ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

ஈழப்பிரச்சினையில் நடுவராக ஸ்விஸ் நாடு. அநுரா செய்யவேண்டிய 3 முடிவுகள். அழிந்த தமிழ் தலைமைகள்.

 

சமீபத்தில் ஈழத் தமிழருக்கிடையேயான ஒற்றுமையின்மை பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஸ்விஸ் நாடு முயல்வதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அந்நாட்டின் தூதுவர் இலங்கை பிரதமரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.





உண்மையில் எங்கோ இருக்கும் ஸ்விஸ் நாடு இலங்கையில் உள்ள ஈழப் பிரச்சனையை அனுக வேண்டிய காரணம் என்ன. இதனால் ஈழத்தமிழருக்கு யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை என்கிறார் வரலாற்றறிவியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள். 

ஊடறுப்பு தளத்தின் நெறியாளர் தமிழரசுவுக்கு தந்த நேர்காணலில் இலங்கை அரசின் இந்த புதிய நகர்வு குறித்தும், ஈழப் பிரச்சனைக்கான தீர்வு குறித்தும் மு.திருநாவுக்கரசு அவர்கள் அளித்த நேர்காணல் கீழே..


நேர்காணல் காணொளி: 



ஊடறுப்பு தளத்திற்கு வழங்கப்பட்ட இந்த நேர்காணல் காணொளியில் மு.திருநாவுக்கரசு அவர்கள் கூறியுள்ள முக்கிய கருத்துக்கள் சிலவற்றின் வரிச் சுருக்கம் கீழே.. 

இலங்கையை ஆண்ட ஆளும் அரசுகள் எதுவாக இருந்தாலும் (இடதுசாரி போல நடிக்கும் அநுராவாக இருந்தாலும்) ஈழப் பிரச்சனைக்கு சமாதானத் தீர்வு காண்பதை ஒரு போதும் செய்யமாட்டார்கள். தங்கள் அரசுகளுக்கு அப்போது ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளிக்க தீர்வுகளாக எதையாவது பேசுவார்கள் செய்வார்களே தவிர நீண்ட கால சமாதானத் தீர்வு அவர்கள் நோக்கமாக ஒருபோதும் இருந்ததே இல்லை. இருக்காது.

கடல்சார் கொள்கை என்பது இல்லையென்றால் ஈழத்தமிழருக்கு இலங்கையில் வாழ்வே இல்லை. பாக் நீரிணைப்பு தான் அவர்களது பலம். அதைத் தான் சிங்கள அரசுகள் தங்களது பலவீனமாக , இந்தியாவின் ஆக்கிரமிப்பு நடக்கப் போகும் பகுதியாக தொடர்ந்து கருதி வருகிறார்கள். இதுவரை தமிழர் சம்பந்தமாக இலங்கை அரசுடன் செய்யப்பட்ட எந்த ஒப்பந்தங்களிலும் பாக் நீரிணை கடலின் உரிமையில் ஈழதமிழருக்கும் பங்கு என்கிற பேச்சே எழவிடவில்லை சிங்கள அரசுகள். அந்தக் கடல் பகுதி எப்போதுமே இலங்கை அரசிற்கு சொந்தமானதாகவே கொள்ளப்பட்டது. அந்தக் கடல்பகுதியை, அதன் அதிகாரத்தை ஈழத் தமிழருக்கோ, இந்தியாவுக்கோ ஒரு போதும் இலங்கை அரசு விட்டுத் தராது. பாக் நீரிணை என்பது சோழப் பேரரசின் காலத்திலிருந்தே இந்தியாவுக்கு பலமாக இருந்துள்ளது. இப்போது இந்தியாவின் கட்டுப்பாட்டில் பாக் நீரிணை இல்லை.

இலங்கை அரசு, ஈழத் தமிழர் மற்றும் இந்தியா இந்த மூன்றும் சந்திக்கும் ஒரு புள்ளியில் மட்டுமே ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வு மையம் கொள்ள முடியும். இந்தியாவால் மட்டும் சர்வதேச அளவில் இப்பிரச்சனையை தீர்த்துவிட முடியாது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் இந்திய ராணுவ வீரர்களை இலங்கைக்குள் இறக்க முடிந்தாலும் இந்தியாவால் பிரச்சனையை தீர்த்துவிட முடியவில்லை. முடியாது. அதற்கு இன்னொரு பலமான வெளி அரசின் ஆதரவு இந்தியாவிற்கு தேவைப்படும். அது வீட்டோ அதிகாரமுள்ள அமெரிக்கா அல்லது ரஷ்யாவாக இருக்கமுடியும். உலகில் உள்ள வேறு எந்த நாடும் இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காணவோ, பேச்சு நடத்தவோ முயலாது.

நார்வே, ஸ்விஸ் போன்றவை அமெரிக்காவின் நிழல்தள நாடுகளாக இருப்பதன் பின்னணியில், ஈழப்பிரச்சனைக்குள் தலையிட அனுமதிக்கப்படுவது ்தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. ஆனால் அவற்றால் ஈழத்தமிழருக்கு பலனில்லை. அவற்றால் தீர்வும் காண முடியாது. ஆனால் ஸ்விஸ் நாட்டிலுள்ள கேன்டன்ஸ்(cantons) எனப்படும் நாடுகளற்ற நிலையை  நைசாக ஈழத் தமிழர் பகுதிகளுககான தாயகமற்ற, நாடற்ற தீர்வாக  திணிக்க அது சிங்களருக்கு உதவலாம். 

கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக ரஷ்யா இந்தியா இடையே இணக்கமான உறவே இருந்து வந்திருக்கிறது. ரஷ்யாவிலிருந்து எந்தவித படையெடுப்புகளோ, படையெடுப்புக்கான ஆயத்தங்களோ கூட இந்தியாவை நோக்கி நிகழ்ந்ததில்லை. உக்ரைன் போரில் இந்தியா ரஷ்யாவை கண்டிக்கவில்லை. மனிதநேய உதவிகள் பற்றிப் பேசியதே தவிர ரஷ்யாவை விமர்சிக்கவில்லை. பங்களாதேஷ் பிரிவினையின் போது ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவை எதிர்த்து நின்றது. 1998ல் இந்தியா அணு ஆயுதம் தயாரித்த போது பொருளாதார தடையை எதிர் கொண்டது. அப்போதும் ரஷ்யா இந்தியாவை கண்டித்ததோடு நின்று கொண்டது, பொருளாதாரத் தடைகள் எதுவும் இந்தியா மீது விதிக்கவில்லை.

ஈழப் பிரச்சனையை சிங்களர்கள் தமிழின அழிப்பு, இந்திய எதிர்ப்பு என்கிற ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே பார்க்கிறார்கள். இந்திய எதிர்ப்பை பலப்படுத்த ஒரே வழி இலங்கையில் தமிழினத்தை அழிப்பதுவே. இதுவே சிங்களர்களின் இந்திய ஆதிக்க எதிர்ப்பு வாதமுமாகும்.

2024ல் அப்போதைய நெருக்கடியை சமாளித்து இந்தியாவிடமிருந்து சில பலன்களைப் பெற பிரதமர் ரணில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கடற்பாலம் கட்டப்படும் என்கிற ஒப்பந்தத்தை செய்தார். தற்போதைய ஜனாதிபதி அநுரா அதை இந்தியாவின் விஸ்தரிப்பு வாதமாக பார்ப்பதோடு, பாலம் கட்டப்படும் வாய்ப்பு இல்லை என்றும் நிராகரித்துவிட்டார். அநுரா தொழிலாளர்களோடும், ஈழத் தமிழர் பகுதிகளில் வந்து செல்ப்பி எடுத்ததோடும் விளம்பரமாகச் செய்து தன்னை முற்போக்காக காட்டிக் கொள்ளமட்டுமே செய்திருக்கிறார். தொழிலாளர்களின் தோழர் என்று படம் காண்பித்தலே அவருக்கு போதுமானதாக இருக்கிறது. நிஜத்தில் ஈழத்தமிழருக்கு அவராலும் எந்த நன்மையும் இல்லை. இன்றும் தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் இருக்கின்றன. தமிழர் பகுதி முழுவதும் ராணுவம் நின்று கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் தமிழர் பகுதிகள் என்பதே இல்லை என்பதாக ஆக்கிவிடுவதே அநுரா குமாரவின் குறிக்கோளாகவும் இருக்கிறது. 

30 ஆண்டுகளான ஈழப் போராட்டத்தில்  ஈழத்தில் உள்ள பெரும் அறிவுஜீவிகள், தலைமைகள், தலைவர்கள் பெரும்பாலோர் கொல்லப்பட்டனர். பிறர் இடம் பெயர்ந்து விட்டனர். பலர் விரக்தியில் அரசியலை விட்டே விலகிப் போய்விட்டனர். இன்றைய நிலையில் ஈழத்தில் தமிழருக்கு வலுவான ஒன்றுபட்ட அரசியல் தலைமைகளை இல்லாமல் அனைத்தும் சீரழிந்து நிற்கிறது.

 இலங்கை அரசியல் யாப்பின் முக்கிய தூண்கள் மகாசங்கம், ராணுவம் மற்றும் ராணுவவாதம். இவையே அதன் இனவெறியை நியாயப்படுத்தி அதை நோக்கி செயல்பட துணை நிற்கின்றன. எனவே ஜனாதிபதி முறையை இலங்கை அரசால் கைவிட இயலாது. யாப்பை மாற்ற இயலாது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை கைவிட நினைத்தால் இந்தியா இலங்கையை விடாது. இந்தியாவுக்கு இலங்கையில் இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு 13ஆவது திருத்தச் சட்டம் மட்டுமே. வேறு எதிலும் இந்தியாவை நம்பி இலங்கை இல்லை. (சீனா நேரடியாக ஈழப் பிரச்சனையில் தலையிடாது. ஆனால் இலங்கையின் வர்த்தக கூட்டாளி என்கிற அடிப்படையில் அனைத்து வகையான உதவிகளையும் இலங்கைக்கு தந்து ஆதரவாக நிற்கும்)


ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

ரணில் - மோடி 2023 ஒப்பந்தமும் இந்தியா - இலங்கை கடல்வழிப் பாலமும்.

 ரணில் - மோடி 2023 வரலாற்று ஒப்பந்தம் தகர்ப்பு. ஏன் ? மு.திருநாவுக்கரசு அவர்களின் நேர்காணல். 07.02.2026.

ஊடறுப்பு செய்தித் தளத்திற்காக வரலாற்றறிவியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் லங்காஸ்ரீ ஊடகவியலாளர் தமிழரசு அவர்களுக்கு வழங்கிய இணைய நேர்காணல். 07.02.2026.



ஜூலை 2023-ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையிலான டெல்லி சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பொருளாதாரக் கூட்டாண்மை தொலைநோக்கு ஆவணத்தை (Economic Partnership Vision Document) உருவாக்கியது. இது எரிசக்தி, கடல்சார் மற்றும் வான்வழி இணைப்பு, வர்த்தகம், மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு, அத்துடன் இந்தியா-இலங்கை இடையிலான நிலப் பாலம் (Land Bridge) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலியுறுத்துகிறது. 
ரணில் - மோடி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் (ஜூலை 2023):

பொருளாதார தொலைநோக்கு:
 நீண்ட காலப் பொருளாதாரக் கூட்டாண்மை, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
  • எரிசக்தி இணைப்பு: இரு நாடுகளின் மின்சாரக் கட்டமைப்பு (Electricity Grid) மற்றும் திருகோணமலை எரிசக்தி மையத்தை மேம்படுத்துதல்.
  • நிலப் பாலம் (Land Bridge): இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் நிலப் பாதையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒப்புதல்.
  • டிஜிட்டல் மற்றும் வர்த்தக பரிவர்த்தனை: இந்திய ரூபாய் (INR) மூலம் வர்த்தகம் மற்றும் UPI அடிப்படையிலான டிஜிட்டல் கொடுப்பனவுகளை செயல்படுத்துதல்.
  • எரிபொருள் குழாய்: இலங்கைக்கு எரிபொருள் கொண்டு செல்ல குழாய் அமைக்கும் feasibility study.
  • பாதுகாப்பு மற்றும் இணைப்பு: கடல்சார், வான்வழி மற்றும் துறைமுக இணைப்பு (திருகோணமலை, கொழும்பு) மூலம் இருதரப்பு உறவை வலுப்படுத்துதல்.
இந்தியப் பிரதமர் மோடிக்கும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே 2023ல் வடிவமைக்கப்பட்ட இந்த வரைவு, பெயரளவில் ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டாலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போல தெளிவற்ற உறுதிமொழியல்லாத விடயங்களையே கொண்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தி்ல் வழக்கமான இரு நாடுகளிடையேயான பொருளாதார, தொழில் அபிவிருத்தி போன்றவை பேசப்பட்டிருந்தாலும் அதில் முக்கியமானது இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கை மன்னாருக்குமிடையே கடல் மேல் ஒரு தரைவழிப் போக்குவரத்து பாலம் அமைப்பது என்பதாகும். இந்தப் பாலத்தின் நீளம் கடல்வழியே வெறும் 23 கி.மீ நீளமேயாகும்.
பார்க்க எளிதானது போலவும், இருநாடுகளும் விரும்பிச் செய்த விடயம் போலவும் காணப்பட்டாலும் இது உண்மையில் இலங்கை ஒருபோதும் செய்ய விரும்பிய விடயம் அல்ல. முழுக்க முழுக்க இந்தியாவின் முன்னெடுப்பின் பேரிலேயே இவ்விடயம் முன்னெடுக்கப்பட்டது. இந்தியாவையும் இலங்கையையும் வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியாக இணைப்பதில் இந்தப் பாலம் பெரும் பங்கை ஆற்றக் கூடும்.
என்பதை சிங்கள அரசுகள் ஒரு போதும் அனுமதிக்காது. வரலாற்றில் அப்படி ஒரு பாலம் ஒருபோதும்
சாத்தியமில்லை என்பதை வரலாற்று அரசியல் நிகழ்
வுகளின் ,பின்னணிகளின் ஊடே விளக்குகிறார் மு.திருநாவுக்கரசு அவர்கள்.  
இலங்கை இந்தியா இடையே ஒரு பாலம் அமைப்பதானது இலங்கையை தனி நாடாக
இருப்பதிலிருந்து மாற்றி இந்தியாவின் ஒரு இணைப்புப் பகுதியாக மாறுவதை நோக்கி
கொண்டு செல்லும் என்றும், ஈழத் தமிழர்கள் இலங்கையில் சிங்களர்களை விடவும் அதிகாரம்
பெறுவார்கள் என்றும் சிங்களர்கள் உள்ளூர அச்சப்படுகிறார்கள். தமிழர்கள் இலங்கையின் வடபகுதியிலும்
இந்தியாவின் தென்முனையிலும் வாழ்வதால் ஈழத் தமிழர் மீதான, இந்தியா மீதான
அச்சம் சிங்களருக்கு வரலாற்று ரீதியாக மகாவம்ச காலத்தில் இருந்தே தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்தியாவின் வரலாற்று மனோபாவமும் இலங்கையை இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள
ஒரு சிறு தீவு என்றே கருதி வந்திருக்கிறது. சிந்து நதியில் ஆரம்பித்து இலங்கை வரை இந்தியாவின்
நீட்சி என்ற கருத்திலேயே சிங்களத்தீவிற்கொரு பாலம் அமைப்போம்என்று பாரதியாரே பாடியிருப்பதில் இருந்து இதை உணரலாம்.

அறிக்கைகளின்படி, ராமேஸ்வரத்தையும் (இந்தியா) தலைமன்னாரையும் (இலங்கை) இணைக்கும்
முன்மொழியப்பட்ட சாலை மற்றும் ரயில் பாலத் திட்டத்திற்கு தோராயமாக 5 பில்லியன் டாலர்
(சுமார் ₹24,000 கோடி முதல் ₹40,000 கோடிக்கும் மேல்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) இத்திட்டங்களுக்கு நிதியளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தாலும்,
இந்தத் திட்டம் நிதி உதவிக்காகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டின் முந்தைய
அறிக்கைகள், ஆசிய வளர்ச்சி வங்கி 3.5 பில்லியன் டாலர் (₹220 பில்லியன்) நிதியுதவி அளிப்பதாக
உறுதியளித்திருந்ததாகத் தெரிவித்தன.
ஆனால் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவை நம்ப வைத்து செய்த அனைத்து ஒப்பந்தங்களிலும்
இந்தியாவை கைகழுவி தோல்வியுறச் செய்த இலங்கை சிங்கள அரசுகள் இந்த இணைப்புப்
பாலத்தை ஒருபோதும் நிறைவேற்றாது. ஒருவேளை இலங்கையில் தமிழர்கள் பகுதிகள்
முழுவதும் சிங்களமயமாக்கப்பட்டு தமிழர்கள் தடயமின்றி அங்கே அழிக்கப்பட்டால்
அது நிரந்தரமாக சாத்தியப்படாமலே போய்விடும். தனித்த சிங்கள நாடு என்கிற தாங்கள்
உருவாக்கிவரும் அடையாளத்தை பேணவே சிங்களர் விரும்புவர். அப்படிப்பட்ட சிங்கள இனமயமாக்கல்
மூலம் தமிழரை அழிப்பது தற்போது இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில்
நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒருவேளை தமிழீழம் அமைந்தால் அது தமிழீழத்திற்கும் இந்தியாவுக்கும் இடையேயான
பாலமாகத் தான் அமைய முடியுமே தவிர சிங்கள இனவாத இலங்கைக்கும் இந்தியாவுக்கும்
இடையே இப்படி ஒரு பாலம் அமையவே முடியாது.

இலங்கை அரசுகளின் இந்த இந்திய எதிர்ப்பு வாதத்தை தெளிவாக விவரிக்கிறார்
இந்த காணொளியில்.

திங்கள், 2 பிப்ரவரி, 2026

ஒற்றை மைய உலக ஒழுங்கு சீர்குலையும் காலத்தில் வல்லரசுகளின் புதிய ஆதிக்க குவிமையங்கள்.

லங்கா ஸ்ரீ பத்திரிக்கையின் ஊடறுப்பு நிகழ்வில், ஈழத்தைச் சார்ந்த வரலாற்று ஆய்வாளர் திரு மு.திருநாவுக்கரசு அவர்கள், நெறியாளர் தமிழரசுவுக்கு,  31-01-2026 அன்று வழங்கிய நேர்காணல்.



லங்கா ஸ்ரீ இணையதள நேர்காணலின் முதல் பகுதி: 



லங்கா ஸ்ரீ இணையதள நேர்காணலின் இரண்டாம் பகுதி:



இந்த நேர்காணல்களில் அவர் கூறிய முக்கிய கருத்துக்கள் சில சுருக்கமாக கீழே...

- இந்த 2026ல் உலக ஒழுங்கு குலைந்திருக்கிறது. ஆனால் புதிய உலக ஒழுங்கு இன்னும் உருவாகவில்லை.

- America First என்கிற அமெரிக்காவின் தன்னை முன்னிலைப்படுத்தும் கருதுகோள் சிக்கலுக்கு உள்ளாகிறது. 

- இந்த சீர்குலையும் உலக ஒழுங்கு சூழலில், இரு பெரும் நாடுகள் அல்லது நாட்டு அணிகளுக்கு இடையிலான பெரும்போர் தான் புதிய உலக ஒழுங்கை உருவாக்கக் கூடிய  பலத்தை அப்போரில் வெற்றி பெறும் நாட்டிற்கு அல்லது வெற்றி பெறும் அணிக்கு வழங்கும். ஆனால் இத்தகைய சூழல் நடக்காததால் உலக ஒழுங்கை அமெரிக்காவால் மாற்ற முடியாது.

- சீர்குலையும் உலக ஒழுங்கில் சந்தைக்கான போட்டியில் அமெரிக்காவிற்கு சவாலாக இருப்பது சீனாவே. அமெரிக்கா ஏகாதிபத்தியம் கம்பெனிகளின் monoploy ஆக இருக்கிறது. சீனா அரசு சார்ந்த(state sponsored), சந்தை ஏகாதிபத்தியமாக, monoopoly ஆக இருக்கிறது. எனவே சீனாவின் பலம் அதிகமாக இருக்கும்.

- சீனா கடந்த 25 ஆணடுகளாக தொழில்நுட்பத்தை மேற்குலகிடமிருந்து பெற்றுக் கொள்ள தனது சந்தையை திறந்து விட்டது சீனா மற்றும் ரஷ்யா. சீனா உலக தொழில்நுட்பம் அனைத்தையும் பெற்று இன்று மிதமிஞ்சிய வளர்ச்சியடைந்து விட்டது.

- 45 வருட தொழில்நுட்பமயமாக்கப்பட்ட உற்பத்தியால், மாசுபடுத்தப்பட்ட சுற்றுப்புறச் சூழலால் ஆர்க்டிக் கடல் உருகுகிறது. அது புதிய எளிதான கடல்வழிப்பாதையை உலக வர்த்தகத்திற்கு ஏற்படுத்துகிறது. இதைப் பயன்படுத்தி சீனா தனது உற்பத்திப் பொருட்களை மேற்குலகம், கனடா மற்றும் உலகநாடுகள் அனைத்திற்கும் கொண்டு செல்வது இன்னும் எளிதாகிறது. எனவே தான் இந்தப் பாதையில் இருக்கும் கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா முயல்கிறது. சீனாவின் எளிய கடல்வழிப் பாதையை தனது கட்டுக்குள் வைக்க முயல்கிறது.

- முதலாம் , இரண்டாம்  உலகப் போர்கள் முதலாளிகளுக்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையேயான போர்கள் அல்ல. வளர்ச்சியடைந்த முதலாளிகளிடையே நடந்த பன்னாட்டு சந்தைப் பிடிப்பின் போட்டியால் நடந்த போர்களே ஆகும். முதலாளி வர்க்கம் என்கிற ஒரே வர்க்கத்துக்குள்ளேயே நடந்த முரண்களே இந்தப் போர்கள் ஆகும்.

- அமெரிக்கா ஈரானுடன் நேரடியாக போரில் இறங்கும் வாய்ப்பு குறைவு. ஈரான் மேல தாக்குதல்கள் செய்யலாம். தலைவர்களை கொல்லலாம். உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தலாம். ஆனால் நேரடியாக போரில் இறங்குவது சரியான அமெரிக்காவின் முடிவல்ல. தேவையுமல்ல.

- இன்றைய உலக ஏகாதிபத்திய சந்தைப் போட்டியில் கிரீன்லாந்து, வெனிசூலா மற்றும் இலங்கை ஆகிய போட்டிக்கான குவிமையங்கள் உள்ளன.

- தந்தை செல்வா காலம் முதலே தமிழர்கள் சுயாட்சி என்பதை அடைய முடியாமலே சிங்கள ஆளும் வர்க்கத்திடம் தொடர்ந்து தோல்வியடைந்தே வந்துள்ளனர். ஒரு தலைவரும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் அரசியலை வெற்றிகரமாக புரிந்து உலக அரசியலை செய்ததில்லை. 

- பாக் நீரிணை தமிழரின் கட்டுப்பாட்டில் இருந்தவரை ஈழப் போராட்டம் வென்றது. பாக் நீரிணை தமிழரை விட்டுப் போனபின்பு ஈழப் போராட்டம் எளிதில் அழிக்கப்பட்டது.

- இந்திராகாந்தி காலத்தில் 1984ல் இந்திரா-பார்த்தசாரதி தீர்வு ஒன்று திட்டமிடப்பட்டது. கிரேக்க-துருக்கி தீர்வு போல, ஒரு நாடு - இரு அரசுகள் என்கிற அமைப்பை உருவாக்க தமிழர் பகுதியில் படையை இறக்கி இந்தியப் படை தமிழர் பகுதியை ஆளும் என்றும், சிங்களர் பகுதியை சிங்களர் ஆளட்டும் என்றும் திட்டமிடப்பட்டது. அது நிறைவேற்றப்படுவதற்குள் இந்திராகாந்தி கொல்லப்பட்டார்.

மேலேயுள்ள இரண்டு பாகங்களின் தொகுப்பு :

உலக ஒழுங்கு சீர்குலையும் காலத்தில் வல்லரசுகளின் புதிய ஆதிக்க குவிமையங்கள். நேர்காணல்

அதிகம் பார்க்கப்பட்டவை: