திங்கள், 25 ஏப்ரல், 2022

"கொழும்புக் கொந்தளிப்பும் ஈழத்தமிழரும் கற்பனையும் யதார்த்தமும் கொள்கை ஆய்வு" - உரை. பாகம் 2.

 ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களால் 24.04.2022  அன்று நடாத்தப்பட்ட "கொழும்புக் கொந்தழிப்பும் ஈழத்தமிழரும் கற்பனையும் யதார்த்தமும் கொள்கை ஆய்வு" என்கிற உரையாடல் வகுப்பின் இறுதிப் பகுதி இங்கே பிரசுரமாகிறது.

ஸ்பெயினில் 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் போது ஐரோப்பிய நாடுகள் ஸ்பெயினை பாதுகாக்க முற்பட்டன. அது ஏன் என்பது ஒரு அரசியல் பொருளாதார விளக்கமூடாக சொல்லலாம். ஸ்பெயினின் பிரச்சனை என்பது ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த வரையில் அவர்களின் சுமையாக மாறும். எனவே ஸ்பெயினின் பிரச்சனையை தீர்க்காமல் பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி போன்ற நாடுகள் நிம்மதியாக இருக்க முடியாது. எனவே இந்த நாடுகள் எல்லாம் சேர்ந்து ஐரோப்பிய யூனியன் எல்லாம் சேர்ந்து ஸ்பெயினை இரவோடு இரவாக அதன் பொருளாதார பிரச்சனைகளிலிருந்து விடுவித்தார்கள்.

 இலங்கையின் பொருளாதார பிரச்சனையை தீர்க்க இப்போது பல நாடுகள் முன் வருகின்றன. அதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. ஸ்பெயினில் அதை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படை தீர்மானத்திலிருந்த ஸ்பெயினுக்கு பொருளாதார உதவி வழங்கப்பட்டது. இலங்கையில் அப்படி அல்ல, "இறால் போட்டு சுறா பிடிக்கிறது போல." இலங்கைக்கு பல நாடுகள் உதவப் போகின்றன. சர்வதேச நாணய சபை (IMF) உதவப் போகிறது, உலக வங்கி (world bank) உதவப் போகிறது. அமெரிக்கா உதவப் போகிறது. ஜப்பான் உதவப் போகிறது. இந்தியா, சீனா போன்ற நாடுகள் எல்லாமே இலங்கைக்கு உதவப் போகின்றன. இந்த நாடுகள் தங்களுடைய நலன் நோக்கு நிலையில் நின்று கொண்டு தான் இலங்கைக்கு உதவப் போகின்றன.

எனவே இலங்கையின் பிரதான பிரச்சனை என்னவென்றால் முதலாவதாக சொன்னது போல அமெரிக்க அரசியல் என்பது உலகம் பற்றியது. இலங்கையில் தமக்கு தேவையான அரசியல் இலாபத்தை எவ்வாறு தேடுவது என்பது பற்றியது தான். இலங்கைக்கு பணத்தை கொடுத்து இந்த அரசாங்கத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும். ஒரு குறுகிய காலத்திற்கு இவ்வாறு தக்க வைக்க இவர்களால் முடியும். இது முதலாவது பிரச்சனை. இனப்பிரச்சினை அப்படியே பொங்கி எழுந்து வெளியே வரும். அதனை தீர்க்க மாட்டார்கள்.  

இந்த பின்னணியில் இலங்கையினுடைய பிரச்சனையை கைத்தொழில் மயமாக்கம் செய்தோ, விவசாயத்தை நவீன மயப்படுத்தியோ, மீன்பிடி தொழிலை நவீன மயப்படுத்தியோ இலங்கை உள்ளூர் உற்பத்தியை உருவாக்கியோ இவர்கள் தீர்க்க போவதில்லை. மாறாக வெளிநாடுகளில் தங்கள் பண்டங்களை வாங்குவதற்கு கடன் கொடுக்க போகிறார்கள்.  இதன் மூலம் பணத்தை கொடுத்து இலங்கைக்கு தங்களுடைய வர்த்தகத்தையும் தங்களுடைய அரசியல் பிடியையும் பிடிக்க போகிறார்கள்.

இலங்கை தன்னுடைய  இறைமையை எல்லா வழிகளிலும் இழந்தது தமிழ் மக்களை அழித்ததன் மூலம்தான். எல்லா நாடுகளிடத்திலேயும் கை ஏந்தி தன் முழு இறைமையையும் விற்க போகிறது இலங்கை. தன்னுடைய சகோதர இனத்தோடு இலங்கையின் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு ஈழ தமிழர்களும் இலங்கையிலுள்ள ஏனைய இனங்களும் சிங்கள மக்களும் சேர்ந்து இறைமையை பங்கிட்டு வாழ்வதற்கு பதிலாக, அரசியல் அதிகாரத்தை ஒருவருக்கு ஒருவர் பங்களித்து வாழ்வதற்கு பதிலாக இலங்கை இறைமையை முற்றிலும் விற்று வாழ்கின்ற ஒரு அரசியலை இலங்கையின் சிங்கள தலைவர்கள் அரங்கேற்றி விட்டார்கள். இதிலிருந்து மீள முடியாது. எனவே தற்காலிகமாக ஏற்படக்கூடிய பொருளாதார மீட்சி என்பது அந்த அரசை பாதுகாப்பதோடு சம்பந்தப்பட்டது. இறுதியாக ஒரு கட்டத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வு பற்றிய போராட்டம் திரும்பி வரும்.

அமெரிக்காவிற்கு எப்படி அமெரிக்கா எனும் நாடு உலகமாக இருக்கிறதோ அவ்வாறே சீனாவிற்கு சீனா என்ற நாடு என்பது இந்துமா கடலாக இருக்கிறது. சீனாவின் கண்ணோட்டத்தில் இந்துமா கடல் சீனாவின் ஒரு பகுதி. சீனா தெளிவாகச் சொல்கிறது. இலங்கையில் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் கை ஓங்கி இருக்கின்ற நிலையில் சீனா சற்று ஓரடி ஈரடி பின்னே போயிருக்கிறது.  இருந்தாலும் சீனாவினுடைய இறுதி தீர்வு அதனுடைய கட்டமைப்பான அபிவிருத்தி வளர்ச்சி தான். அது இலங்கையோடும் பாகிஸ்தானோடும் பர்மாவோடும் சேர்த்து கடல் ரீதியாக தன்னுடைய கட்டமைப்பை விருத்தி செய்கிறது. எனவே அதிலிருந்து சீனா பின் வாங்கி போய்விட முடியாது. பின் வாங்கினால் இந்தியா சீனாவிற்கு உலகம் இல்லை.

இந்தியாவிற்கு இலங்கையில் ஒரு தளம் தேவையில்லை. ஏனென்றால் 7500 கிலோமீட்டர் நீளமான இந்துமா கடல் கரையோரத்தை கொண்ட இந்தியாவிற்கு இலங்கையில் தளம் தேவையில்லை. மாறாக இந்தியாவிற்கு தேவைப்படுவது என்வென்றால் இலங்கைக்கு எந்தவொரு நாடும் வரக்கூடாது என்பது தான். சீனாவோ அமெரிக்காவோ இலங்கையில் தளம் அமைக்க கூடாதென்பது தான் இந்தியாவின் தேவை. இந்துமாகடல் இல்லாத சீனாவிற்கு தான் இலங்கை தேவை.

இலங்கையை பொறுத்தவரையில் இந்தியா அப்படி அணுகும் என்று தெரிந்திருப்பதனால், இந்தியா எப்பொழுதுமே அனுசரித்துப் போகும் என்று தெரிந்து இருப்பதனால் நெருக்கடி வரும்போது இந்தியாவிடம் இலங்கை காசு வாங்குகிறது. காசு வாங்கிக் கொண்டு நாளைக்கு கையை விடும். இன்றைக்கு இருக்கின்றவர்கள் இன்னுமோர் ஐந்து வருடங்களில் இருப்பார்கள் என்று இல்லை, இன்னுமொரு புதிய அரசாங்கம் வரும். அது இந்தியாவுடன் சுமூக உறவு வைத்திருக்க வேண்டுமென்பது நிபந்தனை கிடையாது. அவர்கள் தங்களது சூழலுக்கு பொருத்தமானவர்களுடன் உறவை வைத்திருப்பார்கள்.

ஆனால், கட்டமைப்பு என்பது பலமானது. சீனா இலங்கையை கட்டமைப்பு வளர்ச்சியூடாக அணுகுகிறது. இந்தியா உதவி செய்து இலங்கையை தன்னுடன் அணைக்கப் பார்க்கிறது. உதவி செய்யும் உறவு ஒரு நிமிடத்தில் அற்று போகலாம். கட்டமைப்பை வெட்ட முடியாது. இந்தவகையில் இன்று இந்தியா வைத்து இருக்கின்ற மென்மையான போக்கை நாளை கைக்கொள்ள முடியாது. இந்தியா விரும்பினாலும் கைக்கொள்ள முடியாது. இனப்பிரச்சினை பூகம்பமாக எரிமலையாக  எழும்பும். அது தீர்க்கப்படாது. ஈழத்தமிழர்கள் பலமான பாரம்பரிய கலாச்சார பின்னணியை கொண்டவர்கள். இந்த பிராந்தியத்தில் தென்னிந்தியாவுடன் சேர்த்து அவர்களுக்கு நீண்ட வரலாறு உண்டு.

இதுவரை நாங்கள் இலங்கையினுடைய பிரச்சினை தீர்க்கப்படாத அடித்தளத்தை கொண்டது என்பதையும், அது அரசியல் பொருளாதார ரீதியாக பொருட்களை வாங்கி விற்கின்ற ஒரு தரகு வர்த்தக நாடாக இருக்கிறது என்பதனையும் நாங்கள் கருத்தில் கொள்வோம். ஆனால் தீவாக இருக்கிற நாடு மீனை இறக்குமதி செய்கிறது எனும் துயரத்தை புரிந்து கொள்வதில் இருந்து இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரத்தை பார்ப்போம். ஈழத்தமிழர்களுடைய மூளை இலங்கையினுடைய அரசை கட்டமைக்க பயன்படவில்லை. ஈழத்தமிழர்கள் இலங்கை அரசிற்கு விசுவாசமாக இல்லை, சம்பளம் பெறுகின்ற உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அது வேற விடயம். ஆனால் இலங்கையை கட்டி வளர்க்க வேண்டும் என்ற பற்று பாசத்தோடு இலங்கை தமிழர்களுடைய மூளை இலங்கை அரசுக்கு உதவவில்லை. உதவவும் மாட்டாது. அந்த சிந்தனையோடு நாங்கள் யாருமில்லை. ஆதலால் ஈழத்தமிழர்களுடைய மூளை வளம் என்பது இலங்கையை கட்டியெழுப்ப போவதில்லை.

இலங்கை சிங்களவர்களுடைய மூளை தமிழர்களை ஓடுக்குவதிலேயே திருப்பப்பட்டிருக்கிறது. எனவே அதுவும் நேர்மறையான பாத்திரத்தை கொள்ளாது. சிங்களவர்களோடு இருக்கின்ற நிபுணர்கள் அறிஞர்கள் எல்லோரும் தமிழர்களை எவ்வாறு ஒடுக்குவது என்பதற்கு தங்களுடைய மூளையை செலவழிக்கின்றார்கள். தமிழ் தரப்பு தம்மை மீட்பதற்கு மூளையை எவ்வாறு பயன்படுத்துவது என்ற சிந்திப்பது குறைவு. அவர்கள் வெளிநாடுகளுக்கு போய் விடுகிறார்கள். அதிலிருந்து தமிழ் தரப்பு தனது மூளையை பயன்படுத்துகிற ஒரு கட்டம் வரும். அது தவிர்க்க முடியாதது. நிச்சயமாக வரும். இதை நான் கற்பனையில் சொல்லவில்லை. இதற்கு ஒரு யதார்த்தம் உண்டு.

சரி இப்படிப்பட்ட இந்த நிலையில் நாங்கள் அரசியல் பொருளாதாரம் பற்றி உள்நாட்டு, சர்வதேசம், பூகோளம் என்ற மூன்று அடுக்குகளிலும் வைத்துப் பார்ப்போம். இப்பொழுது பாருங்கள்.
வெறும் உள்நாட்டு கண்ணோட்டத்தோடு  இலங்கை அரசியலை நீங்கள் பார்த்தால் நிச்சயம் தோல்வியடைவீர்கள்.
இந்தியாவை வைத்து மட்டும் பார்த்தால் தோல்வியடைவீர்கள், அமெரிக்காவை வைத்து மட்டும் பார்த்தால் தோல்வியடைவீர்கள். ஆனால் இந்த மூன்று அடுக்குகளிலும் பார்த்தால் தோல்வியடையமாட்டோம்.

உலக அளவில் முதலாம் உலக மகா யுத்தம் முடிந்த பின்பு லெனின் தன்னுடைய சோஷலிச பொருளாதார கொள்கை தோல்வியடைந்ததை உணர்ந்தார். எனவே புதிய பொருளாதார திட்டம் என்கிற கொள்கைக்கு போனார். அங்கு கலப்பு சந்தை பொருளாதாரத்தை கொண்டு வர முற்பட்டார். புதிய சிந்தனை தேவை என்பதை லெனின் உணர்ந்தார் என்பதை சுட்டிக்காட்டவே நான் இதனை கூறினேன். இந்த 1921ஆம் 22ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு புதிய விழிப்புணர்வு ரஸ்யாவில் ஏற்பட்டது. முக்கியமாக ட்ரொஸ்கி, புக்காரின் என்கின்ற இரண்டு பேர் பொருளாதார கொள்கையை திடமாக முன்வைத்தனர். விரைவான கைத்தொழில் பொருளாதாரம் வேண்டுமென்று அவர்கள் ஆணித்தரமாக முன் வைத்தார்கள். மாறாக ஸ்டாலின் நிலச்சீர்திருத்தத்தையம் விவசாயத்தையும் முதன்மைப்படுத்தினார். அவர் சொன்னது சரி. ஆனாலும் அவற்றை விடவும் முக்கியமானதாக இருந்தது உண்மையிலேயே கைத்தொழில் மயமாக்கம் தான்.

 ட்ரொஸ்கி, புகாரின் இரண்டு பேருமே கொலை செய்யப்பட்டு விட்டார்கள். புகாரின் மரண தண்டனை விதிக்கப்பட்டு ஸ்டாலினால் கொல்லப்பட்டார். ஸ்டாலின் அனுப்பியவரால் ட்ராஸ்கி மெஸ்க்கிக்கோவில் வைத்து கொல்லப்பட்டார். இந்த இரண்டு பெரிய சிந்தனையாளர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள். புரட்சியாளர்களை கொன்றது புரட்சியாளர்கள் தான். இது புரட்சியின் வரலாற்றில் சோகமான ஒரு உண்மை. இது வரலாறு முழுக்க நிகழ்கிறது.

இந்த ட்ரொஸ்கியினுடையதும் புகாரினினுடையதுமான கைத்தொழில்மயமாக்க கொள்கையை தான் டென்ஷியாவோபிங் பின்னர் கையில் எடுத்தார். ட்ரொஸ்கியும், புகாரினும் கொல்லப்பட்ட இடத்தில் ரஸ்யா கைத்தொழில் மயமாக்கத்தில் வீழ்ச்சியடைந்தது. அது சரணாகதி அடைந்தது. அது பனிப்போரில் வீழ்ச்சியடைந்த கதை ஒரு நீளமான சோகம். இந்த காலகட்டத்தில் தான் ரஷ்யாவினுடைய வீழ்ச்சியை கண்ணால் கண்டு கொண்டிருந்த டென்ஷியாவோபிங் அந்த இருவரினது கொள்கைகளையும் கையில் எடுத்தார்.

 ஆனால், இந்த இரண்டு பேரினுடைய பொருளாதார கொள்கையிலும் முக்கியமான வேறுபாடு இருக்கிறது. புகாரினினுடையது உள்நாட்டு தேசிய அளவிலான நவீன கைத்தொழில் மயமாக்கம். ட்ரொஸ்கியினுடையது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கைத்தொழில் மயமாக்கம். இருவர் சொல்லியதிலும் முக்கியமான விடயம் என்னவென்றால் சோசலிச கட்டமைப்பிற்குள்ளே தொழில் மயமாக்கம் என்பது. ஆனால் டென்சியாவோபிங் ஏகாதிபத்திய அமைப்பிற்குள்ளே கைத்தொழில் மயமாக்கம் என்று சொன்னார். இந்த இரண்டு அமைப்புகளும் (system) வேறு வேறு.

இந்தியா ஒத்துழைப்பு பொருளாதாரத்தை (collaboration economy) ஐக் கொண்டு வந்தது. அது இந்திய பிரதமராக இருந்த நரசிம்மராவால் கொண்டு வரப்பட்டது. சீனாவில் 1979ஆம் ஆண்டு உருவாக்கபட்ட திட்டம் சுமாராக 15 வருடங்களின் பின் வளர்ச்சியை கண்ட பொழுது இந்தியா திகைத்து போய் விட்டது.  இந்தியாவில் இருந்தது ஏறக்குறைய மூடிய பொருளாதாரம். அது தேசிய முதலாளித்துவத்தோடு இருந்தது. தேசிய முதலாளித்துவத்தில் இந்தியாவினுடைய கைத்தொழில் உலக கைத்தொழில் பண்டங்களுடன் போட்டியிட கூடிய தன்மையை கொண்டு இருக்கவில்லை. எனவே இந்தியாவை ஒத்துழைப்பு பொருளாதாரத்திற்கு இட்டு சென்றவர் நரசிம்மராவ்தான்.

நான் எப்போழுதும் ஒன்று சொல்வேன். இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் இரண்டு பிரதானமான தூண்கள் உண்டு. ஒன்று, நேருவினுடைய பழைய அணிசாரா கொள்கை என்ற பிழையான கொள்கையினை, பங்களாதேஸ் பிரச்சனையின் போது இந்தியாவை பலம் பொருந்திய தேசமாக உருவாக்குகின்ற மறுபக்கம் கொண்டு சென்றவர் இந்திராகாந்தி. இதன் பின்பு 1970களின் மத்தியில் இந்தியா செய்த உள்நாட்டு தவறுகளை நான் எற்கிறேன் என்பது அர்த்தம் அல்ல. அவருடைய வெளிநாட்டு கொள்கையில் இந்தியாவை மிக ஸ்திரமாக  வழி நடத்தினார். இராணுவ ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் இந்தியாவை ஒரு பலமாக உருவாக்குவதில் 71, ஆம் 72ஆம் ஆண்டு காலத்தில் இந்திராகாந்தியின் பங்களிப்பு அதிகம்.
அதேபோல இந்தியாவினுடைய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் நரசிம்மராவின் பங்களிப்பு பெரிது. இன்று இந்தியா அனுபவிக்கின்ற பொருளாதாரம் நல்லது கெட்டது மேன்மையானது மேன்மையற்றது எல்லாவற்றுக்கும் அப்பால் இந்தியா அனுபவிக்கின்ற இன்றைய பொருளாதாரத்தினுடைய தந்தை உண்மையான அர்த்தத்தில்  நரசிம்மராவ் தான். அவருடைய ஒத்துழைப்பு பொருளாதாரம் தான். இது இரண்டாவது தூண்.

இப்போது சோவியத்தினுடைய வீழ்ச்சிக்கு காரணம் கைத்தொழில் இல்லாமல் போனது. சீனாவினுடைய உலகளாவிய ஏகாதிபத்திய வளர்ச்சிக்கு காரணம் அது கைத்தொழில் மயமாக்கத்திற்கு போனது. இந்தியா தானாக மாற்றத்திற்கு போகவில்லை. அது சீனாவினுடைய வளர்ச்சியினால் அதற்கு நிர்பந்திக்கப்பட்டு இந்தியா இந்த மாற்றத்திற்கு போனது. சரி இப்போது உங்களுக்கு இது பற்றிய ஒரு பார்வை வந்திருக்கும். இதன் பின்பு மிகப்பெரிய ஆசிய நாடுகளான இந்தியாவும், சீனாவும் திறந்த பொருளாதாரம் மற்றும் ஏகாதிபத்தியத்தோடு இணைக்கப்பட்ட கைத்தொழில் மயமாக்கம் என்பவற்றுக்கு போகிறார்கள். பின்பு உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஆசிய ஆபிரிக்க நாடுகள், இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்துமே திறந்த பொருளாதாரம், கைத்தொழில் மயமாக்கம் என்கின்ற கொள்கைக்கு போயின.

1990 களின் மத்தியில் இந்த உலகம் முழுக்க கைத்தொழில் மயமாக்கம்  என்ற கொள்கைக்கு 100 வீதம் வந்து விட்டது. இலங்கை இன்னும் வரவில்லை. இலங்கையை விடவும் பிந்தி வந்த நாடுகள் முன்னுக்கு வந்துவிட்டன. மலேசியா, தாய்வான், ஹொங்கொங் எல்லாம் மிகவும் பிந்திய வரலாறுகளை கொண்டவை. அவர்கள் முன்னுக்கு வந்துள்ளனர். இலங்கை வரவில்லை. இப்படியாக இலங்கையில் சீரழிந்து போகின்ற பொருளாதார கட்டமைப்பில் அவர்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டுக் கடன் என்பது வெளிநாடுகளுடன் ஒரு அனுசரிப்பைச் செய்ய உதவுமே தவிர இலங்கையை அபிவிருத்தி செய்ய உதவாது. இலங்கையை வாழ வைக்க உதவாது.

 இலங்கையில் இன்றைய பாணுக்கும், பருப்புக்கும், எரிவாயுவுக்கும் சண்டை பிடிக்கின்ற இந்த மக்களோடு ஈழத்தமிழர்களை ஒப்பிடுவதா?  30 வருடமா மின்சாரம் இல்லை, எரிபொருள் கிடையாது, எரிவாயு, மண்ணெண்ணெய் கிடையாது. மக்கள் தங்களுடைய சுய சார்பு பொருளாதாரத்தால் தனது சொந்தக்காலில் தங்கி நின்றார்கள். நெல் இருந்தது, கால்நடை இருந்தது, பால் இருந்தது, மீன் இருந்தது, காட்டுலிருந்து பெற்ற உணவு இருந்தது. இந்த மக்களுக்கு குடிக்க ஐஸ்கிறீம் இல்லாமல் இருந்திருக்கலாம், அலங்காரமான ஆடை இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் வாழ்ந்தார்கள். 30 வருட காலமாக வாழ்ந்த இந்த மக்களின் வாழ்க்கையோடு பார்க்கிற பொழுது இந்த மூன்று மாத கால சிங்கள மக்களின் இந்த வாழ்க்கை தமிழர்களின் கண்ணில் ஒரு பொருட்டாக ஒரு போதும் வரப்போவதில்லை. தமிழ் மக்களின் இந்த 30 வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கை என்பது அவர்களுடைய பிரதேசத்தினுடைய சுய சார்பு தன்மை. அவர்களுடைய மனதில் ஊறிப்போய் இருக்கின்ற, அதாவது ஈழத்தமிழர்கள் எப்பொழுதும் எந்த துன்பத்திலும் தலை நிமிர்ந்து நிற்கின்ற ஒரு விடாமுயற்சியுள்ள சளையாத மக்கள் என்கின்ற தன்மை.

இத்தகைய பின்னணியில் இனி, மீளப்போகின்ற இலங்கையின் அமைப்பை மாற்ற (system change) வேண்டும் என்று நாமல் ராஜபக்ச சொல்கிறார். அவர் சொல்லும் அமைப்பு மாற்றம் என்பது என்ன? பொருளாதார முறையை மாற்றுவதற்கு பெயர் தான் அமைப்பு மாற்றம். அவர் சொல்லுவது அதுதான். அவர்கள் இந்த அமைப்பைத் தான் வைத்திருக்க போகிறார்கள். இன்றைய உலக வர்த்தக பொருளாதார அமைப்பைத்தான் வைத்திருக்கப் போகிறார்கள். பிரச்சனை அமைப்பு அல்ல. பிரச்சனையாக இருப்பது கட்டமைப்பு. இங்கே பிரச்சினை அமைப்பு (system) அல்ல கட்டமைப்பு (structure).

உதாரணமாக, அமெரிக்கா என்ற நாடு முதலாளித்துவத்தை அமைப்பு (system) ஆக கொண்டு இருக்கிறது. சமஷ்டி அரசியலமைப்பை (federal constitution) கட்டமைப்பாக (structure) கொண்டிருக்கிறது. அவர்களுடைய அரசியல் கட்டமைப்பு (political structure)  சமஷ்டியாக இருக்கிறது. ஆகவே அமைப்பு வேறு கட்டமைப்பு வேறு. நாமல் சொல்கின்ற அமைப்பு என்னவென்று தெரியாது.

கட்டமைப்பை மாற்ற வேண்டும். இந்த கட்டமைப்பு மாற்றப்படாத நிலையில் ஒரு தீர்வும் கிடைக்க போவதில்லை. ஆதலினால் திரும்பவும் தெளிவான வார்த்தையில் சொல்வதானால், ஈழத்தமிழர்களுடைய அரசியல் பிரச்சனை தீராத வரைக்கும் இலங்கையில் எந்த பொருளாதாரவிருத்தியும் இல்லை. தமிழ் மக்களின் மூளையில் சமாதானம் என்கின்ற ஒரு வார்த்தை எழாத வரைக்கும் அவர்களிடமிருந்து முதலீட்டுக்கும் இலங்கையில் இடமில்லை. வெளிநாடு கடன் கொடுக்கும். முதலீடு செய்யாது. இலங்கையில் இருக்க கூடிய இந்த அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில்  யாரும் துணிந்து முதலீடு செய்ய வர மாட்டார்கள். இது ஒரு ஆழமான பிரச்சனை.

உலகத்தில் ஒரே ஒரு கருத்தியல் தான் இருக்கிறது. இதில் நாடுகளுக்கு இடையில் எல்லை எதுவும் கிடையாது. பனிப்போர் முடிந்ததன் பின்பு திட்டவட்டமாக சந்தை பொருளாதார ஏகாதிபத்திய பொருளாதார முறை தான் உலக ஒழுங்காக இருக்கிறது. இது தான் உலக முழுவதற்குமான கருத்தியல். அமெரிக்காவினதும் இது தான், சீனாவினதும் இது தான், இந்தியாவினதும் இது தான், ரஸ்யாவினதும் இது தான். எனவே உலகத்தில் இந்த கருத்தியலில் வேறுபாடு என்று எந்தவொரு அரசிடமும் கிடையாது.

உலகம் முழுவதுமே ஒரே மாதிரியான கருத்தியலின் கீழ் உள்ளன. அப்படியானால் நாடுகளுக்கு இடையிலான போராட்டங்கள், முரண்பாடுகள் என்ன?  அங்கு ஒரு போட்டி இருக்கிறது. ஒரே கருத்தியலுக்குள் போட்டிகள் இருக்க முடியும். ஒரு சந்தை முறைக்குள் பொருளாதாப் போட்டி நிகழும். ஆனால் அந்த போட்டி பகைமை கொண்டதாக இருக்க போவதில்லை. எல்லா நாடுகளும் ஒரு கருத்தியலைத் தான் கொண்டிருக்கின்றன.


இதற்குள் இலங்கையின் நிலை என்ன? வர்த்தக பொருளாதாரம் தான் அதனுடைய கருத்தியலாக இருக்கிறது. கைத்தொழில் பொருளாதாரம் கிடையாது. விவசாய பொருளாதாரம் தான் இருக்கிறது. அங்கும் நவீன மயமாக்குதல் கிடையாது. இது அவர்களுடைய பொருளாதாரம் பற்றிய அடிப்படை பிரச்சனை. இலங்கையினுடைய ஆட்சியில் இருக்கின்ற அல்லது கல்வி கற்றுக் கொண்டு இருக்கின்ற நிபுணர்கள் மூடிய பொருளாதாரத்திலிருந்தும் வர்த்தக பொருளாதாரத்திலிருந்தும் வெளிவந்தவர்கள் தான். மூடிய பொருளாதாரம் வர்த்தக பொருளாதாரம் என்பவற்றிலிருந்து வந்தவர்களுக்கு உற்பத்தி சார்ந்த ஒரு கைத்தொழில் மயமாக்கல் சிந்தனை வரவில்லை. வர இயலாது. அது கொஞ்ச காலம் எடுக்கும். அதற்கு புரட்சிகரமாக சிந்திக்கிற நல்ல தலைவர்கள் தேவை.


அது ஈழத்தமிழர்களுடைய பிரச்சனையை தீர்க்கின்ற வகையிலான ஒரு புரட்சிகர மாற்றம் ஒன்று சிங்களவர்கள் மத்தியில் வந்தால் தான் சாத்தியம்.  சிங்கள மக்கள் மத்தியில் பெருந் தலைவர் (great leader) கிடையாது. சிறந்த தலைவர் என்று சொல்லக் கூடிய ஒருவரும் கிடையாது. அங்கு தலைவர்கள் சாகசம் செய்வார்கள். எதிரிகளை வீழ்த்துவது தான் அவர்களுடைய சாதனை. அவர்களுக்கு நாட்டை கட்டியெழுப்புவது ஒரு சாதனை இல்லை. சமாதானத்தை உருவாக்குவது அவர்களுக்கு சாதனை இல்லை. மக்களை அழிப்பது தான் அவர்களுடைய சாதனை. இப்படிப்பட்ட சாதனையை கொண்ட தலைமைத்துவத்தையும், அறிவியலையும்,  இராணுவத்தையும், தலைவர்களையும் கொண்ட ஒரு தேசத்தில் இனியும் அமைதி நிலவும் என்கிற வரலாற்று போக்கு கண்ணுக்கு தெரியவில்லை.


இப்படிப்பட்ட நிலையில் இப்போது வரக்கூடிய எந்தவொரு தற்காலிகமான சுமூகநிலையும் ஈழத்தமிழர்களுடைய தீர்க்கப்படாத பிரச்சனை. அதாவது இனி எந்த அரசியல் யாப்பு திருத்தமும் கொண்டு வர மாட்டார்கள். தமிழர்களுக்காக எந்தவித சமஷ்டி ஆட்சியும் கொண்டுவர தயாராக இருக்க மாட்டார்கள். தமிழர்களுக்காக போராட வேண்டிய ஒரு கால கட்டத்தை தமிழர்கள் 100 வீதம் தவற விட்டிருக்கிறார்கள். அதாவது, ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். எமக்கு சமஸ்டி முறை வேண்டும் நாங்கள் இலங்கையை கட்டி எழுப்ப ஒத்துழைப்போம் என்று சொல்லியிருக்க வேண்டும். சமஸ்டி முறையின் கீழ் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று போராடி இருக்க வேண்டும்.


அவ்வாறு செய்யும் பொழுது சிங்கள தலைவர்கள் சிங்கள மக்களை கைது செய்ய முடியாது என்பது போல தமிழ் மக்களை கைது செய்ய முடியாது. ஒரு சிங்கள மகன் கொல்லப்பட்டதற்கு மகா சங்கம் கண்டனம் தெரிவித்து இரங்கல் வெளியிட்டிருக்கிறது. ஒன்றரை இலட்ச மக்கள் கொல்லப்பட்டதற்காக ஒன்றும் செய்யவில்லை. ஆனாலும், இந்த கட்டத்தில் தமிழர்களும் சேர்ந்திருந்தால் மகா சங்கம் அப்படி தமிழர்களை புறக்கணிக்கின்ற நேரடியான நடவடிக்கையில் ஈடுபட்டு கைது செய்கின்ற நடவடிக்கைக்கு ஆதரவளிக்க முடியாது. அது ஒரு வகையில் எங்களுக்கு ஒரு தளத்தை தேடி தந்திருக்கும்.



கைது செய்து சிறைக்கு போவது என்பது அரசியலின் ஒரு அங்கம். எமது தலைவர்கள் கைதிகளாக இருக்க தயாரில்லை. அவர்கள் பணங்களையும் பண்டங்களையும் பேணவும் பாதுகாக்கவும் தான் தயாராக இருக்கிறார்கள். இந்த பின்னணியில் தமிழர்கள் தலைவர்களால் கைவிடப்பட்ட மக்களாக இருக்கிறார்கள். தமிழர்களை கை விட்டது வெளிநாடுகள் மட்டுமல்ல. தமிழ் தலைவர்களும் கை விட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கை மண்ணில் கை விடப்பட்ட மக்களாக இருக்கின்ற தமிழ் மக்களை வெளிநாடுகளும் கை விட்டு விடுகின்றன. இந்த ஒரு விடயத்தை கருத்தில் கொள்ளத் தவறக் கூடாது.



சில மாதங்களில் இந்த கொந்தளிப்பு அது பாரியளவில் இலங்கையினுடைய அரசியலை பெரிதாக குழப்பும். இன்று இருப்பது போல் இருக்காது. தற்செயலாக ஓரடி பின்னால் வைத்திருக்கும் சீனா ஈரடி முன்னால் வைக்க தான் போகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஈழத்தமிழர்கள் போராடி தான் ஆவார்கள். அது இன்னொரு பக்கம் இருக்கட்டும். ஈழத்தமிழர்கள் போராட முந்தியது போல ஈழத்தமிழர்களை இனிமேலும் கொல்ல இயலாது. வரலாற்றின் வளர்ச்சி இடம் கொடுக்காது. ஆனால் கலவரங்கள் வரலாம். அரசு நேரடியாக கொல்லுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாக இருக்கும் அது போராட்டத்தின் வெற்றியாக இருக்கும். எனவே இலங்கை அரசியலில் வரக் கூடிய காலங்களில் இன்று ஒரு சின்ன ஓய்வுநிலை ஏற்பட்டாலும் அது சிங்கள மக்களுக்கு தீர்வாக இருந்தாலும் அது தமிழ் மக்களுக்கு தீர்வாக இருக்க போவதில்லை.


தமிழ் மக்களும் தமிழ் தலைவர்களும் இந்த இடத்தில் வரலாற்று வாய்ப்பை கைவிட்டு விட்டார்கள். தனிப்பட்டவர்களை குறை சொல்லுவதோ குற்றம் சொல்லுவதோ இங்கு நோக்கம் இல்லை. அறிஞர்கள் கூட நிலைமைகளை சரியாக இனங்கண்டு தமிழ் மக்களுக்கு வழிகாட்ட தவறி விட்டார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சிங்கள இன வாத அரசை பாதுகாக்கும் பணியை தான் தமிழ் அரசியல் தலைவர்கள் பெருமளவில் செய்கிறார்கள். தமிழ் மக்களை அவர்கள் கைவிட்டு இருக்கிறார்கள். இந்த போராட்டத்தை முன்னெடுக்க தவறி உள்ளார்கள். இதனால் வரக்கூடிய சோகமான விடயம் ஒன்று நான்கு ஐந்து வருடங்களின் பின்னர் கொடூரமான பக்கங்கள் வரும். ஈழத்தமிழர்களுடைய பிரச்சனை தீர்க்கபடாத வகையில் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கின்ற இந்த காசு இலங்கையின் பொருளாதாரத்தை ஒரு போதும் தூக்கி நிறுத்த மாட்டாது. அது மீண்டும் கிளம்பும். எனவே கொந்தளிப்புக்கான ஒரு வாய்ப்பை மீண்டும் இந்த அரசியல் ஏற்படுத்தும். இலங்கையில் தீர்க்கப்படாத பிரச்சனையின் பின்னணியில் இலங்கை தீவு இரண்டாக உடைவது இறுதியிலும் இறுதியான தீர்வாக போகும்.

 

இலங்கை தீவு இரண்டாக உடைவதற்கு உரிய போக்கை இந்த நெருக்கடி சற்று தாமதப்படுத்தி இருந்தாலும் அதை முடித்து வைக்க மாட்டார்கள். இந்த நெருக்கடியிலிருந்து அது அடுத்த கட்டமாக அது வெடித்து வெளியேறி வரும். இலங்கையின் பிரச்சனைக்கு தீர்வு எந்தவொரு அரசாலும் ஒருபோதும் காண முடியாது. அது நாடு இரண்டாக உடைவது என்பதின் மூலம் மட்டும் தான் இலங்கைக்கு தீர்வு வரும். அது தான் இந்த பிராந்தியத்தில் சமாதானத்தை கொண்டு வரும். உடையும் என்பது என்னுடைய உளவியல் ரீதியான முடிவு கிடையாது அறிவியல் ரீதியான முடிவை தான் சொல்கிறேன். நாம் இலங்கையில் ஒன்றுப்பட்ட மக்களாக இருப்பது எனக்கு மிகுந்த விருப்பம் ஆனால் அதற்கு இடமில்லை எனும் போது நாங்கள் எப்படி ஒன்றுப்பட முடியும்? அந்தவகையில் இலங்கை இரண்டாக உடைவதற்கான ஒரு வரலாற்று போக்கை இன்றைய சின்ன தீர்வு ஏற்படுத்த போவதில்லை. மாறாக இது அடுத்த கட்டத்திற்கு போகும் என்பதையே உய்த்துணரக் கூடியதாக இருக்கிறது.

நிமிர்வு இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை.

https://www.nimirvu.org/2022/08/02.html









ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

"கொழும்புக் கொந்தளிப்பும் ஈழத்தமிழரும் கற்பனையும் யதார்த்தமும் கொள்கை ஆய்வு" - உரை. பாகம் 1.

 ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களால் 24.04.2022  அன்று நடாத்தப்பட்ட "
கொழும்புக் கொந்தளிப்பும் ஈழத்தமிழரும், கற்பனையும் யதார்த்தமும், கொள்கை ஆய்வு" என்கிற உரையாடல் வகுப்பின் முதல் பகுதி இங்கே பிரசுரமாகிறது. (நிமிர்வு இணையதளத்தில் வெளிவந்த கட்டுரை)




24.04.2022

இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி சில மாதங்களில் தீர்ந்து போகலாம். அப்போது சிங்கள மக்களின் பிரச்சினையும் தீர்ந்து போய்விடும். பாணும், பருப்பும், எரிவாயுவும் சந்தைக்கு வந்துவிடும் அப்போது பிரச்சினைகள் அவர்களின் பக்கத்தில் தீர்ந்துவிடும். அவர்களுடைய வாழ்வில் அரசியல் பொருளாதாரப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வும் ஏற்பட்டு போய்விட முடியும். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஏற்படுத்தப்பட்ட  சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்படப் போவது இல்லை. தமிழ் மக்களின் மண்ணில் கட்டப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட விகாரைகள் இல்லாமல் போகப் போவதில்லை. இராணுவம் திரும்ப பெறப்படப் போவதில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகள் எதுவும் தீரப் போவதில்லை.

இந்த பொருளாதார நெருக்கடியில் சிங்கள மக்கள் சில மாதங்களுக்குள் விடுதலை அடைவார்கள். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் நிரந்தரமாக வளரப் போகின்றன. தமிழ் மக்கள் தொடர்ந்து கட்டப்பட்ட விகாரைகளுக்குள்ளும், நிர்மாணிக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்களுக்குள்ளும், இராணுவ மயமாக்கப்பட்ட வாழ்க்கைக்குள்ளும் தான் இருப்பார்கள். இது தொடர்பாக தமிழ் தலைவர்களுக்கும், அறிஞர்களுக்கும் ஒரு கொள்கை ரீதியிலான சரியான பார்வை அவசியம்.

முதலாவதாக, அரசியலை வெறுமனே உள்நாட்டு பரிணாமத்தில் ஒருபோதும் பார்க்கக் கூடாது.   உண்மையில் அது உலகளாவிய கண்ணோட்டத்தோடும் சர்வதேச பார்வையோடும் உள்நாட்டு தேசிய நகர்வோடும் உள்நாட்டில் காணப்படுகின்ற கசப்பான கள யதார்த்தத்துடனும் இணைத்து அதனை பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கப்படாத எந்த ஒரு பார்வையுமே தவறானது. 

முதலாவதாக கருத்தில் கொள்ளவேண்டிய விடயம், இது வெளிநாடுகளின் பொருளாதாரத்தோடு இணைக்கப்பட்ட பிரச்சினை அல்ல. இது உள்நாட்டில் உருவாகி இருக்கின்ற ஒரு பொருளாதார பிரச்சினை. ஒரு தரகு வர்த்தகத்தை பிரதானமாக கொண்டிருக்கக்கூடிய இலங்கையில் இலகுவாக வெளிநாட்டு பணத்தோடு பிரச்சினை தீர்க்கப்பட முடியும். இந்தியா,  சீனா, ஜப்பான், அமெரிக்கா இந்த நான்கு நாடுகளும் இலங்கைக்கு பண உதவி செய்வதாக முன்வந்துள்ளனர். கூடவே உலக வங்கி,  சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பண உதவி செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும் வெளிநாட்டு ரீதியிலானவை. இத்தகைய வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப் பெற்றதும் இலங்கை தன்னை தூக்கி நிறுத்தி விடும். ஆனால் வீழ்ந்த தமிழர்கள் மேலும் மிதிக்கப்படும் நிலையே இருக்கும். இங்கு வெளிநாட்டு ரீதியிலான பரிமாணத்தில் இந்த பிரச்சினை தீர்க்கப்பட போகின்றது.

இலங்கை பிரச்சினையை சர்வதேச மற்றும் உலகளாவிய கண்ணோட்டம் இரண்டிலும் வைத்து பார்க்க வேண்டும். நான் சர்வதேசம் என்றும் உலகளாவிய கண்ணோட்டம் என்றும் இரண்டாக சொற்களை பிரித்து பயன்படுத்துகின்றேன். இந்த வகையில் இன்றைய பிரச்சினையை உள்நாட்டு பரிமாணத்திலும் சர்வதேச பரிமாணத்திலும் அதை கடந்து உலகளாவிய கண்ணோட்டத்திலும் மூன்று படிக்கட்டுகளாக நாம் ஆராய வேண்டும். முதலாவதாக உலகளாவிய கண்ணோட்டத்தை எடுக்கும் போது அமெரிக்கா என்ற ஒரு நாட்டிற்கு அமெரிக்காவினுடைய கண்ணோட்டத்தில் நின்று பார்த்தால் அமெரிக்கா என்பது உலகம். அமெரிக்காவிற்கு முழு உலகமும் அதனுடைய உலக கண்ணோட்டத்திற்கு உரியது. அப்படியே சீனா என்ற ஒரு நாட்டிற்கு முழு உலகமும் சீனாதான். சீனாவிற்கு முழு உலகமும் அதனுடைய  கண்ணோட்டத்திற்கு உரியது.` இதனை தத்துவார்த்த அடிப்படையில் பார்ப்போம். 

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா செயல்படும் தளங்கள் , எல்லைகள்.
அரசியல் என்பது பொருளாதாரம் பற்றிய ஒரு வித்தை. அரசியல் என்பது பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி நிர்ணயிக்கின்ற ஒரு செயற்பாடு. அது ஒரு இயங்கும் தன்மை கொண்டது. எனவே அரசியல் என்பது பொருளாதாரத்தைப் பற்றிய வித்தை அது பொருளாதாரத்தை இயக்கும் ஒரு துறை.
இப்படி பார்க்கையில் அமெரிக்காவின் அரசியல் என்பது உலகளாவிய பொருளாதாரத்தை தன்வயப்படுத்துகின்ற தன்மயப்படுத்துகின்ற அரசியலை கொண்டது. எனவே அமெரிக்காவின் கண்ணோட்டத்தில் அவர்களுக்கு நாடு என்பது முழு உலகமும் தான். முழு உலக பொருளாதாரத்தையும் தன்மயப்படுத்துகின்ற ஒரு அரசியல் தான் அமெரிக்க அரசியல். அதனைத்தான் சீனாவும் இப்பொழுது கையெடுத்து இருக்கின்றது. உலகளாவிய பொருளாதாரத்தை தன்வயப்படுத்தி தமது நலனுக்கு உட்படுத்துகின்ற அரசியலை தான் சீனா செய்கின்றது. 

அதே வேளையில் மூன்றாவது பெரிய நாடான ரஷ்யாவை எடுத்துக்  கொண்டால், அதனுடைய உலகம் என்பது, முதலாவதாக கிழக்கு ஐரோப்பா, இரண்டாவதாக கருங்கடல் பிரதேசமும் மத்தியதரைக் கடல் பிரதேசமும், விளிம்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அதற்கு உலகமாக உள்ளது. இவ்வளவுதான் ரஷ்யாவினுடைய உலகம். 

நான்காவதாக இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் உலகம் என்பது அடிப்படையாக தென்னாசியப் பிராந்தியம் தான். அதனுடைய நீட்சியாக இந்தோ பசுபிக் பிராந்தியம் இருக்கின்றது. ஆனால் அதனுடைய அடித்தளம் இந்தியா என்று எடுத்தால் இந்தியாவினுடைய பிரதானமாக அரசியல் பொருளாதாரம் தென்னாசியாவை சார்ந்தது. இந்தியாவிற்கு தென்னாசியா தான் உலகம். 

அமெரிக்கா என்னும் தேசம் ஒரு ஜனாதிபதியை கொண்டிருக்கிறது. அது முழு தேசத்திற்கும் முழு உலகத்திற்குமான ஒரு தலைவராக ஜனாதிபதியை நியமித்திருக்கிறது. அமெரிக்காவைச் சார்ந்த முழு உலகத்திற்கும் ஆன ஒரு தலைவனாக ஜனாதிபதியை தெரிவு செய்து வைத்திருக்கிறது. அமெரிக்காவின் முதலாவது அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் தான்.

இந்தியாவிற்கு முதலாவது அமைச்சர் பிரதம மந்திரி, இரண்டாவது உள்நாட்டு அமைச்சர். இந்தியா எனும் நாட்டிற்கு முதலாவது அமைச்சர் உள் விவகார அமைச்சர். ஏனென்றால் இந்தியாவிற்கு சாதி பிரச்சனை, சமய பிரச்சனை, இனங்களின் பிரச்சனை, மாநிலங்களின் பிரச்சனை, உள்நாட்டு கல்வி அபிவிருத்தி, உள்நாட்டு சமூக வளர்ச்சி போன்ற பிரச்சினைகள். இவை அனைத்தையும் சேர்த்து உள்நாட்டு அமைச்சு இருக்கின்றது. இந்தியா என்ற தேசத்திற்கு ஒரு நாட்டிற்கு அதனுடைய பிரதான பிரச்சினையாக உள்நாட்டுப் பிரச்சினை தான் இருக்கிறது. எனவே இந்தியாவிற்கு உள்நாட்டு அமைச்சர் முக்கியமானது. 

அமெரிக்காவிற்கு வெளிநாட்டு அமைச்சர் முக்கியமானவர். ஏனென்றால் அமெரிக்கா உலகம் முழுவதிலுமுள்ள பொருளாதாரத்தை தன் வயப்படுத்த விரும்புகிறது. ஆகவே அமெரிக்காவின் முதலாவது அமைச்சர் வெளிநாட்டு அமைச்சர். இந்தியாவினுடைய அமைச்சரவையில் முதலாவது உள்துறை அமைச்சர், இரண்டாவது நிதியமைச்சர், மூன்றாவது பாதுகாப்பு அமைச்சர், நான்காவது தான் வெளிவிவகார அமைச்சர். இப்படி இந்த உலகில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றினதும் தனிப்பட்ட தன்மைகளுக்கேற்ப அவர்கள் வரையறுத்துக் கொண்ட உள்நாட்டு வளர்ச்சி நிலைக்குப் பொருத்தமாக அதனுடைய அமைச்சர்கள் நிர்வாக கட்டமைப்புக்கள் இருக்கும். அவர்களுடைய அரசியல் செயற்பாடுகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதற்கு அமைவாகவே நிகழும். 

இலங்கையில் முதலாவது பதவி ஜனாதிபதியின் உடையது. இரண்டாவது முக்கியமான பதவி பிரதமர் அல்ல. இரண்டாவது முக்கியமான அமைச்சர் பாதுகாப்பு அமைச்சர். பாதுகாப்பு அமைச்சருக்கு பின்தான் பிரதமர். பிரதமருக்கு பாதுகாப்பு அமைச்சு இலங்கையில் கொடுக்கப்பட மாட்டாது.  பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு உரியது என வகுக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அந்த பாதுகாப்பு அமைச்சு இலங்கையில் உள்நாட்டில் இன ஒடுக்குமுறையை செய்வதற்கு தேவைப்படுகிறது. இனங்களை அழிப்பதற்கு தேவைப்படுகிறது. உள்நாட்டு யுத்தத்தை நடத்த தேவைப்படுகிறது. உள்நாட்டு அரச வன்முறைகளை  மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு பிரதானமாக இருக்கின்றது. 

இத்தகைய பின்னணியில் ஒவ்வொரு நாட்டினுடைய அமைச்சரவையும் அதன் உள்ளடக்கத்தோடு அமைக்கப்படுகின்றன. ஆகையால் ஒரு நாட்டை அதன் உள்நாட்டு பரிமாணத்திலும் அதன் சர்வதேச பரிமாணத்திலும் வைத்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையினுடைய இன்றைய பிரச்சினை பற்றி கோட்பாட்டு ரீதியாக, தத்துவரீதியாக, சித்தாந்த ரீதியாக இதுவரை சிங்கள புத்திஜீவிகள் இன்னும் வரையறுக்கவில்லை. இது ஒரு முக்கியமான விடயம். அவர்களுடைய பார்வைக்குள் ஈழத்தமிழ் மக்களை உள்ளடக்கிய வகையில் இந்த பிரச்சனைகளை அவர்கள் பார்க்கவில்லை.


இலங்கையின் இன்றைய பொருளாதார பிரச்சனை

அறிவியல் ரீதியில் நாங்கள் ஒரு விடயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆழ்ந்து அகன்ற பார்வை இருக்க வேண்டும். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சொல்கிறார். "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்று. ஆழ்ந்து அகன்ற பார்வை இருக்க வேண்டும்.   அவர் கூடவே சொல்கிறார் "பொய் ஆயின எல்லாம் போய் அகல” என்று. ஆழ்ந்து அகன்ற பார்வை இருந்தால் பொய்கள் எல்லாம் போய் அகன்று விடும். குறிப்பாக ஈழத் தமிழர்களாகிய நாம் அவ்வாறு ஆழ்ந்து அகன்று பார்க்க வேண்டிய முதலாவது பொறுப்பில் இருக்கிறோம். ஏனென்றால் எங்களுக்குத்தான் உயிர் பாதுகாப்பு, உடமை பாதுகாப்பு, உரிமை பாதுகாப்பு பற்றிய பிரச்சனை. 

இலங்கையினுடைய இன்றைய பொருளாதார பிரச்சனையை எல்லா நாடுகளும் சேர்ந்து தீர்த்து வைக்க போகின்றன. எங்களுடைய பிரச்சனையை ஒருவருமே தீர்ப்பாரில்லை. இந்த வகையில் இந்த பிரச்சினையை ஆழ்ந்து அகன்று நாங்கள் பார்க்க வேண்டும். குறிப்பாக அறிவியல் உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். அலை எழுகிறது, நீர்க்குமிழிகள் தோன்றுகின்றன, சாதாளைகள் அடிபடுகின்றன. நீர்க்குமிழி அறிவியல் எமக்கு வேண்டாம். சாதாளைகளை எண்ணி கணக்கெடுக்கும் சாதாரண அறிவியலும் எமக்கு வேண்டாம். மாறாக அலை எழுவது பற்றிய மூல அறிவு எமக்குத் தேவை. அதனுடைய கோட்பாட்டு உள்ளடக்கம் எமக்கு தேவை. அப்படித்தான் நாம் அரசியலை பார்க்க வேண்டும். 

நீர்ப்பரப்பின் மீது காற்று உராய்வை ஏற்படுத்துகிறது. அது அலையை தோற்றுவிக்கிறது. அந்த காற்று தொடர்ச்சியாக நீர்ப்பரப்பின் மீது உராய்வை ஏற்படுத்துவதனால் அலைகள் கும்பம் கும்பமாக குவியல்களாக அல்லது வரம்பு வரம்பாக எழுகின்றன. அவற்றில் நீர்க்குமிழிகள் தோன்றுகின்றன. ஒரு அலை நீர்க்குமிழியை கொண்டு வர இன்னொரு அலை நீர்க்குமிழியை அழித்து விட்டு போய் விடுகிறது. இந்த நீர்க்குமிழி அறிவியலை மட்டும் நாங்கள் பார்க்காமல் நாங்கள் அடிப்படையில் நீரையும் காற்றையும் காற்றுக்கும் நீருக்கும் இடையில் ஏற்படுகின்ற மோதலையும் அதன்பின் விளைவாய் தோன்றுகின்ற அலைகளையும் அதன் தொடர்ச்சியாக தோன்றுகின்ற அலைகள் மலை போன்று குவிந்து குவிந்து வருவதையும் ஒரு தொடர் அறிவியலுக்குள்ளால் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படித்தான் இலங்கையின் இன்றைய அரசியல் பொருளாதாரப் பிரச்சினையை நாங்கள் பார்க்க வேண்டும்.

முதலாவது உலகளாவிய அரசியல் கண்ணோட்டத்தில் நின்று இந்தப் பிரச்சனையை பார்ப்பதற்கு நாம் தயாராக வேண்டும். இரண்டாவது, இலங்கையில் ஏற்பட்டிருக்கக் கூடிய இன்றைய அரசியல் பொருளாதார பிரச்சினை வெறுமனே ஒரு இராஜபக்ச குடும்பத்தின் தவறுகளில் இருந்தோ  அவர்களுடைய ஊழல்களில் இருந்தோ தோன்றியது அல்ல. இது கடந்த முக்கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட இலங்கையின் பிழையான அரசியல் பொருளாதார கொள்கையில் இருந்து தோன்றியது. அதனால் தான் இதனை கொள்கை ஆய்வு என்று நான் வரையறை செய்து இருக்கிறேன். இந்தக் கொள்கை ஆய்வை இங்கே நாங்கள் திட்ட வட்டமான வரைபடங்களோடு செய்தாக வேண்டும். 

2005 ஆம் ஆண்டு ராஜபக்சக்களுக்கு சிங்களமக்கள் பெருந்தொகையாக ஆதரவளித்தார்கள். 2005ஆம் ஆண்டு இராணுவம் ஆதரவளித்தது. ஊடகங்கள் ஆதரவளித்தன. மகாசங்கம் ஆதரவளித்தது. அறிஞர்கள் ஆதரவளித்தார்கள். எதிர்க்கட்சிகள் ஆதரவளித்தன. வெளிநாடுகள் ஆதரவு அளித்தன. இப்படி அளிக்கப்பட்ட ஒன்று திரட்டப்பட்ட அனைவரது ஆதரவுடனும் யுத்தம் நடந்தது. யுத்தத்தின் மறுபக்கம் தானே இன்றைய பொருளாதார பிரச்சனை. எனவே இவ்வளவு பேரும் இந்த பொருளாதார பிரச்சினையில் பங்காளிகள். இன ஒடுக்குமுறையில் விளைந்த யுத்தத்தில் இவ்வளவு பேரும் தங்களுடைய பங்குகளை மறைப்பதற்கு இன ஒடுக்குமுறையை பற்றி பேச தவறுகிறார்கள். 

எனவே அனைவரினதும் பங்கும் இதில் இருக்கிறது. உள்நாட்டில் உள்ள அனைத்து சக்திகளினதும் பங்கு, உள்நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களினதும் பங்கு, மகா சங்கத்தின் பங்கு, இராணுவத்தின் பங்கு என அனைவரின் பங்கும் இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியும் யுத்தத்தை தெளிவாக  ஆதரித்தது. இப்படி இந்த யுத்தத்திலிருந்து ஒருவரையும் நீங்கள் விடுவித்து பார்க்க முடியாது.

இப்பொழுது ராஜபக்சவை ஊழல் காரணமாக அல்லது பொருளாதார பிரச்சினை காரணமாக வீட்டிற்கு போ என கூறும் அதே மக்கள் தான் ராஜபக்சவை ஆதரித்தார்கள். எனவே அனைத்து மக்களினதும் அனைத்து சக்திகளினதும் இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் திரட்சியினதும் வெளிப்பாடுதான் ராஜபக்சவே தவிர ராஜபக்ச வானத்தில் இருந்து குதித்த ஒரு புதினப் பொருள் கிடையாது. ஒரு புதினப் பொருளாக இதனை பார்ப்பதற்கு பதிலாக அரசியலின் ஒரு விளைபொருளாக நாங்கள் இதனை பார்க்க வேண்டும். 

கடந்த முக்கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட அரசியலின் ஒரு  விளைபொருளாக பார்க்க வேண்டும். அதனை பார்ப்பதற்கு ஈழத்தமிழர்கள் நூறுவீதம் தவறுகிறார்கள். இப்போது இந்த அரசியலில் பங்கெடுக்காமல் இருப்பதன் மூலம் ஈழ தமிழ் மக்களுக்கு ஈழ தமிழ் வாழ் அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் அறிஞர்களும், நிச்சயமாக தீங்கு இழைக்கின்றார்கள். தவறு இழைக்கின்றார்கள் என்று வரலாறு எதிர்காலத்தில் சொல்லும்.

இலங்கையினுடைய அரசியல் கொள்கை என்பது அதன் பொருளாதார கொள்கை

இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனையோடு இணைத்து இந்தப் பொருளாதாரப் பிரச்சனையை பார்ப்பதற்கு ஏதுவாக நான் ஒரு விடயத்தை தொடங்கப் போகிறேன். அரசியல் என்பது பொருளாதாரம் பற்றிய ஒரு வித்தை. இதுதான் முதலாவது கோட்பாடு. பொருளாதாரம் எவ்வாறு இயங்கும் என்பதை நிர்ணயிக்கும் ஒரு இயக்க சக்திதான் அரசியல். இந்த அரசியல் தான் கொள்கை வகுக்கிறது. கொள்கைக்கு உட்பட்டே பொருளாதாரம் இயங்குகிறது, இராணுவம் இயங்குகிறது, பொலிஸ் இயங்குகிறது. இந்தக் கொள்கைக்கு உட்பட்டே அதிகாரிகள் இயங்குகிறார்கள், இந்தக் கொள்கைக்கு உட்பட்டே மக்கள் இயக்கப்படுகின்றார்கள். எனவே கொள்கை முதலாவது. இலங்கையினுடைய அரசியல் கொள்கை என்பது அதன் பொருளாதார கொள்கை இதை நாங்கள் முதலாவதாக கருத்தில் கொள்ள வேண்டும்.

இவற்றைப் புரிந்து கொள்வதற்கு உலகளாவிய அரசியல் பற்றிய அடிப்படை தெளிவாக தெரிய வேண்டிய ஒன்று. அதை நான் இப்போது இலங்கை பற்றி சொல்லிக் கொண்டு வந்து இறுதியாக உலகளாவிய அரசியலோடு இணைக்க போகின்றேன்.
இப்போது இலங்கை உள்நாட்டு அரசியலுக்கு வருவோம். சுதந்திரமடைந்த இலங்கையினுடைய அரசியலில் இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரத்தை நிர்ணயிக்கின்ற சக்திகளாக பலர் இருந்தார்கள். பல சக்திகள் இருந்தன. அறிஞர்கள், மத நிறுவனங்கள், கட்சிகள் இருந்தன. இதில் முதலாவது கட்சிகள் என்று எடுத்தால் ஐக்கிய தேசிய கட்சி இரண்டாவது ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி மூன்றாவது, பொதுஜன பெரமுன அடுத்தது லங்கா சமசமாஜ கட்சி இந்த நான்கு கட்சிகளும் இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரத்தை நிர்ணயித்த பிரதான காரணிகளாக இருந்தன. ஜே. வி. பி தோல்வியடைந்த ஒரு சக்தி. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி என்பவற்றின் அரசியல் பொருளாதாரம் பற்றி நான் பேசப் போவதில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமரான டி. எஸ். சேனநாயக்க, ஒற்றையாட்சியின் கீழ் விவசாயம், வறண்ட வலய குடியேற்றத்திட்டம், அந்நிய செலவாணியை பெறும் பெருந்தோட்ட பயிர்ச்செய்கை என்பவற்றைத் தான் இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரமாக திட்டமிட்டார்.

பின்னாளில் லீ குவான் யூ  ஜெயவர்த்தனவுக்கு கூறிய வசனம் பலருக்கும் தெரியும். அத்தோடு லீ குவான் யூ கூறிய இன்னுமொரு முக்கியமான வசனமும் இருக்கிறது. அது பல பேருக்கு தெரிந்திருக்காது.
ஈழ தமிழர்களுடைய மூளை சிங்கப்பூரையும் மலேசியாவையும் கட்டியெழுப்புவதில் பெரிதும் பயன்பட்டுள்ளது. அதனை நாங்கள் திறமையாக பயன்படுத்தி உள்ளோம். நீங்களும் அவர்களை பயன்படுத்தி இலங்கையை மேலும் உன்னதமான நிலைக்கு கொண்டு வர முடியாததை எண்ணி நான் கவலை அடைகிறேன். அதற்கு காரணம் உங்களின் இனம் சார்ந்த கொள்கை தான் என்று லீ குவான் யூ கூறி இருக்கிறார்.
இங்கு இனப் பிரச்சினை சார்ந்த கொள்கை இலங்கையை சிறப்பாக வடிவமைக்க முடியாமல் போனதற்கான காரணம் உணரப்படுகின்ற ஒரு இடத்தை காண்கின்றோம். ஈழ தமிழர்களின் மூளையை பற்றி புகழ்ச்சியாக நான் சொல்ல வரவே இல்லை. அதை நான் ஒரு பொருளாதார காரணியாக தான் சொல்ல வருகிறேன். 

உலகம் முதலாம் உலகமகா யுத்தத்தின் பின்பு ஒரு கைத்தொழில் மயமாக்கத்தை பற்றி அதிகம் உணரத் தொடங்கியது.  கொம்யூனிஸ்டுகள் உட்பட, ரஷ்யா உட்பட, லெனின் உட்பட கைத்தொழில் மயமாக்கத்தின் தேவையை, அவசியத்தை உணரத் தலைப்பட்டார்கள்.  விவசாயப் பொருளாதாரத்தில் இருந்து மேம்பட்டு கைத்தொழில் பொருளாதாரம் வர வேண்டும் என்கிற சிந்தனை முதலாம் உலகமகா யுத்தத்தின் பின்பு உலகளாவிய ரீதியில் விருத்தியடையத் தொடங்கியது. 

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்பு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட இலங்கை தீவு விவசாய பொருளாதார கொள்கையையும், பெருந்தோட்ட விவசாய கொள்கையையும், இறக்குமதி வர்த்தக பொருளாதாரத்தையுமே அடிப்படையாக கொண்டு வரையறுக்கப்பட்டது. அது கைத்தொழிலை அல்ல. தமிழின ஒடுக்குமுறையை மையமாக கொண்டு குடியேற்றத்தை அடிப்படையாக கொண்டு அமைந்தது. எனவே அதனுடைய  புற்றுநோய் அங்கே உற்பத்தியாகியது. ஒன்று பொருளாதார கொள்கை அதை நிறைவேற்றுவதற்கான அரசியல் கொள்கை. சிங்கள குடியேற்றங்களை தமிழ் மண்ணில் ஸ்தாபிப்பது என்ற பொருளாதார கொள்கையே பிழையானது. 

இந்த காலகட்டத்தில் இலங்கையில் சரியான பொருளாதார கொள்கையை முன்வைத்த ஒரே ஒரு பகுதி இருக்கிறது. அது லங்கா சமசமாஜ கட்சி மட்டும் தான். அது மொஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி கூட இல்லை. லங்கா சமசமாஜ கட்சி ட்ரொஸ்கியினுடைய வாரிசுகள்.  ட்ரொஸ்கி  கைத்தொழிலின் ஊடாக உலகளாவிய ரீதியாக வளர வேண்டும் என்ற கோட்பாட்டை கொண்டிருந்தார். எனவே லங்கா சபசமாஜ கட்சி கைதொழிலை இலங்கையில் பிரதானமாக உருவாக்க வேண்டும் என்றும் குடியேற்றம் இலங்கையில் விவசாயத்தை அபிவிருத்தி செய்ய உதவாது என்றும் சொன்னார்கள். சிங்கள குடியேற்றத்தை இனப்பிரச்சினையின் கண்ணோட்டத்தில் அவர்கள் பார்க்கவில்லை.  ஆனால் சிங்கள குடியேற்றத்தை அது பொருளாதார விருத்திக்கு உதவாது என்ற அடிப்படையில் தான் நிராகரித்தார்கள். இன அடிப்படையில் அல்ல. இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் மட்டும் தான் இலங்கையின் சரியான பொருளாதார கொள்கையை பற்றிய கோட்பாட்டு ரீதியான கருத்தை கொண்டு இருந்தார்கள். பின்னர் 70 களில் அவர்கள் பல தவறுகளை செய்தார்கள் என்பது வேறு விடயம். 

இந்த விவசாய பொருளாதார கொள்கை மிக மோசமான பிரச்சனையாக இருக்கிறது. டி. எஸ். சேனநாயக்கா மலையக மக்களினுடைய வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறித்தார். 1947ஆம் ஆண்டு இலங்கையினுடைய மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈழ தமிழர்களின் மொத்த சனத்தொகையை விடவும் மலையக தமிழரின் சனத்தொகை அதிகமானது. இது பற்றி யாரும் பேசுவதில்லை. வசதியாக எல்லோரும் கை விட்டு செல்கின்றார்கள். ஈழ தமிழர்கள் இலங்கையினுடைய இரண்டாவது பெரிய இனம் என்று சொல்லுகிறோம்.  ஆனால் ஈழ தமிழர்களின் சனத்தொகையின் அளவை விடவும் மலையக தமிழர்களின் சனத்தொகை 47ஆம் ஆண்டு புள்ளி விபரத்தில் அதிகமானது. இந்த மலையக தமிழருடைய குடியுரிமை வாக்குரிமை பறிக்கப்படுகிறது. நாடற்றவர்களாக வைத்திருக்கப்படுகிறார்கள். நாட்டில் உரிமை அற்று  தோட்ட தொழிலாளர்களாக வாழ்கிறார்கள். இந்த கட்டத்தில் மலையக தொழிலாளர்களுடைய கண்ணீரிலும் இரத்தத்திலும் விளைந்த பணம் தான் இலங்கைக்கான அந்நிய செலவாணியை பெற்றுக் கொடுத்தது. இலங்கையரின் விவசாயம் அல்ல.

கடலை ஆதாரமாக கொண்ட பொருளாதாரம் தொடர்பில் இலங்கை ஒருநாளும் யோசிக்கவில்லை. சோகம் என்னவென்றால், ஒரு தீவான இலங்கை வெளிநாடுகளிலிருந்து தகரங்களில் அடைக்கப்பட்ட மீனை இறக்குமதி செய்கிறது. அவர்கள் மீனை மையமாக கொண்ட கைத்தொழிலுக்கு போயிருக்க வேண்டும். விவசாயத்தை மையமான கைத்தொழிலுக்கு போயிருக்க வேண்டும். மீன்களை தகரங்களில் அடைப்பது, விவசாய உற்பத்திகளை பதப்படுத்துவது போன்ற கைதொழில்களை உருவாக்கி இருக்க வேண்டும். முதலாவது விவசாய கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமும் அதனை பின்பற்றி வந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கமும் ஒரே கொள்கையை தான் கொண்டு இருந்தன. தோட்ட தொழிலாளிகளுடைய உழைப்பில் இருந்து தான் இலங்கைக்கு அந்நிய செலவாணி வந்து கொண்டு இருந்தது. அந்த பணம் இலங்கையின் அரசியலில் இரண்டு விதங்களில் பயன்பட்டது. அதனை அரசியல் ரீதியாக சமூகவியல் ரீதியாக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 


முதலாவது அந்த பணத்திலிருந்து தான் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு தேவையான எண்பது வீதமான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதே போல அந்த பணத்திலிருந்து தான் இலங்கையின் பொதுச்சேவை தொழில் செய்யப்பட்டது. இலங்கை ஒரு பொதுச்சேவை தொழில் நாடு. இலங்கையில் இருக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளும் சரி, கல்வி வசதிகளும் சரி, மருத்துவ வசதி போன்ற பொதுச்சேவைகள் எல்லாம் இந்த தோட்ட தொழிலாளிகளினுடைய உழைப்பில் இருந்து தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கல்வியும் பொதுச்சேவையோடு சம்பந்தப்படுகிறது. அந்த கல்வியும் சேவை தொழிலுக்கான கல்வி ஆகிறது. ஒரு உற்பத்திக்கான கல்வி அல்ல. சமூக விருத்திக்கான கல்வி அல்ல. எனவே விவசாய கொள்கை பிழை, இறக்குமதி பொருளாதார கொள்கை பிழை, நாட்டிற்கு வருமானத்தை தேடி கொடுத்த மக்களுக்கு குடியுரிமை இல்லை, வாக்கு உரிமை இல்லை, இருப்பதற்கு வீடு இல்லை, நாடும் இல்லை. இந்த அடித்தளத்தில் தான் இலங்கையின் பொருளாதாரம் கட்டி எழுப்பபட்டது. இது ஒரு பக்கம்.


இரண்டாவது சீமெந்து தொழிற்சாலையை காங்கேசன்துறையில் அமைத்தார்கள். இந்த தொழிற்சாலையிலிருந்து எடுக்கப்பட்ட சீமெந்து இலங்கையின் தென்பகுதியில் கோபுரங்களுக்கு உதவின. வடக்கு சுண்ணக்கல்  குடாநாடு அதல பாதாளமானது. அங்கே அவர்கள் தங்களுடைய தொடர் மாடி கட்டிடங்களையும் நீர்த்தேக்கங்களையும் மதகுகளையும் இங்கிருந்து வந்த வளத்தில் இருந்து கட்டினார்கள். ஏன் சொல்கிறேன் என்றால் மலையக மக்களினுடைய உழைப்பின் இரத்தமும் வடக்கினுடைய சீமெந்தும் வடக்கு கிழக்கில் இருந்த மூல வளங்களும் தான் இலங்கையினுடைய பொருளாதாரத்திற்கு உதவின. 

இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசம் எப்பொழுதும் நெல்லில் தன்னிறைவு, மீனில் தன்னிறைவு, கால்நடையில் தன்னிறைவு என்று இருந்தது. இன்று வரை கிழக்கு மாகாணத்தில் போதிய கால்நடை உண்டு. போதிய பால் உண்டு. கிழக்கு மாகாணம், குறிப்பாக அம்பாறை உணவு களஞ்சியமாக விளங்குகிறது. வடக்கு கொக்கிளாய் கொக்குதொடுவாய் அந்த பகுதிகளிலிருந்து இந்த பக்கம் மன்னார் பருத்தித்துறையான பேதுரு மேடை,கண்ட மேடை, வோட்ச் கண்ட மேடை என எல்லாம் மீன் வளங்கள் நிறைந்த இடங்கள். இங்கிருந்து தெற்கிற்கு மீன் இறால் எல்லாம் போயின. ஏன் யுத்த காலத்தில் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் மன்னாருக்குள்ளால் தெற்கிற்கு இறால், மீன், கடலட்டை போன்ற பொருட்கள்  சென்றடைந்தன. அந்தளவுக்கு யுத்த காலத்தில் கூட நெல்லையும் கடல் உணவுகளையும் தெற்கிற்கு வழங்கியது. இப்படி நிலமை இருக்கிறது. ஆனால் இந்த வடக்கு கிழக்கு மக்கள் கை விடப்பட்டிருக்கிறார்கள். இந்த மக்களினுடைய வாழ்வு ஒடுக்கு முறைக்கு உள்ளாகி இருக்கிறது. இதனை பற்றி சிந்திக்க சிங்கள புத்திஜீவிகளும் யாரும் தயாரில்லை. 


பின்னர் S.W.R.D. பண்டாரநாயக்கா 56 ஆம் ஆண்டு வரும் போது பஞ்சமகா வலவேகு எனும் கோட்பாட்டை கொண்டு வந்தார். பஞ்சமகா வலவேகு என்றால் என்ன, முதலாவது மகாசங்கம் (பிக்குகள்), இரண்டாவது உள்நாட்டு வைத்தியர்கள், மூன்றாவது கல்வி (உள்ளூர் ஆசிரியர்கள்), நான்காவது விவசாயம், ஐந்தாவது கைத்தொழில். கைத்தொழிலில் பண்டாரநாயக்கா காலத்தில் எதுவுமே நிகழவில்லை. மற்ற நான்கை சொன்னாலும் இந்த நான்கிலும் பண்டாரநாயக்கா தோல்வி அடைந்தார். அதாவது, முதலாவதாக எதனை நிறுத்தினாரோ, எந்த பிக்குக்களை முதலாவதாக நிறுத்தினாரோ அந்த பிக்குக்களாலேயே அவர் கொல்லப்பட்டார். முழு அளவில் இன பிரச்சினையை அடிப்படையாக வைத்து கொண்டு பிழையான பொருளாதார கொள்கையையும் இன ஒடுக்கு முறையை தெளிவாக செய்கின்ற ஓர் அரசியலைத் தான் UNP யும் SLFP  யும் முன்னெடுத்தன. எனவே இவர்கள் இரண்டு பேரினுடைய அரசியலும் தோல்வியில் முடிவடைந்தன.


பின்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா சில கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து உள்நாட்டு பொருளாதாரம் பற்றிய கொள்கையில் பயணித்தார்கள். அதில் அவர்கள் கைத்தொழில் பற்றி பேசினார்கள். என். எம்  பெரேரா பொருளாதாரத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர். அவர் ட்ரொஸ்கியவாத அடிப்படையில் கைத்தொழில் பற்றிய சிந்தனையை கொண்டிருந்தவர். ஆனால் வெறும் கை முழமிடாது. அவருடைய காலத்தில் அவர் சொன்ன கைத்தொழிலுக்கு தேவையான மூலதனம், முதலீடு, தொழினுட்பம் இந்த மூன்றும் கிடையாது. அங்கு என். எம்  பெரேராவினுடைய அரசியல் பொருளாதாரம் முழு அளவில் தோல்வி அடைந்தது. அதனால் அவர்கள் முழு அளவில் அரசியலில் இருந்து நிராகரிக்கப்பட்டார்கள். ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவும் அன்றோடு அரசியலில் இருந்து அகற்றப்பட்டு விட்டார். இங்கு தொடர்ச்சியாக சிங்கள அரசியலில் அரசியல் பொருளாதாரம் என்பது விவசாயத்தை அடிப்படையாக கொண்டே இயங்கி கொண்டு வருவதை நீங்கள் காண கூடும்.


இப்போது அடுத்த கட்டத்திற்கு போவோம். இந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து தான் இன்று பொதுஜன பெரமுன எழுந்து இருக்கிறது. அதன் புத்தி ஜீவிகள் அமைப்பு என அதிகாரிகள் இணைந்த அமைப்பாகவும் சொல்லப்படுகின்றது வியத்மக. இது பண்டார நாயக்காவினுடைய பஞ்சபலவேகய கொள்கையினுடைய நீட்சி தான். அங்கு உருவாகிய இன வாத கோட்பாட்டை கொண்ட சிந்தனையாளர்களினுடைய நீட்சி தான் இது. எனவே இவர்களுக்கு இனவாதத்திற்கு வெளியே இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தை சிந்திக்க தெரியாது. இவர்களுக்கு மூடப்பட்ட பொருளாதாரத்திற்கு வெளியே அரசியலை சிந்திக்க தெரியாது. எனவே இலங்கையில் ஒன்று, மூடப்பட்ட பொருளாதாரம், இரண்டு, இனவாத பொருளாதாரம். இந்த இரண்டும் கைத்தொழில் மயமற்ற பொருளாதாரங்கள். மூன்று, அதற்கான அரசியல், நான்கு, நடைமுறை. இவை அனைத்தும் சேர்ந்து இலங்கையின் அரசியலை எப்பொழுதுமே புற்றுநோய் உடையதாக வைத்திருக்கின்றன.


இந்த பின்னணியில் வியத்மக இனவாதத்திற்கு தான் சேவை செய்யும். நாட்டின் அபிவிருத்திக்கு சேவை செய்யாது. இப்பொழுது தெருவில் நின்று சத்தம் போடுகின்ற இந்த போராளிகள், இந்த கிளர்ச்சியாளர்கள் எல்லோரும் நாளைக்கு பாணும், பருப்பும், எரிவாயுவும் வந்தவுடன் வீட்டிற்கு போய் விடுவார்கள். அவர்கள் அதை விட வேறுமாதிரி நினைப்பார்கள் என யாரும் சிந்திப்பது தப்பு. அவர்கள் பழக்கப்பட்ட முறை வேறு. இப்பொழுது தெருவில் குரல் எழுப்புவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆயினும் அது நீடிக்காது. இது ஒரு அடுத்த கட்ட பிரச்சினை.


அப்படி என்றால் இப்போது இலங்கை பிரச்சினை என்ன? இங்கே நாங்கள் தெளிவாக பார்க்க வேண்டிய ஒரு மிகப் பெரிய விம்பம் இருக்கிறது. இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரம் கைத்தொழில் மயமாக்கத்தோடு சம்பந்தப்படாமல் உருவாக்கப்பட முடியாது. மீன்பிடி கடல் வள அபிவிருத்தியோடு சம்பந்தப்படாமல் உருவாக்க முடியாது. விவசாயத்தை நவீனமயப்படுத்தி விவசாய அடிப்படையிலான கைத்தொழிலை உருவாக்காமல் உருவாக முடியாது. எனவே இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரம் பற்றிய ஒரு புதிய பார்வை வேண்டும். இது பொருளாதார பிரச்சனை. இதனை செய்வதற்கு இனப்பிரச்சினை பற்றிய விடயத்தை முதலில் தீர்த்தாக வேண்டும்.


இலங்கையின் ஜனநாயகம் பற்றி பார்ப்போம். டொனமூர் அரசியல் யாப்பின் ஊடாக 1931ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்குமான வாக்குரிமை வழங்க பட்டது. இது ஒரு ஜனநாயகத்திற்கு கிடைத்த பெரு வெற்றி. பிரித்தானியாவில் 26ஆம் ஆண்டு தான் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. சகல பெண்களுக்குமே 26 ஆம் ஆண்டில் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் இலங்கைக்கு 31ஆம் ஆண்டு வாக்குரிமை வழங்கப்பட்டது.  இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்த டொனமூர் அரசியல் யாப்பு என்ன செய்ததென்றால் வாக்குரிமையை இலங்கைக்கு வழங்கி இலங்கையின் ஜனநாயகத்தை விழுங்கி விட்டது. அது ஜனநாயகத்தை விழுங்க கூடியவாறு வடிவமைக்கப்பட்டு விட்டது. இனங்களுக்கு இடையிலான உரிமைகளை ஜனநாயக ரீதியாக தீர்ப்பதற்கான அதனுடைய மண் சார்ந்த பிரதேசம் சார்ந்த ஒரு தீர்வை முன் வைத்திருந்தால் டொனமூர் அரசியல் யாப்பில்  வாக்குரிமை பயனளித்திருக்கும். மாறாக அது  74 வீதமான சிங்கள பௌத்தர்களின் கையில் அரசியல் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டது. இதன் மூலம் இலங்கையில் ஜனநாயகம் எனும் உன்னதமான விடயத்திற்கு பதிலாக இன நாயகம் தோன்றியது. எனவே இலங்கையின் வரலாறு இனநாயகத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.


இந்த இன நாயகத்தின் அடிப்படையில் அரசியல் யாப்பு உருவாக்குவதற்கும் சிங்கள தலைவர்கள் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் ஒரு பின்னணி இருந்தது. அது இந்திய எதிர்ப்பு வாதம். மகாத்மாகாந்தியை 1927ஆம் ஆண்டு யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் வரவேற்றது. இந்திய விடுதலைப் போராட்டத்தை ஈழ தமிழர்கள் இலங்கைக்கு கொண்டு வந்து விட போகிறார்கள் என்ற வெள்ளையர்கள் பார்த்தார்கள். இதன் மூலம் இலங்கையை எதிர்காலத்தில் பிரித்தானியா இழக்க வேண்டி வரப்போகிறது. இந்திய தேச விடுதலை போராட்டம் இலங்கை வரை விஸ்தரித்தால் இந்தியாவின் பகுதியான இலங்கை போன பின்பு இலங்கையில் ஒரு நாளும் தளம் அமைக்க முடியாது. இந்துமா கடலில் இலங்கையை ஒரு நாளும் தமது தேவைக்கு பயன்படுத்த முடியாது என்ற அச்சத்தின் காரணமாகத் தான் டொனமூர் அரசியற் குழுவினர் சிங்கள மக்களுக்கு அரசியல் அதிகாரத்தைக் கொடுத்து, அனைவருக்குமான வாக்குரிமையை வழங்கினர். 74 வீதமான மக்களின் கைகளில் அரசியல் அதிகாரம் போனது. அதை சிங்கள தலைவர்கள் மகிழ்ச்சிச்சியுடன் வரவேற்றார்கள். அன்றிருந்த தமிழ் தலைவர்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை.


இந்த அரசியல் யாப்பினுடைய மாபெரும் தவறுகளில் இருந்து தான் இலங்கையினுடைய இன்றைய அரசியற் கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. நாடாளுமன்ற முறை, தேர்தல் முறை, கெபினட் முறை அதன் பின்பு புதிது புதிதாக ஜனாதிபதி முறை எல்லாம் இந்த கட்டமைப்பில் இருந்து தான். எனவே இலங்கை முழுக்க முழுக்க இனவாத அடிப்படையிலேயே அரசியல் யாப்பு உருவாகிய ஒரு நாடு. இப்போது இலங்கையில் ஒரு விடயத்தை தெளிவாக பார்க்கலாம். இராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்பது மகா சங்கத்தின் தெளிவான முடிவு. இராஜபக்ச குடும்பம் தவறு செய்கிறது என்பது யாவருக்கும் தெரியும். அது ஊழல் நிறைந்தது என்பதும் யாவருக்கும் சந்தேகமின்றி தெரியும். அவர்கள் தேசபக்தர்கள் இல்லை அவர்கள் குடும்ப பக்தர்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர்களை விட்டால் இந்திய எதிர்ப்புக்கும் தமிழின அழிப்புக்கும்  பொருத்தமானவர் இலங்கையில் கிடையாது. வரக்கூடிய எந்த மாற்று சக்திகளாலும் இந்திய எதிர்ப்பு தமிழின அழிப்பு என்ற அடிப்படையில் ஒரு தெளிவான உறுதியான தலைமைத்துவத்தை உருவாக்க முடியாது. 


எனவே இராஜபக்ச குடும்பத்தை அகற்றுவதற்கு அவர்கள் விரும்பவில்லை. அந்த நிலையில் தான் அமெரிக்கா விரும்பிய 19வது சீர்திருத்த சட்டத்தை மீளக் கொண்டு வந்து வெளிநாட்டு நிதிகளை பெற்று இராஜபக்சக்களை காப்பாற்றி இலங்கையை இன்றைய நெருக்கடியிலிருந்து மீட்க வேண்டுமென்பது மகா சங்கத்தின் முடிவு. மகாசங்கம் தெளிவாக யோசித்திருக்கிறது. ஒருவகையில் 20 ஆவது திருத்தத்தை நீக்கினால் சிங்கள மக்களை திருப்தி படுத்தலாம். 19வது ஜே. வி. பி கொண்டு வந்தது, ரணில் சிறிசேனா கொண்டு வந்தது. அதை மீளக் கொண்டு வந்து விட்டால் ஒரு மாற்றத்தை கொண்டு வரலாம். ஆனால் கோத்தாபய ராஜாபக்ச பதவியில் இருப்பதற்கு தான் அந்த செயற்பாடு. இந்த ஏற்பாட்டின் கீழ் அவர்கள் 19வது சீர்திருத்தத்தை பற்றி சொல்கிறார்கள். அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று சொல்கிறார்கள். அதனை 21வது சட்ட திருத்தமாக கொண்டு வருவோம் என்று சொல்கிறார்கள்.


இதைவிட இன்னொன்றும் முக்கியம் இலங்கையினுடைய அரசியல் யாப்பு கமிஷன் தலைவராக இருந்த ரொமேஷ் டி. சில்வா 44 A என்கின்ற உள்ளீடை கொண்டு வர வேண்டுமென்று சொல்லி இருந்தார். அரசியல் யாப்பிலே 44வது சரத்திற்கு மாற்றம் கொண்டு வருவோம் என்று சொல்லி இருந்தார். பொருளாதாரப் பிரச்சினைக்கு அரசியல் யாப்பில் ஒரு மாற்றம் கொண்டு வந்து நாடாளுமன்றில் நான்கில் மூன்று பெரும்பான்மை வாக்குக்களோடு 44A கொண்டு வருவோம் என்று சொன்ன அந்த அரசியல் யாப்பின் நிபுணர் குழுவின் தலைவர் தமிழரது பிரச்சினைக்கும் சமஸ்டி ரீதியிலான தீர்வை கொண்டு வந்து அதையும் ஒரு சரத்தாக இணைப்போம் என்று சொல்லவில்லை. இந்த சரத்தை கொண்டு வரலாம் என்றால் அந்த சரத்தை ஏன் கொண்டு வர முடியாது? அவர்கள் தமிழருக்கு உரிமைகள் வழங்குவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இன்று குறைந்தபட்சம் சமஸ்டியை மூன்று கட்சிகள் கேட்கின்றன. “நான் சமஸ்டியை உள்ளடக்கவில்லை. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கட்சிகளும் அதை சொல்கின்றன. அந்த ஜனநாயக ரீதியிலான மக்களின் நடவடிக்கை எதிர்ப்பதற்கு நான் யார்? ஆகவே அதனை உள்ளடக்குகிறேன்.” என்று சொல்லி ஒரு தீர்வை முன்வைக்கலாம் தானே. 


ஆனால், இந்த பாண், அரிசி, பருப்பு, சமையல் எரிவாயு பிரச்சனையை தீர்ப்பதற்கு இன்றைய அரசியல் யாப்பிற்கு சீர்திருத்தத்தை செய்வதற்கு மகா சங்கம் ஓடி வருகிறது. சங்க கட்டளை பிறப்பிப்பேன் என்று கூட சொல்கிறது. சங்க கட்டளை என்பது பலருக்கு தெரிந்திருக்காது. அது மோசமான ஒரு விடயம்.  சங்கம் என்பது பிக்குகளை அதாவது பௌத்த துறவிகளை சங்கம் என்று சொல்வது. சங்கத்தோடு சேர்ந்து அவர்கள் பௌத்த சாசனத்தின் அடிப்படையில் கட்டளை பிறப்பிப்பார்கள். அந்த கட்டளை இறுதியிலும் இறுதியானது. அதை யாரும் கேலிக்குள்ளாக்க முடியாது. எனவே சங்க கட்டளையின் படி ஆட்சி இருக்கும். கோத்தாபய வீட்டிற்கு போக வேண்டும் என்று சங்கம் கட்டளை இட்டால் அது தான் நடக்கும். அது சட்டப்படி அல்ல, நடைமுறைப்படி. அப்படி சங்க கட்டளை பிறப்பிக்க போகிறோம் என்று சொல்கின்ற மகா சங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுக்கு சங்க கட்டளை பிறப்பிப்பதாக சொல்லலாம் தானே. சொல்ல மாட்டார்கள். 


https://www.nimirvu.org/2022/08/blog-post_23.html

அதிகம் பார்க்கப்பட்டவை: