூரமான பக்கங்கள் வரும். ஈழத்தமிழர்களுடைய பிரச்சனை தீர்க்கபடாத வகையில் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கின்ற இந்த காசு இலங்கையின் பொருளாதாரத்தை ஒரு போதும் தூக்கி நிறுத்த மாட்டாது. அது மீண்டும் கிளம்பும். எனவே கொந்தளிப்புக்கான ஒரு வாய்ப்பை மீண்டும் இந்த அரசியல் ஏற்படுத்தும். இலங்கையில் தீர்க்கப்படாத பிரச்சனையின் பின்னணியில் இலங்கை தீவு இரண்டாக உடைவது இறுதியிலும் இறுதியான தீர்வாக போகும்.

 

இலங்கை தீவு இரண்டாக உடைவதற்கு உரிய போக்கை இந்த நெருக்கடி சற்று தாமதப்படுத்தி இருந்தாலும் அதை முடித்து வைக்க மாட்டார்கள். இந்த நெருக்கடியிலிருந்து அது அடுத்த கட்டமாக அது வெடித்து வெளியேறி வரும். இலங்கையின் பிரச்சனைக்கு தீர்வு எந்தவொரு அரசாலும் ஒருபோதும் காண முடியாது. அது நாடு இரண்டாக உடைவது என்பதின் மூலம் மட்டும் தான் இலங்கைக்கு தீர்வு வரும். அது தான் இந்த பிராந்தியத்தில் சமாதானத்தை கொண்டு வரும். உடையும் என்பது என்னுடைய உளவியல் ரீதியான முடிவு கிடையாது அறிவியல் ரீதியான முடிவை தான் சொல்கிறேன். நாம் இலங்கையில் ஒன்றுப்பட்ட மக்களாக இருப்பது எனக்கு மிகுந்த விருப்பம் ஆனால் அதற்கு இடமில்லை எனும் போது நாங்கள் எப்படி ஒன்றுப்பட முடியும்? அந்தவகையில் இலங்கை இரண்டாக உடைவதற்கான ஒரு வரலாற்று போக்கை இன்றைய சின்ன தீர்வு ஏற்படுத்த போவதில்லை. மாறாக இது அடுத்த கட்டத்திற்கு போகும் என்பதையே உய்த்துணரக் கூடியதாக இருக்கிறது.

நிமிர்வு இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை.

https://www.nimirvu.org/2022/08/02.html









அதிகம் பார்க்கப்பட்டவை: